Thursday, March 20, 2014

பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப் படுவீர்கள்!



அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல்களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். "நீங்கள் இஸ்லாமியனாக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட்” இப்படி தான் இங்கு காவல்துறை செயல்படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் ஒருவர் தெக‌ல்கா இணையதளத்திற்கு வழங்கிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.

UAPA என்றழைக்கப்படுகிற‌ “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” (Un lawful Activitiess Prevention Act, 1967) கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி அன்று, பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில், விரிவான விவாதங்களை அனுமதிக்காமல், 3- ஆவது முறையாக திருத்தியுள்ளது மத்திய அரசு. சட்டம் இயற்றப்பட்டது 1967ல் தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் மட்டுமே , மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசின் சட்டப்பூர்வ பயங்கரவாத சாதனை. இச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டமாகும்.


முதல் திருத்தம் , 2004 ஆம் ஆண்டு. தடா, பொடா ஆகிய கருப்புச் ச‌ட்டங்களில் இருந்த கொடும் பிரிவுகள், யு.ஏ.பி.ஏ - வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன, பிறகு தடா, பொடா சட்டங்கள் நீக்கப்பட்டது அரசின் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது நாட்டில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள‌ன‌. சுருக்கமாகக் கூறினால், 2004ல் தேர்தலில் வெற்றி பெற, "பொடாவை ரத்து செய்வோம்" என வாக்குறுதியளித்த காங்கிரசு கட்சி, ஆட்சியமைத்தவுடன், பொடாவை ரத்து செய்து, யு.ஏ.பி.ஏ என்ற பெயரில் மீண்டும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது.

கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக ஒருவர் முணுமுணுத்தாலே காவல்துறை அவர்களை கைது செய்ய‌லாம் என்கிற அளவுக்கு மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவது, அரச பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமிதம் கொள்வோம்.




யுஏபிஏ சட்ட விதிகள்:

* 'பொடா' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில் வைத்து கொடுமைப்ப‌டுத்த‌ முடியும்.

* பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ அல்லது வேறு ஏதேனும் தடயங்களோ இருந்தாலும் கூட, அவரை குற்றவாளி என காவல்துறை கருதி, கைது செய்ய முடியும். மேலும் தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.

* ஒரு புல‌னாய்வுக்கு தொட‌ர்புடைய‌து என‌க்க‌ருதி காவ‌ல்துறை விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண்டும். இல்லையேல் இச்சட்டப்படி, தகவல் தர மறுப்பவரை கைது செய்ய முடியும்.

* தொலைபேசி உரையாட‌ல்களை இடைமறித்து கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவ‌ரைக் கைது செய்ய‌ காவ‌ல்துறைக்கு எல்லைய‌ற்ற‌ அதிகார‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.

* குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், அவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்/இருக்கலாம் என்று குற்றம் சாட்டி, யாரை வேண்டுமானாலும் காவ‌ல்துறை கைது செய்ய‌லாம்.


இந்திய‌ அர‌சிய‌லைப்புச் ச‌ட்ட‌ம் வ‌குத்துள்ள‌ அடிப்ப‌டை ம‌னித‌ உரிமைகளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ அட‌க்குமுறைச் ச‌ட்ட‌ங்க‌ளின் மூல‌ம் சிறுபான்மையினரும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும், ப‌ழ‌ங்குடியின‌ருமே கைது செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். 2007 ஆம் ஆண்டுக்கு பிற‌கு நூற்றுக்க‌ண‌க்கான‌ கைது ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருக்கின்ற‌ன‌.

மகாராஷ்டிரா மாநில‌த்தில், நாக்பூரில் 'தீக்சா' என்னுமிட‌த்தில் தான் அம்பேத்க‌ர், ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ த‌லித்துக‌ளோடு புத்த‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். இந்தியாவின் ப‌ல‌ பகுதிகளில் வாழும் த‌லித் மக்கள், வருடம் முழுமையும் திக்சாவிற்கு பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில், திக்சாவிற்கு செல்லத் திட்டமிட்டு, மஹாராஷ்டிரா விரைவு ரயிலில் ஏறிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கார‌ண‌ம் பெரிதாக‌ ஒன்றுமில்லை. அந்நால்வ‌ரில் ஒருவ‌ரான‌ அனில் ம‌மானே ஒரு த‌லித் எழுத்தாள‌ர். அவ‌ரிட‌மிருந்தது க‌ய‌ர்லாஞ்சி ப‌ற்றி அவ‌ரே எழுதிய‌ ஒரு புத்த‌கம் இருந்தது, அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்புரை செய்து வந்த‌ அவ‌ர‌து மாண‌வ‌ரான‌ தின்க‌ர் கைது செய்யப்பட்ட இரண்டாம் நபர்., இதில் வேடிக்கை என்னவென்றால் கைது செய்யப்பட்ட ம‌ற்ற‌ இருவ‌ரும் , இவ‌ர்க‌ளுக்கு துளியும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வ‌ர்கள், அவர்கள் செய்த ஒரே குற்றம் அந்த பெட்டியில் பயணம் செய்தது. இவ‌ர்க‌ளெல்லாம் ந‌க்ச‌ல் இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த‌ காவ‌ல்துறை இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட கேள்வி, "அம்பேத்க‌ரிய‌வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னுமொரு 1857 ஐ உருவாக்க‌ப் பார்க்கிறீர்க‌ளா? " . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, “இன்னொரு அம்பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா?” என்று அடித்தது காவல்துறை. இந்துத்துவத்தின் கொடிய கரங்கள் அரச இயந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரும், தலித், பழங்குடி மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.


இதே போல ச‌ந்திராப்பூர் என்ற‌ ஊரில் மாணவர்களுக்கு ப‌க‌த் சிங், ஜோதிபா பூலேவைப் ப‌ற்றி பாட‌ம் எடுத்த‌த‌ற்காக‌ ப‌த்து மாண‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். கைது செய்யப்பட்டதற்கான கார‌ண‌ம் பக்த் சிங் பற்றி பாடம் எடுப்பதன் மூல‌ம் இவ‌ர்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுக்கின்றார்க‌ள் என்ற‌து காவ‌ல்துறை, அதாவ‌து ப‌க‌த்சிங் ச‌மூக‌த்தில் ந‌டைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதத்தை (அன்றைய சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்) பயன்படுத்தினார், ப‌க‌த்சிங்கை ப‌டித்து அவ‌ர‌து கொள்கைக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு ஏற்ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் தாங்கிய‌ புர‌ட்சியை நோக்கி செல்வார்க‌ள் என்கிற‌து காவ‌ல்துறை. இப்ப‌டியாக‌த் தான் ப‌க‌த்சிங்கும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறார். சமூகப்போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டதும் இதே யு.ஏ.பி.ஏ சட்டத்தின் வாயிலாகத் தான்.

பினாய‌க் சென் ஒரு மாவோயிசுட்டு ஆத‌ரவாள‌ர் என்ப‌த‌ற்கு காவ‌ல்துறை பினாயக் சென் வீட்டில் இருந்து கைப்பற்றிய(!) கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் ஆதார‌மாக‌ காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசத்துரோகி என‌க் கூறி ஆயுட்கால‌ சிறைத் த‌ண்ட‌னை வழங்கியது நீதிமன்றம்.

பெங்க‌ளூர் ம‌ல்லேஸ்வ‌ர‌ம் குண்டு வெடிப்பில், த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌தும் இதே யுஏபிஏ சட்டத்தின் மூலமாகத் தான். அப்துல் நாசர் மதானி, கர்நாடக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் எந்த வித விசாரணையுமின்றி, குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணமும் யுஏபிஏ தான். கர்நாடக நீதிமன்றம், யுஏபிஏ அடிப்படையாகக் கொண்டே மதானிக்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்து வருகிறது. அதே நேரம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்தோ மூன்றாம் முறையாக பிணையில் வெளிவந்து படங்களில் நடித்து வருகின்றார். ஒருபுறம் ஒன்பது ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் பிணை மறுக்கப்படும் மதானி , மறுபுறம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் தொடர்ந்து பிணை வழங்கப்படும் சஞ்சய் தத். இப்படி தான் இங்கே நீதி (!) இருக்கின்றது.

மக்கள் விரோத அரசுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் "பயங்கரவாத, தேசவிரோத, தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான" நடவடிக்கைகளாக அடையாளப்படுத்துதலே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் நோக்கமாக‌ இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கிலும், கஷ்மீரிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தின் மூலம் (AFSPA) இந்திய இராணுவம் அம்மக்களை தெருநாய்களைப் போல சுட்டுக் கொள்வதையும், பெண்களை பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்குவதையும் பொழுதுபோக்காகச் செய்து வருகிறது. அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பதினோரு ஆண்டுகளாக உணவை மறுத்து போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா.

மக்களின் சமூக, பொருளியல், வாழ்வாதார‌ பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வைக் காணாமல், அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் தீர்வு காண எத்தனிக்கும் ஆளும் அரசுகளை போராடித் தான் பணிய வைக்க வேண்டும். தடா, பொடா, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வடைந்திருக்கும் நாம், யுஏபிஏ போன்ற சட்டங்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இத்தகைய அடக்குமுறை சட்டங்களை முறியடிக்க, தொடர் பரப்புரைகளும், கருத்தரங்குகளும் அதையொட்டிய மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்




தரவுகள்:

1. http://www.tehelka.com/a-deadly-cannon-has-loaded-more-fire-power/

2. http://www.thoothuonline.com/

3. http://www.thehindu.com/opinion/editorial/rethink-the-new-uapa/article4218425.ece

4. http://en.wikipedia.org/wiki/Unlawful_Activities_(Prevention)_Act

5. http://popularfrontnellaiwest.blogspot.in/2013/06/uapa.html

6. http://www.tehelka.com/bhagat-singh-and-ambedkar-are-no-longer-national-icons-you-can-be-arrested-for-reading-them/

2 comments:

  1. // சட்டம் இயற்றப்பட்டது 1967ல் தான் என்றாலும்,//

    இந்தியா சுதந்திரம் அடைந்த, சில ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்ட, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் குறித்தும் இன்னும் விரிவாக எழுதவும். அடிப்படை மனித உரிமைகளை முழுமையாக மறுக்கும் AFSPA போன்று, உலகின் எந்நாட்டிலும் இப்படியொரு கருப்புச்சட்டம் உருவாக்கப்பட்டதில்லை. உலகின் சர்வாதிகார நாடுகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது இந்திய சனநாயகம்.

    ReplyDelete


  2. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்(AFSPA) குறித்து சமூகத்தில் போதிய அளவிலான விழிப்புணர்வு இருக்கின்றது, ஆனால் UAPA குறித்து அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் முதல் கட்டுரையாக எழுதியிருக்கின்றோம். உங்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்(AFSPA) குறித்தும் எழுதுகின்றோம்.

    ReplyDelete