Tuesday, August 27, 2013

காதல் கசக்குதய்யா


அடக் காதலே நீ படாத பாடும் உண்டா? புண்ணாக்கு விற்கிறவனெல்லாம் தொழிலதிபர் என்னும் பழைய தமிழ்ச் சினிமா காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கண்டவனெல்லாம் உனக்கு விளக்கம் கொடுப்பதும்; உன்னை வைத்து காசு பார்ப்பதும்; காதல் மன்னன், இளவரசன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு உன்னைக் கற்றுக்கொடுப்பதும், நாராசத்தின் உச்சக்கட்டமல்லாமல் வேறென்ன?

உன்னில் அப்படி என்ன தான் இருக்கிறது? உன்னைக் கண்டு நடுங்குகிற கூட்டம் ஒருபுறம், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோர் மறுபுறம். அப்பப்பா, அடேயப்பா உன்னைத் தவிர்த்துவிட்டு ஒருவனும் இங்கே உயிர் வாழக் கூட முடியாது போலிருக்கிறதே! உன்னைக் கொஞ்சம் தழுவிப்பார்க்க ஆசைப்பட்டேன், வழுக்கிக் கொண்டு உனக்குள் விழுந்துவிட்டேன்.

தெய்வங்களுக்கும், ஜமீன்தார்களுக்கும், பெரிய பணக்காரர்களுக்கும், புரட்சித் தலைவர்களுக்கும் வரும் காதலை மட்டுமே காட்டி வந்த தமிழ் சினிமா, முதல் முறையாக பாரதிராஜாவால் சவரம் செய்பவனுக்கும், சப்பாணிக்கும், தலித் கிறித்தவப் பெண்ணுக்கும் வரும் என்று பற்பல படிகள் மேலேறிப்போனது. அதன் பின் நீ ஏழைப் பாட்டாளிக்கும் சொந்தம் என்றாகி, அவனால் பிழைக்கும் அரிதாரக் கூட்டம் உன்னைச் சந்தைப்படுத்தியது. தங்கள் இஷ்டம் போல் உன்னை வாட்டி வதைத்தது.


தெய்வீகக்காதல், புனிதக்காதல், ஒருவனுக்கு ஒருத்தி அது தான் காதல், காதலுக்குக் கண்ணில்லை, முதல் காதல் என்றுமே மறையாது என்று பற்பல பிதற்றல்கள். அது போதாதென்று இப்போது நாடகக் காதலென்றும் வாஞ்சையோடு அழைக்கப்படுகிறாய். கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். நீ யார்? உனக்கேன் இவ்வளவு முக்கியத்துவம்?



நாகரிகம் தோன்றும் முன்னமே நீ இருந்திருக்க வேண்டும். நாகரிகமே உன்னைச் சுற்றித்தான் வலம் வந்திருக்க முடியும். ஆமாம், ஆமாம் அது தான் சரி. நீ இல்லாவிடில் இனப்பெருக்கம் தான் ஏது? நீ ஒரு உணர்ச்சி. உன்னைத் தொட்டுப்பார்க்க முடிவதில்லை, உணரத்தான் முடியும். நீ இன்றி இந்த உலகம் தோன்றியிருக்கவோ, இயங்கவோ கூட வாய்ப்பில்லை. அப்போ நீதான் அந்தக் ‘கடவுள்துகளா?’

நீ ஒரு சமத்துவப் பெரியார். ஆரியச் சாதிகளை வேரறுக்கப் போராடிய அண்ணல் அம்பேத்கர். உன்னிடம் கேட்கச் சில கேள்விகளோடு வந்துள்ளேன்.


காதல் – கேள்!

நான் - ‘இன்னாருக்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று’ ...

காதல் – நிறுத்து... நிறுத்து... யார் அந்த கம்மனாட்டி தேவன்?

நான் – நீ என்னை வம்பில் மாட்டிவிடுவாய் போலிருக்கிறதே!

காதல் – அதல்ல மச்சான்!

நான் – அடடே நீ எங்கள் பாஷை கூட பேசுகிறாயே!

காதல் – அடிங்க! நான் என்ன வேற்றுக்கிரகவாசியா? உங்களோடே அல்லும் பகலும் சுற்றித் திரிகிறேன். இதென்ன பிரமாதம், இன்னும் பேசவா கலீஜா?


போதும் போதும் உன்னை எல்லாரும் தெய்வீகக்காதல் என்கிறார்கள். நீ இப்படி.. ?

எப்படி எப்படி? உங்கள் முருகனும் கிருஷ்ணனும் செய்த காதலைப் போலவா?

அய்யய்யோ, உனக்குச் சொந்த ஊர் என்ன ஈரோட்டுப் பக்கமா? இப்படி போட்டுத்தாக்குற?

கேட்க வந்ததைக் கேள்.

உனக்குச் சாதி தெரியுமா?

அப்படினா?


சரி மதமாவது தெரியுமா?

இதென்ன புதுசா இருக்கு?

பணக்காரன், ஏழை?


ம்..ஹும்.. (உதட்டைப் பிதுக்கியவாறே)

இதென்ன, நாங்கள் பேசும் கொலோக்கியல் மொழி தெரிகிறது. சாதியும், மதமும் மட்டும் தெரியவில்லை என்கிறாயே?

உங்கள் கொலோக்கியல் மொழி போல் சாதியையும், மதத்தையும் வெளிப்படையாக வெளியில் நீங்கள் பேசுவதில்லையே. எனக்கெப்படித் தெரியும்?

அது சரி, உனக்கு நாடகக்காதல் என்று ஒருவர் பெயர் வைத்திருக்கிறார், அதுவாவது தெரியுமா?


ம். நல்லாவே தெரியுமே. என்னால் தானே அவருக்கு ஒரு அன்பு மகனும் இருக்கிறார். என்னைத் தானே சொல்கிறார் உனக்கேன் வலிக்கிறது?

அதில்லை. உலகமே புனிதமாக எண்ணிக் கொண்டாடும் உன்னைத் தமிழ்நாட்டில் ஒருவர் இப்படிப் பேசுவதா?.

அடப் பைத்தியக்காரா, என்னைப் புனிதமென்று கொண்டாடுவதும் தவறு, அசிங்கமென்று அவர் தூற்றுவதும் தவறு. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்.



அது... (நான் தலையை சொரிந்து கொண்டே..)

உனக்குப் புரிகிற மாதிரியே சொல்றேன். உன் காதைக் கொடு. நீ சொல்லும் அதே நபரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்.


(அதிர்ச்சியில் உறைந்து போய்...) என்ன?

ஆமாம். தன் மகனுக்கான பதவியை, பணத்தை! என்று சொல்லிக் கண் சிமிட்டியது.

ஓ, அதா சங்கதி. தமிழ்நாட்டில் வாரிசுகளுக்குச் சொத்து சேர்ப்பதும், பதவி வாங்கித் தருவதும் புதியதல்லவே. அதற்காக உன்னைத் திட்ட வேண்டுமா என்ன?

அட அடி முட்டாளே. அவர் எங்கேயடா என்னைத் திட்டினார்? அவர் பேசுவதைக் கூர்ந்து கேள். அவர் சொல்ல வருவதே வேறு. ‘அந்த’ நபருக்கும், இதோ ‘இந்த’ நபருக்கும் வருகிற காதலைத் தான் சாடுகிறார்.

ஓ, நீ அப்படி வருகிறாயா? இது எல்லோருக்கும் புரிந்துவிட்டால் பிரச்சனையே இல்லையே.

சரி இதுக்கே இப்படி சொல்றியே, நேற்று நான் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் என்னால் வரும் துன்பங்களைக் கண்ணீர் மல்கக் கசிந்திருக்கிறார் ஒரு இயக்குனர்.

அப்படியா?

படத்தின் பெயர் ‘ஆதலால் காதல் செய்வீர்’.


இதென்ன முரண் நகை. அப்படியென்ன உன்னால் துன்பமாம்?

அதில் வரும் இளம் பெண்ணொருத்தி தன் காதலனோடு இன்புற்றிருக்கிறாளாம்.

சரி. நல்லது தானே?


பொறு. முழுவதும் கேள்

சரி சொல்.

அதற்கடையாளமாக அவள் வயிற்றில் அவர்களது காதல் சின்னமாம்.

அடடே!

ஆம். அதைக் கலைத்துவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஆண் வீட்டாரும், கலைத்தால் பெண்ணின் உயிருக்கே ஆபத்து என பெண் வீட்டாரும் 80 களின் திரைக்கதையைச் சொல்லி, என்னைச் சந்தி சிரிக்க வைத்து விட்டார்கள்.

ம். அப்புறம்?

இந்தப் பஞ்சாயத்தில் நீ சொன்ன சாதி, சொந்தங்களும் அவரவர் பாணியில் களமிறங்க... இறுதியாக இருவரும் பிரிகிறார்கள். அந்தக் குழந்தையை இனிதே ஈன்றெடுத்து அதை ஒரு ஆஸ்ரமத்தில் விட்டு விடுகிறார்கள். அந்தக் குழந்தை அங்கே வளர்வது, பின்னணிப் பாடலோடு அரங்கத்தையே உச்சுக் கொட்டி அழவைக்கிறது.

அடடா, கேட்கவே பரிதாபமாக இருக்கிறதே. அனாதைகள், சமூகத்தில் இப்படித்தான் உருவாகிறார்களோ!

அட மங்குனி. இதிலென்னடா பரிதாபம். இது அந்த இயக்குனரின் அயோக்கியத்தனம், அடி முட்டாள்த்தனம். தெருவுக்குத் தெரு எய்ட்ஸ் பூச்சாண்டி காட்டி விற்கிறானே ஆணுறை; பிஞ்சிலே பழுத்துப்போன உங்கள் ஊர் சில்வண்டுகளுக்கும் தெரியும் வண்ணம், உங்கள் அரசாங்கம் மைக்செட்டு போட்டு கூவுறானே, இந்த சின்ன விஷயம் கூடவா கசமுசா செய்யும் அந்த இருவருக்கும் தெரியாமல் போனது?

அட ஆமாம். அப்புறமேன் இப்படியாம்?

அங்க தான் ட்விஸ்ட். ‘ஊருக்கு மட்டும் மது ஒழிப்பு, தன் கட்சி மாநாட்டில் மது குடித்து ஒருவருக்கொருவர் மண்டை உடைப்பு’ என விஷ ஊசி போடும் மருத்துவரை திருப்தி செய்வதற்காகக் கூட இருக்கலாம். யார் கண்டது? சேரியில் வாழ்பவன் எல்லாம் கிரிமினல் என்பது போல் காட்டிய முற்போக்குவாதி தானே அந்த அதிமேதாவி இயக்குனர். வேறென்ன எதிர்பார்க்க முடியும் அவரிடம்? தமிழ் சினிமா பிற்போக்குவாதிகளின் பிரச்சாரக் கூடாரமாக மாறி வருவதை, தற்கால சசிகுமார், சுசீந்திரன் போன்றவர்கள் உங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லை காதலை மறந்து பெரியாரிஸ்ட்(?!) பாலா பாணியில் காசிக்கு ஓடுங்கள்.

நமக்கெதுக்கு ஊர் வம்பு? என்னை ஆளை விடு. சரி, ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்றாங்களே, அதைப்பற்றி உன் கருத்தென்ன?

ஒருவனுக்கொருத்தி, ஊதுடா மெழுகுவர்த்தி. அடப்போடா நீ வேற. என்னை ஏன்டா இப்படி படுத்துறீங்க. பிடிச்சவன்/பிடிச்சவள் கூட பிடிச்ச வரைக்கும் வாழ்ந்துட்டு போங்கடா. இனியாவது திருந்துங்கடா. இல்லன்னா ஒரு இலட்சம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. நான் கிளம்புறேன். எனக்கு சினிமா ஷுட்டிங் இருக்கு’ என்றவாறே காற்றில் பறந்து போனது என் காதல்.

விக்ரமன்
சேவ் தமிழ்சு இயக்கம்

4 comments:

  1. காதலை கேட்பதா?அருமையான சிந்தனை!

    அதிகம் படிக்கும் வழக்கம் இல்லை. அனால், ஏறியது தான் தெரியும், இமைப்பதற்குள் இறங்கும் இடம் வந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. If 19 years old tall and handsome boy is trapped by a 23 years old short and sly female, it is dramatic love only. What not? Love may happen at any time/age. Love marriages against parents wish should be legalised only when and if the male is above 25 years and female 23 years.

    ReplyDelete
  3. நீங்கள் இதில் இராமதாசையே விஞ்சி நிற்கின்றீர்கள் நண்பா. காதல் திருமணத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  4. அருமையான சிந்தனை...!

    ReplyDelete