Monday, March 17, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 6





நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன.


காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டணி எதுவும் அமையாத நிலையில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் பின்வாங்கி வரும் செய்தியை நம்முடைய நாளிதழ்கள் தாங்கி வருவது தொடர்கிறது.


எளிய மக்களின் கட்சியாக தம்மை அறிவித்துக் கொண்டு இயங்கி வரும் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி நாடு முழுக்க வேட்பாளர்களை களமிறக்க முயன்று வருகிறது.

பெங்களூரில் நடைபெறும் பிரச்சாரத்திற்கு வரும் அதன் தலைவர் கேஜ்ரிவாலுடன் இரவு விருந்து நடத்தி தேர்தல் நிதி திரட்டுகிறார்கள். இந்த சாமானிய விருந்தின் விலை வெறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே(!). மோடியுடனான இரவு விருந்துக்கான விலையான 25 லட்சத்தை ஒப்பிடும் போது, அரவிந்த் கேஜ்ரிவால் சாமானியரே.


இந்திய அளவில் காங்கிரசிற்கு மாற்றாக தங்களை கூறிக் கொள்ளும் பா.ஜ.க அறிவித்துள்ள மூன்று கட்ட வேட்பாளர் பட்டியல்களில் இன்னும் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, மூத்த தலைவரான அத்வானி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் இல்லை. அத்வானி மணி கட்டிய பூனையை இன்னும் நாக்பூர் நாட்டாமையால் பிடிக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.


அத்வானிக்கு ஆதரவான நிலையை எடுப்பதா? அல்லது இந்த தேர்தலில் நாம் முன்னிறுத்தியுள்ள மோடியை ஆதரிப்பதா என்று தெரியாமல் நாட்டாமையான சங்பரிவாரும் குழம்பித்தான் போயுள்ளது. பெங்களூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத், “ நாம் ஒரு சமூக அமைப்பு, மோடி என்ற தனிநபரை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை; காங்கிரசின் மோசடிகளையும், சமூகத்தின் தேவை முன்வைதாலே போதுமானது” என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்வானிக்கு ஆதரவாக மோடியை பணிய வைக்கக் கூட இப்படி பேசியிருக்கலாம், இத்தகைய நாடகங்களை பலமுறை நடத்தியுள்ளன சங்பரிவார அமைப்புகள்.


இந்திய அளவில் தேர்தல் அரசியலின் காட்சிகள் இப்படி அரங்கேறிக் கொண்டிருக்க, தமிழகத்தில் இந்த முறை தேர்தல் கூட்டணியிலேயே பெருத்த மாறுதல்கள் உருவாகியுள்ளன.


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசியல் சூழல் கருதி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.-வும், அ.தி.மு.க-வும் இந்திய கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திற்கான தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பதில் ஈடுபட்டிருந்தது பா.ஜ.க. இந்த கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, கொங்கு நாடு மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. விவேகானந்தரைப் படியுங்கள் என்றும், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இருக்க முடிந்த ஒரே மதம் இந்து மதம் தான் என்று அவ்வப்போது பேசிவந்த தமிழருவி மணியன் தான் இந்த அணிக்கான முன்முயற்சிகளை எடுத்து தன்னுடைய கதர் ஆடையில் நிரந்தரமாகக் காவியைப் பூசிக் கொண்டுள்ளார்.


பா.ம.க-வின் சாதி அரசியலுக்கும், பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தே.மு.தி.க-விற்கு பெரிய அளவில் கொள்கை இருப்பதாக நாம் நம்புவதற்கில்லை. அதனால் இவர்கள் இந்த அணியில் இணைந்ததில் வியக்க ஏதுமில்லை.



பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு இலங்கை அதிபரும், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே வந்த போது, சாஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியதோடு, “காந்தியைக் கொன்ற கோட்சே கும்பல்தானே ?!” என்று விமர்சித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வும் பா.ஜ.க அணியில் இருப்பதும், இதற்கு முன்னரும் இருந்ததுதான் ஓட்டு அரசியலின் அருவறுப்பான உண்மை முகம். பெரியார் வழிவந்தவர்களின் கறுப்புத் துண்டு காவிக்கொடி மரத்தில் கட்டப்பட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது.


இவர்கள் காங்கிரசு மாற்றாக பா.ஜ.க-வை நிறுத்துவது என்பது தற்கொலைக்குச் சமானம். மோடி அலை என்றும், மோடி அலையால் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி தமிழகத்தில் பதினைந்து விழுக்காடாக உயர்ந்திருப்பதாக இவர்கள் சொல்வதும் வடிகட்டிய பொய்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ஒரு இந்தியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டுள்ளதே தவிர, கூட்டணிக்குத் தலைமை தாங்கியதில்லை.


இன்று மோடி அலையை முன்னிறுத்தி ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ள தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகளின் நிலை எப்படி இருந்தது தெரியுமா?


1940 ஆம் ஆண்டு சேலத்தில் இந்து மகா சபையை தோற்றுவித்தவர்களில் ஒருவரான வீரசாவர்க்கர் பேசும் நிகழ்வு ஒன்று திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வுக்கான பார்வையாளர் கட்டணம் அப்போதைய நாலு அணா. நிகழ்வு நடைபெறவேண்டிய நாள் 23-3-1940. வீரசவர்க்கரும் சேலம் வந்து சேர்ந்துவிட்டார் ஆனால் கூட்டம் வரவில்லை. பின்னர் அனுமதிக் கட்டணம் இரண்டு அணா-வாகக் குறைக்கப்பட்டது.அப்போதும் கூட்டம் வராததால் காலி மைதானத்தில் பேசிவிட்டுப் போனார் வீரசாவர்க்கர். இது பெரியாரின் அன்றைய குடியரசு நாளேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று ஆர்.எஸ்.எஸ்-சின் அடிவருடியான மோடிக்கு வருவதாக சொல்லப்படும் கூட்டத்திற்காக ஒரு கூட்டணி உருவாகியிருப்பது தமிழக அரசியல் தவறான பாதையில் தொடர்ந்து அடியெடுத்து வைப்பதையே காட்டுகிறது.


சங்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் போன்றவை தமிழகத்தில் கால்பதிக்கும் முயற்சி 1970-களில் கன்னியாகுமரியில் உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைப்பதில் இருந்து தொடங்கியது. அப்படியிருந்தும் அவர்களால் தமிழ்நாட்டில் எண்ணியது போல் நிலைத்துநிற்க முடியவில்லை.



1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இசுலாமிய மதத்திற்கு மாறினர். அப்போது அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் “பெட்ரோ-டாலர்” பணமே மதமாற்றத்திற்குக் காரணம் என்று போலிப் பரப்புரை செய்து, தங்களுடைய அமைப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டன சங்பரிவாரங்கள்.


இந்த முறை ஒரு முக்கிய வேறுபாடாக தமிழ் முலாம் பூசி “இந்து முன்னணி” என்ற தமிழ் பெயரோடு பரப்புரை செய்துள்ளனர்.


இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மாவட்டம்தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டன. மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றியும், சிறுபான்மையினரின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் மேடைகள்தோறும் பேசப்பட்டது.


நாகர்கோவிலில் நடைபெற்ற இந்து எழுச்சி மாநாட்டில் கன்னியாகுமரி கிறித்துவர்களுக்கு எதிரான உரைகள் நிகழ்த்தப்பட்டு பதட்டமான சூழல் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, கிறித்துவ தேவாலய வாசலில் ஒலிபெருக்கி வைத்ததை ஊதிப் பெரிதாக்கி மதக்கலவரத்தை தூண்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ்.


2009- ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, கன்னியாகுமரி (2,54,474 வாக்குகள் - இரண்டாவது இடம் ) மற்றும் ராமநாதபுரம் (1,28,322 வாக்குகள் - மூன்றாவது இடம்) பெற்ற கணிசமான வாக்குகளை நாம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.


இந்துத்துவ அமைப்புகள் மத ஊர்வலங்களையும், யாத்திரைகளையும் இந்துக்களை திரட்டுவ‌தற்கும், கலவரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தின.


தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்ட இந்து முன்னணி, இந்துக்களை ஒன்று திரட்ட மகாராஷ்டிரத்தின் உற்பத்தியான பிள்ளையார் ஊர்வலத்தை இறக்குமதி செய்தது.


மகாராஷ்டிர மாநிலத்தில் 1894-ல் பார்ப்பனர்களைத் தவிர்த்த இந்துக்கள் இசுலாமியர்களின் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்பதைத் தடுக்கவும், இந்து என்ற மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டவும் தான் விநாயகர் ஊர்வலங்கள் திலகரால் தொடங்கப்பட்டன.


1894 ஆம் ஆண்டு பூனாவிலும், 1895 ஆம் ஆண்டு துலியா என்று ஊரிலும் மதக்கலவரம் ஏற்பட்டது. இதே நோக்கத்திற்காகத்தான் பிள்ளையார் ஊர்வலம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1993-ல் இந்து முன்னணியால் சென்னையில் பிள்ளையார் ஊர்வலம் நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி மசூதி தெருவில் சென்ற போது, ஊர்வலத்தினர் வகுப்புவாத முழக்கங்களை எழுப்பி, கற்களையும், செருப்புகளையும் மசூதிக்குள் வீசி எறிந்து கலவரத்திற்கு வித்திட்டனர்.


இதே போன்று இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்புகள் கோவையில் மத மோதல்களை ஊக்குவித்து வருகின்றன. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு தொடக்கப் புள்ளி இந்த அமைப்புகள் நடத்திய ஊர்வலங்களும், மோதல்களும்தான்.

2008-ல் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலுகத்தில் சங்க்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்களே குண்டுவைத்ததும், பிரபலம் அடைவதற்காக தன்னுடைய வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினரையும் நாம் பார்த்திருக்கிறோம்.இப்படி இதை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்றில்லாமல் கிடைத்ததில் அனைத்திலும் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் இந்த காவிக் கும்பல்.



இந்திய அளவில் பிரச்சினைகளை ஊதிப் பெரிதுப்படுத்த இவர்கள் நினைக்கும் போது கையில் எடுக்கும் வழிமுறைதான் ரத யாத்திரைகள். பெயர் மட்டுமே ரதயாத்திரை காவு கொண்ட உயிர்களோ ஏராளம்.


1983-ல் விஷ்வ ஹிந்து பரிஷத் முதன்முதலில் யாத்திரையை நடத்தியது. அதைத் தொடர்ந்து 1990-ல் சோம்நாத் கோவிலில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார் அத்வானி. 1991-ல் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை போவாதாக ரதத்தில் ஏறியது முரளி மனோகர் ஜோஷி. இந்த இரண்டு யாத்திரைகளையும் ஒருங்கிணைத்து நடத்திக் காட்டியவர் தற்போதைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரச்சாரம் மட்டுமல்ல, ரதயாத்திரைகள் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தவாறே படுகொலைகளை(2002) நிகழ்த்த முடியும் என்று நவீனப்படுத்தியவர் தான் இந்த நீரோ.


பாரதீய ஜனதாவோடு தற்போது கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கங்களின் தொய்வும், கூட்டணி அரசியலும் தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.


1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டு ஆணையக் கூட்டத்தில் பேசிய அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு ஒத்தகருத்தியல் பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி அமைத்தார். இன்றும் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜெயலலிதா போவதும், ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவைக் கண்டுகளிக்க மோடி தமிழகம் வருவதும் நாம் கண்ட கட்சிகளே.


1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தி.மு.க-வும், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமைந்த வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியில் பங்கேற்ற தி.மு.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க 2002-ல் நடைபெற்ற குஜராத் வன்முறைக்கு பின்பும் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்தன.திராவிடக் கட்சிகளின் சுவரொட்டிகள் மட்டுமே தந்தை பெரியாரை தாங்கி நிற்கின்ற நிலையில் இவை நடக்ககூடியவையே.


2001-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு மற்றும் கோழி போன்ற உயிரினங்களை வெட்டத் தடை என்று தொடர்ந்து சட்டங்களை கொண்டு வந்து இந்த்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவுப் போக்கை கடைபிடித்தது.


2005-ல் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த உமாபாரதி மனுதர்மத்தின்படி "பசுவதை செய்பவர் மிருகத்திற்கு சமமானவர்; கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்ற காரணத்தை மேற்கோள் காட்டி பசுவதையை தடை செய்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டதும் இதற்கு நிகரான ஒரு சட்டம்தான்.



அண்மையில், துக்ளக் பத்திரிக்கையின் சோ ராமசாமி, மோடியை பிரதமராக்க நாம் முயற்சிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் ஜெயலலிதா பிரதமராக பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது மேற்சொன்ன ஒற்றுமைகளையும் கருத்தில் கொண்டுதான். ஜெயலலிதாவும் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை கணித்ததோடு, தான் பிரதமர் நாற்காலியில் உட்காராத நிலையில் தன்னுடைய தொகுதிகள் நண்பர் மோடிக்காவது பயன்படட்டும் என்றுதான் கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டார்



நாம் எல்லோரும் இந்துக்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் சங்பரிவார அமைப்புகள், மனு தர்மத்தைப் பற்றியோ, சாதியை ஒழிப்பதைப் பற்றியோ வாய் திறப்பதில்லை.


மதுரையில் சமூக நீதி மாநாடு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதே மதுரையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மாநாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.



இவர்கள் பிரதம வேட்பாளராக, ஆபத்பாந்தவானாக பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் தலித்துகள் நிலை பற்றி 2009-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்ட செய்திகள் இவர்களின் சமூக நீதி பற்றி உண்மையை உரைக்கும்.


* தலித்துகள் இன்னும் கோவிலுக்குள் நுழைய முடியாது.

* 98 விழுக்காடு இன்னும் இரட்டைக் குவளை முறை புழக்கத்தில் உள்ளது.

* பள்ளிக்கூடங்களின் மதிய உணவுத் திட்டத்தில் தலித் குழந்தைகள் அவமதிக்கப்படுகிறார்கள்.

* ஐந்தில் ஒரு குழந்தைக்கு தீண்டாமையினால் போலியோ சொட்டு மருந்து மறுக்கப்பட்டுள்ளது.


பெரியாரின் அயராத பிரச்சாரத்தால் விரட்டப்பட்ட சங்பரிவாரங்கள் திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கை விட்டுகொடுப்பாலும், தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாதத்தாலும்தான் தமிழகத்தில் பரவியுள்ளன.


தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க -வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் பரப்புரையிலும், இந்துத்துவத்தை கொண்டு சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்காக பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது.


தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடி நமக்குக் கற்று கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில், இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மை சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது.


பார்ப்பனமயப்படுத்தும் தந்திரத்தையும், அரசியலையும் எதிர்த்து போராடுவதற்கான தளத்தை நமக்காக பெரியார் அமைத்து தந்தார், மோடிமயம் ("MODI”fied) என்ற போர்வையில் இந்துத்துவ மயப்படுத்த வரும் கயவர்களை எதிர்த்து பெரியார் வழியில் நின்று போரிட வேண்டிய கடமை நம்முடையது.


கதிரவன்,
சேவ் தமிழ்சு இயக்கம்.


பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html
பாகம் -3 - http://save-tamils.blogspot.in/2014/02/3.html
பாகம் -4 - http://save-tamils.blogspot.in/2014/02/4.html
பாகம் -5 - http://save-tamils.blogspot.in/2014/03/5.html

5 comments:

  1. Excellent article Kathir.

    Exposing Jaya's hindutva mind and politics behind isolating communists are the highlights.

    Keep Going !!!

    ReplyDelete
  2. Excellent article Kathir.

    Exposing Jaya's hindutva mind and politics behind isolating communists are the highlights.

    Keep Going !!!

    ReplyDelete
  3. தங்களது கருத்திற்கு நன்றி தோழர். செய்யது.

    ReplyDelete
  4. There is no difference between Modi and Raj bakhse, but there is no deep sight about them especially in Tamilnadu, don't know who will save us....save Tamils 😊

    ReplyDelete

  5. மோடியும் - இராஜபக்சேவும் ஒன்று தான் என்பதையும் இதே கட்டுரை தொடரின் நான்காவது கட்டுரையில் தோழர்.கதிரவன் புள்ளிவிவரங்களுடன் எழுதியிருப்பார். அதே சமயம் நீங்கள் கூறியது சரியே... தமிழ்சமூகம் இராஜபக்சேவை புரிந்து கொண்ட அளவிற்கு இன்னும் மோடியை புரிந்து கொள்ளவில்லை. நாம் தான் அதை செய்ய வேண்டும்...

    ReplyDelete