Tuesday, March 18, 2014

உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)



உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது.

அரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், பாதுகாப்பில், சமூகத்தின் உளவியல் மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன? இன்றைய சூழலில் ஆணாதிக்கம் உறுதிபட்டிருப்பதையும், பெண்கள் மீதான வன்முறைகள் முன்னெப்போதைக் காட்டிலும் கொடூரமான விதத்தில் அதிகரித்து வருவதை எப்படி அணுகுவது? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இதுபோல் பெண்களின் பாதுகாப்பு பற்றி உரக்கப்பேசும் இத்தகைய சூழலில் அதிரித்துவரும் உழைக்கும் பெண்களின் இன்றைய கோரிக்கைகள், உரிமைகள் என்ன? என்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

ஆணாதிக்க வன்முறைகளையும் இழிவு மனப்பன்மையையும் எதிர்த்துப் போராடுவது இருக்கட்டும். பெண்களின் உரிமைகளையும் தகுதியான இடத்தையும் கோருவது இருக்கட்டும், சாலையில் சக மனுசியாக தைரியமாக அச்சமின்றி நடந்துசெல்லும் நிலைமை உருவாகிவிட்டதா? இதற்கு வேதனையுடன் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். இந்த நிலைக்குக் காரணமாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.


நமது குடும்பங்களில் ஆண் குழந்தைகள் ஒருவிதமாகவும் பெண் குழந்தைகள் வேறு விதமாகவும் வளர்க்கப்படுவது மாறவில்லை. பெண்களின் நடை, உடை, நடத்தை இவை யாவும் ஆணாத்திக்கத்திற்கு பணிந்து கொடுக்கும் வகையில் உருவாக்குவது குடும்ப அமைப்பின் தலையாய கடமையாக நீடிக்கிறது. இருட்டுவதற்கு முன்பாக வீடு திரும்பாத பெண்ணின் உடமைகளுக்கும், உடலுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறிருக்க, பெண்கள் முன்போல அடிமைகளாக இல்லை- அவர்கள் சமூக வெளியில் ஆணுக்கு நிகராய் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று சுதந்திரமாக உலவுகிறார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? 33 சதவித இட ஒதுக்கீட்டை இன்றும் நிறைவேற்றாமல் இருப்பது எதனை குறிக்கிறது? புறையோடிப்போன ஆணாதிக்க கருத்தாக்கம் ஆழ வேறூன்றி இருப்பதைத்தானே காட்டுகிறது?

கவலையளிக்கும் இதுபோன்ற நிலைமை நீடிக்கும்போதிலும், இத்தகைய இழிநிலையை எதிர்த்த, போராட்டத்தால் மட்டுமே புது வழிபிறக்கும் என்பதை உலக்கு உணர்த்திய மார்ச்- 8 உழைக்கும் பெண்கள் தினம் நமக்குள் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதிலும் பெண்களின் பங்கு அன்றும் சரி, இன்றும் சரி எளிதாக புறந்தள்ளிவிட முடியாதது. கல்வி பெறும் உரிமை விஞ்ஞானம், மருத்துவம், இலக்கியம், கணிப்பொறி, நிர்வாகம், விவசாயம், நுண்கலைகள் என பெண்களின் அறிவுத்திறனும் செயல்திறனும் விண்ணை எட்டியிருப்பது வெளிப்படை. இதற்கு இணையாக சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் பிற்போக்கு சிந்தனை பெண்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி முடக்குவதும், வன்முறையாலும், வக்கிரங்களாலும் பின்னோக்கித் தள்ளுவதையும் அன்றாடம் காண்கிறோம்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், ஆசிட் வீச்சுகள், வரதட்சணை கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது என தேசிய புள்ளிவிவர ஆவணம் தெரிவிக்கிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு புது சட்டங்கள் கொண்டு வந்தாலும் நடைமுறையில் சிந்தனையில், பெண்ணை பற்றிய ஆணாதிக்க மதிப்பீடுகளில் மாறுதல் ஏற்படாத நிலையே நீடிக்கிறது. சட்டங்களாலும் காவல்துறையாலும் பெண்களின் மதிப்பும், உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதிலும் ஐயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, இவையே பெண்களை ஒடுக்கும் ஆயுதங்களாக பயன்படுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் எதிர்ப்புக்குரல்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டியிருக்கிறது.

அடுத்து இன்றைய உலகமயச் சூழலில் பெண்கள் முன்னாட்களில் இல்லாத பல புதிய துறைகளில் பணியாற்றுகிறார்கள். இவற்றில் அமைப்பாக்கப்பட்ட அமைப்பாக்கப்படாத துறைகளும் அடங்கும். தகவல் தொழில்நுட்பத்துறை, கால் சென்டர், பி.பி.ஓ ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற துறைகளில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் விவசாயம் நலிவடைந்ததில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் இன்று விவசாயக் கூலிகளாக, ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் அதிகளவு பெண்கள் அன்றாடக்கூலிகளாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் நகரத்திற்கு வந்து எவ்வித பாதுகாப்பின்றி இயங்கும் கட்டுமானம், வீட்டுப்பணி, சிறு உணவகங்கள், குடிசைத்தொழில்கள், நடைபாதை வியாபாரம், பூக்கடைகள் போன்ற தினக்கூலி வேலைகளிலும் பெண்கள் பெருமளவில் பணியாற்றுகிறார்கள்.


இவர்கள் பெண்கள் என்பதாலேயே குறைந்த சம்பளம், கடுமையான விதிமுறைகள், பாலியல் தொந்தரவுகள், பிற உரிமைகள் பறிப்பு, வளைந்து கொடுக்காவிட்டால் வேலை பறிக்கப்படுமென்ற அச்சுறுத்தல்களில் பணிந்து நடக்கும் கட்டாயம் இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் முகவர்களின் துணைகொண்டு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் பெண்கள் புரோக்கர்களின் மூலம் அமர்த்தப்படுவதால் இவர்களுக்கான பணி பாதுகாப்புக்கும் உயிர் உத்தரவாதத்திற்கும் பொறுப்பாளி யார் என்பதில் கேட்பாரற்ற நிலை நீடிக்கிறது.

இன்று அமைப்பாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற சேவைத் துறைகளில் மட்டும் 21% பெண்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அமைப்பாக்கப்படாத துறைகளில் 48% பெண்கள் (ஆண்கள் 21%) வேலை செய்கிறார்கள். இப்பெண்களுக்கு சம்பளமும், பிற உரிமைகளும் கிடைப்பது இல்லை என்பதோடு, அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பதை சமீப காலங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்களின் மரணங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகின்றன. திருப்பூரில் ஏற்றுமதிப் பின்னலாடைத் தயாரிப்பில் பணியாற்றும் பெண்களின் தற்கொலைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகள், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்ப பணியாளர்களும் பாலியல் வன்முறைகளில் படுகொலைகளில் இறையாவதும் தொடர்கதையாகிவிட்டன.

இத்தகைய கொடூர சம்பவங்கள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு கேப் பாதுகாப்பு வண்டி அனுப்பப்படுகிறது என்கிற கருத்தாக்கத்தை தகர்க்கும்விதமாக அம்பிகா, உமாமகேஸ்வரியின் மரணம் நமக்கு சாட்சியாக இருக்கிறது. காவல்துறையின், டி.சிஎஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த நகர்வில் மோசடியும் ஆணாதிக்க திமிருமே வெளிப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதை விட அந்நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்கிற விதத்தில்தான் உடனடியாக வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதுடன், நாஸ்காம் சில விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளதை பார்க்கலாம்,


அதுகூட அந்நிறுவனத்தில் மட்டுமே நடைமுறையாக்கியிருக்கிறது. சென்னையின் மற்ற நிறுவனங்களில் இவை சம்பந்தப்படாத ஒன்றாகவே பார்க்கும் நிலை. இவையேகூட அடித்தட்டு பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ நடப்பதில்லை. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு 13 அம்ச திட்டங்களைக் கொண்டுவந்தது. அதனை நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்நிறுவனத்திற்காக அதிரடியாக நடவடிக்கை எடுத்ததுடன் அவை இந்நிறுவனத்தின் சிக்கலாக பார்க்கும் மோசமான மனோபாவமே இவற்றில் தெரிகிறது.

முதலாளியத்தின் லாப வேட்டைக்காக ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டியில் தொழில்துறை பிரமிக்க வைக்கும் மாற்றங்களை அடைந்துள்ளது. ஆனால் உலக வங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் உலக வர்த்தக நிறுவனமும் விதிக்கும் நிபந்தனைகளுக்கேற்ப தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். வேலை நேரம் 8 மணிநேரமாக இருந்தது. 12 முதல் 14 மணிநேரமாக மாற்றப்பட்டுவிட்டது. விருப்பத்திற்கு மாறாக ஓவர் டைம் என்ற பெயரில் கட்டாய உழைப்பு திணிக்கப்படுகிறது. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்துதல், நிரந்தரமற்ற வேலைமுறைக்கு மாற்றுதல் என்ற வடிவில் முதலாளிகளின் லாபத்திற்கு ஏற்றாற்போல் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

ஆக, 18 ஆம் நூற்றாண்டில் வென்றெடுத்த கோரிக்கைகள் பொருத்தப்பாடுடையவையாக உள்ளன. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையும் காற்றோடு காற்றாகிவிட்டது. அதிக சம்பளம் தரும் வேலைகளில் பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக, குறைவான சம்பளம் கொண்ட வேலைகளே பெண்களுக்கானவை என்றாகிவிட்டது. மாதவிடாய்க் காலத்திலும் கர்ப்பக் காலத்திலும் நியாயமாக பெண்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவசியப்பட்டிருக்கிறது. அதுபோல உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள் அமைத்தல், அக்குழந்தைகளை பராமரிக்கவும் உணவளிக்கவும் போதுமான சம்பளத்துடன் பெண்களை வேலைக்கு அமர்த்துதல் ஆகியவை பல தொழில் நிறுவனங்களில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

பணி உத்தரவாதமும், சம வேலைக்கு சம கூலியும் வேண்டும் என்பதே அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் கோரிக்கை. அமைப்பாக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும். குறைந்த பட்ச உரிமைகள்கூட இல்லாத நிலையில், இப்பெண்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கவேண்டிய கடமை நமக்குண்டு. வேலைக்கான உத்தரவாதம், வேலைக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, ஆகியவற்றை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆக, இச்சமுகத்தில் பெண்கள் பிறப்பின் அடிப்படையிலேயே பாகுபாட்டை சமூக இழிவை சுமந்தே தனது வாழ்கைப் போராட்டத்தை தொடர்கின்றனர். அதனை நிறுவனமயமாக்கும் குடும்பமும் சமூகமும் பொருளாதாரத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் மேலும் இறுக்கமாக்குகிறது. பெண்கள் மீது தொடரும் ஆணாதிக்கத் தடையை தகர்க்க பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றுபட வேண்டும். இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதுடன், உழைக்கும் பெண்கள் தங்களின் சம ஊதியத்திற்கான சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைக்கு அணிதிரள வேண்டும்,

200 ஆண்டுகளுக்குமுன் உழைக்கும் பெண்கள் முன்னெடுத்த முழக்கங்கள் வெற்றிபெற்று முதலாளியத்திற்கு சாவுமணியடித்ததுபோல் இன்று மாறிவிரும் தொழில்துறை மாற்றங்களும் அவற்றில் பெண் தொழிலாளர்களின் பங்கும் அதிகரித்திருக்கிற நிலையில், அனைத்து துறைகளிலும், பணியிடங்களிலும் வேலை உத்தரவாதத்தை உறுதிபடுத்த, பெண்ணை பற்றிய மதிப்பீடுகள் மாற்றும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் முக்கியம்.

சமூகத்தில் சரிபாதி பெண்களாகிய நாம் ஆணுக்கு நிகர் பெண் என்று பறைசாற்றத் துணிவோம். உழைப்பாளி பெண்களின் கோரிக்கையை முன்னெடுக்க மார்ச்-8 உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.


தோழர்.இரமணி
மா.லெ. மக்கள் விடுதலை
தமிழ்நாடு

4 comments:

  1. There is no unity among women (even people in IT industry ) to get their rights, and most worse part is they do not have correct information about their workplace rights ( including safety,security),then how come they will get,,,, But corporate and government doing great job preventing all the rights ( who cares )...when they will united they will get their rights even we too. Nice topic, Hardly true....

    ReplyDelete
  2. மாற்றம் ஒன்றே, மாறாதது தோழர். இன்றுள்ள நிலைமைகளின் படி நீங்கள் சொல்வது சரியே... ஆனால் ஐ.டி.பணியாளர்களின் நிலை மாறி கண்டிப்பாக ஒண்றினைவார்கள் தங்களது உரிமையை வென்றெடுப்பார்கள்...

    ReplyDelete