Thursday, July 3, 2014

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை....


தருமபுரி -  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு

துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி

12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின்மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம்.

வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை அனுசரிக்க நத்தம் கிராமத்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி மறுக்கவே உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அந்நிகழ்வை அனுசரிக்க முடிவுசெய்து, அனுமதி கோரிய கடிதத்தைக் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சென்ற கிராமப் பொறுப்பாளர் துரை, ஊர்த்தலைவர் சக்தி ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் தர மறுத்து அலைகழித்துள்ளது. உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. பின் 27.06.2014 அன்று மாலை 4.மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நத்தம் கிராமத்திற்கு வந்து அதியமான் சவுண்ட்சிஸ்டம் தொழில் நடத்திவரும் சிவலிங்கத்தை விசாரிக்கிறார். இளவரசன் நினைவுதினத்தன்று மைக்செட் வைக்கக்கூடாது என எழுதி எடுத்துவந்த தாளில் கையெழுத்துப்போட சொல்லி மிரட்டினார். தந்தை சிவலிங்கம் மறுக்கவே மகன் அதியமான் எண்ணை வாங்கிக்கொண்டு சென்றார். அப்பொழுதிலிருந்தே காவல்துறையினரின் வன்முறை நாடகம் ஆரம்பித்துவிட்டது.

முதல் கட்டமாக விசாரணை எனக்கூறி மூன்று பேரை மாலை 4 மணியிலிருந்து தருமபுரி பி1 காவல்நிலையத்தில் விசாரித்தனர். பிறகு சுமார்  இரவு 11 மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நீங்கள் 6 பேர் வாருங்கள், கையெழுத்திட்டுவிட்டு அவர்களை அழைத்துச் செல்ல எஸ்.பி அழைக்கிறார் என்று கூறியிருக்கிறார். பிறகு 10க்கும் மேற்பட்ட நபர்கள்  இரவு 12 மணியளவில் தருமபுரி பி1 காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். சென்ற ஒவ்வொருவரையும் மிரட்டி விசாரித்துள்ளனர். அவற்றில் 3 நபர்களை மட்டும் பிடித்து வைத்து கிட்டதட்ட 4 மணிநேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். துரை, சக்தி, சங்கர், அதியமான், சந்தோஸ், அசோக், ஆகிய ஆறுபேரையும் 2 மணிநேரமாக காவல்நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக் கிறார்கள். இளவரசன் என்ன தியாகியாக? அவனுக்கு இறங்கல் நிகழ்ச்சி வேறா? என்று சொல்லி அடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் துப்பாக்கி வைத்திருந்ததாக, பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள். காவல்துறையினரே எழுதிய வாக்குமூலத்தில் கையெழுத்திடச் சொல்லி தாக்கியிருக்கிறார்கள்.
விடியற்காலை 4 மணியளவில் துரை என்பவரை மட்டும் கைவிலங்கிட்டு நத்தம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். கூடவே 15க்கும் மேற்பட்ட வாகனத்தில் 100க்கணக்கான சிறப்பு படையினர் வந்திருக்கிறார்கள். ஒரு காவலாளி இரு சக்கர வாகனத்தில் துப்பாக்கி வெடிமருந்தை எடுத்துவந்ததை அந்த ஊர் மக்கள் பார்த்திருக்கிறார்கள். பின் துரை என்பவரின் வீட்டில் சோதனையிட்டு வீட்டில் உள்ள கடப்பாரை சம்மட்டியை எடுத்துக்கொண்டு இளவரசன் குழி அருகில் சென்று குழி தோண்டச் சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அவரது 15 வயது மகனை அழைத்துச்சென்று இளவரசன் புதைகுழி அருகில் தோண்டச்சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பின் ஊருக்கு பின்புறம் உள்ள கிணற்று அருகில் சென்று காவல்துறையினர் எடுத்துவந்த துப்பாக்கியை கீழே போட்டு அதனை எடுத்துத்தர சொல்லி துரையை அடித்திருக்கிறார்கள். அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மொத்தம் 28 நபர்களை கைதுசெய்வது காவல்துறையின் நோக்கம். இதனால் பாதிக்கப்பட்ட மூன்று கிராம மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைச்செயல் அன்றோடு முடியவில்லை. 29.06.2014 அன்று விடியற்காலை திருப்பதி என்கிற 23 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை குடுப்பட்டி என்கிற கிராமத்திற்கு தேடிச்சென்று கைதுசெய்துள்ளனர். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதனை அறிந்த ஊர் மக்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்


அந்த மக்களிடம் இனிமேல் யாரையும் கைது செய்யமாட்டோம், ஆனால் இன்னும் மீதம் இருக்கும் நபர்களை சரணடையச் சொல்லுங்கள், இனிமேல் எந்த இளைஞரும் வெளியே செல்லக்கூடாது. இத்தகைய தீய சக்திகளை மக்கள் நீங்கள்தான் பிடித்துக்கொடுக்கனும் என்று பேசியிருக்கிறார். அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அம்மக்கள் சந்தித்தபோது, இன்னும் 5 பேர் சரணடையனும், இல்லாவிட்டால் நாங்கள் ஊரையே கைதுசெய்ய வேண்டியிருக்கும் என்று மக்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

இளவரசன் நினைவுதினத்தை தடுப்பதும், பாதிக்கப்பட்ட அக்கிராம மக்களுக்கு ஆதரவாக எந்த முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் கால்பதித்துவிடக்கூடாது என்பதே அதிகாரவர்க்கத்தின் சாதி ஆதிக்க சக்திகளின் நோக்கமாக இருந்துவருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதைவிடுத்து, அரசிடமும், மாவட்ட நிர்வாக, காவல்துறையிடமும் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறது. அதனை அம்மக்கள் விரும்பாமல் சுயமாக நிற்பதை ஏற்காத நிர்வாகம் மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே இத்தகைய கொடூரமான வன்முறைத் தாக்குதல். பொய் வழக்கு, அரச பயங்கரவாத நாடகம். தொடர்நது மூன்று நாட்களாக தாழ்த்தப்பட்ட கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தி அம்மக்களை அச்சுறுத்திவருவதை மறைத்து அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாக துடி என்கிற இயக்கம் பயிற்சி கொடுத்ததாக பொய்யான தகவலை திட்டமிட்டு  பரப்பிவருகிறது.

30.06.2014 அன்று விடியற்காலை கைது: மேலும் ஐந்து இளைஞர்கள்(சங்கர், சண்முகம், அருள், சசிகுமார், தலைவன்) பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  பெங்களூரில் சென்று பணி புரிந்து வந்த இவர்களை அங்கு பதுங்கி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் தொடரும் இந்த ஒடுக்குமுறையக்கு எதிராக களமிறங்குவதும், குரல் எழுப்புவதும் கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும்  முதன்மைப் பணியாக‌ முன்னிற்கிறது.


இரமணி
மா.லெ மக்கள் விடுதலை

No comments:

Post a Comment