Thursday, July 25, 2013

தருமபுரி தாக்குதல் - இளவரசன் இறப்பு - சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக்குவோம்!




பா.ம.கவின் சாதி வெறி அரசியல் தான், முழுக்க முழுக்க தலித்துகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமாகியுள்ளது என்று தமிழக மக்களிடையே வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியிருக்கிறது. இவ்வழக்கை முறையாகவும் விரைவாகவும் விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற, சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் போராட வேண்டும்.

இளவரசனின் மரணம் கொலையாக இருந்தாலும்,தற்கொலையாக இருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு வன்னியர்களிடையே சாதி வெறியை தூண்டி விட்டு ஆதாயம் தேட நினைத்த ராமதாசும்,1990-க்குப் பின்னான தலித் மக்களின் எழுச்சியையும் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத இடைநிலை சாதிகளின் காழ்ப்புணர்ச்சியும் தான் என்று ஏற்கெனவே முந்தைய சேவ் தமிழ்சு இயக்கக் கட்டுரைகளில் முன் வைத்திருந்தோம்.இந்நிலையில் இளவரசன் மரணம் தற்கொலையே என்று நிரூபிக்கப் படும் நிலையில்,அது உண்மை குற்றவாளிகளான பா.ம.க தலைவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல், இந்திய நீதித்துறையின் எல்லா ஓட்டைகளின் துணையுடன் தப்பிக்க வைத்து விடும்.இளவரசன் இறப்பை வெறும் ஒரு காதல் திருமண தோல்வியால் நடந்த தற்கொலையாக மட்டும் பார்க்காமல்,இளவரசன் திவ்யா திருமணம் நடந்த நாளிலிருந்து நடந்த சம்பவங்களையும், ஆதிக்க சாதி வெறியாட்டங்களையும் சேர்த்தே இந்நிகழ்வை அணுக வேண்டியிருக்கிறது.

2012 ஆம் ஆண்டுகடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான வன்னியர்கள்,பா.ம.க ராமதாசு அன்புமணி,காடு வெட்டி குரு தலைமையில் ஒன்று கூடுகின்றனர். பெருந்திரளாக கூடியிருந்த வன்னியர்களிடையே மக்களிடையே, தலித்துகளுக்கு தலித் மக்களுக்கு எதிராக நா கூசும் வகையில் வெறுப்பு பேச்சைக் காடு வெட்டி குரு பேசுகிறார். ’வன்னியப் பெண்களைக் கட்டும் அன்னிய ஆண்களை வெட்டு’ காடு வெட்டி குரு உதிர்த்த பொன்மொழி. இந்த பேச்சுகளின் மூலம் வன்னிய சாதி வெறியை தூண்டி விட்டு, வன்னிய மக்களிடையே ஓட்டு வேட்டையாடலாம் என்கிற கணக்கின் அடிப்படையில் அமைந்த கூட்டம் தான் அது. சித்திரை திருவிழா நடந்து முடிந்த சில நாட்களில் தான்,தலித் சமூகத்தை சேர்ந்த இளவரசனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதல் திருமணம் செய்கின்றனர். ஏற்கெனவே தருமபுரி கிராமங்களில் இருக்கும் தலித் மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி,ஆதிக்க சாதி சமூகத்தால் சகித்துக் கொள்ளப் படவில்லை.இந்நிலையில் தலித் காவல்துறை அதிகாரி தான், திவ்யாவின் தந்தையிடம்
கேவலமாக பேசி அவரை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டினார் என்று பா.ம.க சார்பில் குற்றம் சாட்டப் பட்டாலும்,
அங்கே நடந்த சாதிப் பஞ்சாயத்துகளே திவ்யாவின் தந்தை தற்கொலைக்கு அதிக காரணமாகி இருக்கின்றன. திவ்யா என்ற பெண்ணின் காதல் ஒரு தனிப்பட்ட ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆனால் பல காதல் திருமணங்களை முடிவு செய்யும் இடத்தில் குடும்பங்களே இருக்கின்றன.ஆனால் குடும்ப பிரச்சினையையும் தாண்டி இங்கெ தேர்ந்தெடுக்கும் சக்திகளாக சாதிக் குழுக்களும் உள்ளூர் பஞ்சாயத்துகளும் இருந்திருக்கின்றன.அங்கே அப்பெண்ணின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக அங்கே சாதிப்பஞ்சாயத்துகளே இருக்கின்றன. இப்பஞ்சாயத்துகளின் தொடர் நெருக்கடிகளால் தான்
திவ்யாவின் தந்தையும் தற்கொலைக்கு தூண்டப் பட்டிருக்கிறார். ஆனால் அவர் தற்கொலைக்கு காரணமாக பொய்க்குற்றம் சாட்டப் பட்டு தலித்துகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. நாகராஜ் தற்கொலைக்கு காரணமாக இளவரசனின் பெயரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இளவரசன் தற்கொலைக்கு காரணமாக ஏன் பா.ம.க ஒருவர் மீது கூட இன்னும் வழக்கு தொடரப் படவில்லை?

இந்த தற்கொலைக்கு பொறுப்பாக தலித் மக்களை குற்றம் சுமத்தி, 2000க்கும் அதிகமானவர்கள் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் இருக்கும் முன்னூறு தலித் மக்களின் 300 குடிசைகளை வீடுகளை எரித்து, அவர்களின் உடைமைகளை சேதமாக்கி ஒரு மாபெரும் வெறிச்செயலை கட்டவிழ்த்து விடுகின்றனர்.திவ்யாவின் தந்தையின் தற்கொலைக்கு பகரமாக தான் இச்சம்பவம் நடந்தது என்றால் இளவரசனிடம் வீடு மட்டும் தான் தாக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது இளவரசனின் கிராமம் மட்டும் தான் தாக்கப் பட்டிருக்க வேண்டும்.மாறாக மூன்று கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

உண்மையான காரணம் என்ன? காலங்காலமாக தங்கள் வயல்களில், தங்களுக்கு கீழே அடிமைகளாக வேலை செய்த தலித் மக்கள், இன்று படித்து வெவ்வேறு அரசு வேலைகளில் வளர்ச்சியடைந்து நிமிர்ந்து இருப்பதையும், நகரங்களுக்கு சென்று வேலை பார்த்து வாழ்வதையும் வாழ்வதை, பொறுத்துக் கொள்ள முடியாத வன்னிய ஆதிக்க சாதி வெறி, சரியான நேரத்தில் பா.ம.க கும்பலால் திரி தூண்டப்பட்டு, திட்டமிடப்பட்டுட்டு அந்த தாக்குதலை நிறைவேற்றியிருக்கிறது. தாக்குதலின் போது குறிப்பாக TNPSC தேர்வுக்கு சொல்லித் தரும் ஆசிரியர்கள் வீட்டில் தான் இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்பது இதை உறுதி செய்யும் ஒரு சான்று.

சிறப்பு தனி நீதிமன்றத்தின் முக்கியத்துவம் என்ன ?

வழமையான குற்றவியல் நீதி விசாரணை முறைகளில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.அதில் ஒரு மிகப்பெரிய சிக்கல், குற்றவாளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வருதல்.தருமபுரி தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. ஒன்பது மாதங்களென்ன.. ஒன்பது வருடங்களானாலும் நடக்கவே நடக்காது. ஆனால் இதற்கு ஒரு சரியான மாற்றுத் தீர்வு இருக்கிறது. அது தான் சிறப்பு தனி நீதிமன்றம்.சிறப்பு தனி நீதிமன்றத்தின் பயன்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறுதல்

2. இந்த சிறப்பு தனி நீதிமன்றத்தில் வழக்கை நடத்த ஒரு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அந்த அரசு வழக்கறிஞர், ஒரு குடிமுறை உரிமைகள் வழக்கறிஞராக இருத்தல் வேண்டும் என்று பாதிக்கப் பட்டோர் கேட்கலாம். வழக்கு நடந்து முடியும் வரை அரசே அவ்வழக்கறிஞருக்கு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

3. சம்பவம் நடந்த ஊரிலேயோ, அல்லது கிராமத்திலோ சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கலாம்.

உதாரணமாக தருமபுரி தாக்குதல் வழக்கில், தாக்குதல் நடந்ததலித் கிராமங்களில் ஒன்றினுள்ளேயே இச்சிறப்பு நீதிமன்றத்தைஅமைக்கலாம். இதன் மூலம்,தலித்துகள் அச்சமின்றி நீதிமன்றத்திற்கு வந்துபோக முடியும்.மற்றபடி, இவ்வழக்கு எந்த ஊரில் நடந்தாலும் தலித் மக்கள், வன்னிய பகுதிகளை தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கிறது.இதனால் தங்கள் உயிருக்கே பாதகம் ஏற்படலாம் என்று அஞ்சியே பெரும்பாலான தலித் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் போகக் கூடும்.

4.வழக்கை விரைவாக விசாரித்து நடத்தும் வகையில் தமிழக அரசே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலையீட்டின் பேரில் அரசு இதழில்இதனை வெளியிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனி சிறப்பு நீதிமன்றங்களை, சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (The scheduled castes and scheduled Tribes - Prevention of Atrocities Act -1989) மூலம் அமைக்கலாம்.

ஒவ்வொரு தனி சிறப்பு நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின்தலையீட்டின் பேரில் அரசு இதழில் வெளியிட்டு, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற ஒரு வழக்கறிஞரை இச்சிறப்பு தனிநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த நியமிக்க வகை செய்கிறது.

சிறப்பு தனி நீதிமன்றம் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருக்கிறதா ? அமைக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறதா ?

சுந்துர் படுகொலை: ( Tsundur Massacre )

குற்றங்கள் வெவ்வேறாக இருந்தாலும் நோக்கங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. சுந்துரு படுகொலையைப் பற்றி படிக்கும் போது கீழ்வெண்மணியும் தருமபுரியும் வரிக்கு வரி நினைவுக்கு வந்தால், தருமபுரி வன்கொடுமை வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நோக்கித் தான் நாம் வந்து சேர்வோம். காரணம் சுந்துர் படுகொலையும் தருமபுரி தாக்குதலிலும் குற்றங்கள் வெவ்வேறு தன்மை கொண்டவைகளாக இருப்பினும் இங்கு நோக்கங்கள் ஒரே அளவைகளில் தான் இருக்கின்றன.

ஆகஸ்டு 6, 1991, எட்டு தலித்துகள் பட்டப்பகலில், 400 ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டனர். நீர்பாசன கால்வாய் ஓரமாக அவர்களை துரத்திச் சென்ற அந்த ஆதிக்க சாதி வெறி கும்பல், அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து, பிணங்களை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் அடைத்து, ஆற்றுப் படுகையில் வீசிச் சென்றது. 13 ஆண்டுகள் இடைவிடாத தலித் மக்களின் போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கை விசாரிக்க சுந்துரு கிராமத்திலேயே சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மரண தண்டனை வழங்குமளவு இச்சம்பவம் அரிதினும்அரிதான வழக்கு இல்லை என்பதால், 21 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 35 பேருக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதற்கு நீதிபதி சொன்ன காரணம்,ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்ட மக்களை படுகொலை செய்தல் காலங்காலமாக இந்துஸ்தானில் நடந்து வரும் ஒரு கொடுமையாகத் தானிருக்கிறது என்று தாம் ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தாக தெரிவித்தார்.சுந்துர் படுகொலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு வன்கொமை தாக்குதலாக மட்டும் அமைந்து விடாமல்,ஆந்திர மாநிலத்தின் வரலாற்றில் இச்சம்பவம் ஒரு மாபெரும் தலித் இயக்கம் எழுச்சி பெற காரணமாக அமைந்தது.


1985 ஆம் ஆண்டு நடந்த கரம்ச்சேடு படுகொலைக்கு பின் உருவான தலித் இயக்கமான “தலித் மகாசபா”, சுந்துர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தந்ததில் முக்கியத்துவம் பெறுகிறது. தலித் மகாசபாவின் தன்னிகரற்ற உழைப்பின் மூலம், இவ்வழக்கு சிறப்பாக கையாளப் பட்டது. அவ்வியக்கத்தின் தலைமையின் கீழ்,கொல்லப் பட்ட தலித்துகளின் உடல் சுந்துர் கிராமத்திலேயே சிதையூட்டப் பட்டு, அவ்விடத்திற்கு ”இரக்த ஷேத்ரம்” ( உதிரத்தின் மண் ) என்று பெயரிடப்பட்டு, அப்படுகொலைகளுக்கான நினைவேந்தலை அம்மக்கள் மனதில் உறுதியாக ஏந்தியது. இப்படுகொலையின் போது, தத்தம் வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட பல நூறு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆந்திராவின் வெவ்வெறு பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.சிதறுண்டு போன ஒரு சமூகத்தை ஒன்று திரட்டி தலித் மகாசபை இயக்கம்,அம்மக்களுக்காக ஒரு சிறப்பு முகாமை ஏற்படுத்தி வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தது.. அரசுகளின் எவ்வுதவியை கிடைக்கப் பெறாமல், இரண்டே வருடங்களில் 450 வீடுகளை தலித் மக்களுக்காக கட்டி கொடுத்து, அதில் ஏழு பேருக்கு அரசு வேலையும் வாங்கிக் கொடுத்தது அவ்வியக்கம். மேலும் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு நிலங்களும் வழங்கப் பட்டன.ஒரு தொண்டு நிறுவனம் செய்யக் கூடிய பணியாக இருந்தாலும், முடமாகிப் போன ஒரு சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுப்பெறச் செய்து அவர்கள் புத்துணர்வு பெற ஏதுவாக இவ்வுதவிகள் அமைந்தன. சுந்துர் தாழ்த்தப் பட்ட மக்களின் இவ்வெழுச்சியே, படுகொலைக்கான நீதியைப் பெற ஆதிக்க சாதி வெறியினரை எதிர்த்து வீரமுடன் அவர்களை போராட வைத்தது.இறுதியில் நீதியையும் பெற்றுத் தந்தது.

தலித் மக்களை ஒன்றிணைத்து, வழக்காட அவர்களை உறுதியாக்கிய தலித்மகா சபை வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் சுந்துர் மக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். இவ்வழக்கில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைப்பதற்கு முன்பான கால கட்டம் என்பது நீண்ட ஒரு இரத்தம் தோய்ந்த வரலாறு.வழக்கின் முக்கியகுற்றவாளிகள் கைது செய்யப் படாமல்,போராடிய தாழ்த்தப் பட்ட மக்களும்அவர்களின் தலைவர்களுமே கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.சாதி வெறியர்களை கேள்வி கேட்காமல், எதிர்த்து போராடும் தலித்துகளையும் ஜனநாயக சக்திகளையும் எப்படி நம்மவர்கள் சாதி வெறியர்களாக சித்தரிக்கின்றனரோ அப்படியான சித்தரிப்புகள் அங்கும் நடந்தன.சுந்துர் வழக்கிற்காக, சில இளம் தலித் செயற்பாட்டாளர்கள் தங்கள் கல்வியை இழந்தனர்.தங்கள் திருமணங்களைக் கூட மறுத்து வழக்கிற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.இப்படுகொலை சம்பவத்தின் நேரடி சாட்சியாளரான அனில் குமாரை,ஒரு போராட்டத்தின் போது காவல்துறை சுட்டுக் கொன்றது. இப்படியாக தலித் மக்களின் இயக்கம் தங்களையே முழுமையாக அர்ப்பணித்து, நீதிக்காக போராடத் துணிந்தது.

தலித் இயக்கங்களின் பேரெழுச்சி, ஆந்திர இடது சாரி அரசியலில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான இடது சாரி கட்சிகள், சாதிய ஒடுக்குமுறைகளுக்கான செயற்திட்டங்களை முன்வைத்து ஒரு சிறப்பு அணியை தத்தம் கட்சிகளில் உருவாக்கினர். பாதிக்கப்பட்ட சுந்துர் மக்களின் அணியில் எம்.எல் கட்சிகளும் ஒன்றிணைந்தன. ஜனசக்தி கட்சியும் தலித் சிறுபான்மையினருக்காக ஒரு மன்றத்தை உருவாக்கியது. குல விவாக்சா வியதிரேகா போராட்ட சமிதி மற்றும் குல நிர்முலனா போராட்ட சமிதி ஆகிய இரண்டு இயக்கங்களையும் CPI-M உருவாக்கியது. அவ்விரண்டு இயக்கங்களும் பல பகுதிகளில் நடக்கும் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்குமளவு வளர்ச்சி அடைந்தன. தலித் மகா சபையின் சட்டப்பூர்வமான அணுகுமுறை, தலித் இயக்கங்களை வலுப்பெறச் செய்தது என்றால், எம்.எல் குழுக்களின் தலைமை இளைஞர்களை வழிநடத்தியது. ஜனநாயக சக்திகளும் தலித் மற்றும் உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடும் போது தான், நமக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும் என்ற அரசியல் புரிதலை ஏற்படுத்தவே,சுந்துர் படுகொலைக்கு பிறகான அரசியல் நிகழ்வுகளை இங்கே நினைவு கூறுகிறோம்.

13 ஆண்டு கால இடைவிடாத போராட்டம்:

சுந்துர் பகுதியானது ஆதிக்க சாதியினரான ரெட்டிகளின் வசம் இருந்தது. ரெட்டிகளே அங்கே நிலப்பிரப்புகளுக்காக இருந்தனர். ஆண்டாண்டு காலமாக அவர்களின் நிலங்களில் வேலை செய்த தலித்துகளின் இன்றைய வளர்ச்சி ரெட்டிகளுக்கு அஜீரணக் கோளாரை ஏற்படுத்தியது. பெரும்பாலான தலித்துகள் அரசுப் பணிகளில் இருந்தனர்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புபவர்களாக அவர்கள் இருந்தனர். வீடுகளில் மின் இணைப்பு இருந்தது. ஆண்கள் ஜீன்ஸ் அணிபவர்களாக இருந்தனர். பெண்களும் அங்கே கல்லூரிக்கு சென்றனர். ரெட்டிகளின் நிலங்களில் வேலை செய்யும் தலித்துகள், நியாயமான கூலி கேட்க ரெட்டிகளை எதிர்த்து நிற்கும் துணிவு பெற்றிருந்தனர். தலித்துகள் அதிகம் வாழும் பகுதியான "அம்பேத்கர்" நகரில் மட்டும் 5000 தலித்துகள் வாழ்ந்தனர். நவீனமயமான தலித்துகள் மீண்டும் சமூக அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்பது தான் ரெட்டிகளின் அதி உயர் விருப்பமாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பிய பூதங்கள் ஒன்றிணைந்து, ஆகஸ்டு 6 1991ல், அந்த வெறியாட்டத்தை நடத்தி முடித்தது. வெட்டப் பட்டு துண்டு துண்டாக ஆக்கப் பட்ட உடல்களைப் பார்த்த தலித் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். உடற்கூறு ஆய்வு செய்த ஒரு மருத்துவரும் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மேல் இப்படுகொலையின் கோரத்தை விவரிக்கத் தேவையில்லை.

13 ஆண்டுகளுக்கு பிறகு, 2004ல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் பல்வேறு இன்னல்களையும் தடைகளையும் தாமதங்களையும் அம்மக்கள் சந்திக்க நேர்ந்தது.

அரசு, சுந்துருக்கு வெளியே சிறப்பு நீதிமன்றம் அமைத்த போது, அதை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல்,சுந்துருவிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள். போராட்டத்திற்கு பணிந்த அரசு,சுந்துர் கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. இருப்பினும்,ஆதிக்க சாதியினர் நீதிபதியை இடமாற்றம் செய்ய வைத்தனர்.புதிய நீதிபதி நியமிக்கப்பட்டவுடன், குற்றவாளிகள் அனைவரும் அறுவடை காலத்தையும் திருவிழாவையும் காரணம் காட்டி வழக்கை ஒத்தி வைக்க கோரினர். ஆதிக்க சாதியினரின் கைப்பாவையான நீதிபதியும் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். தங்களுக்கு நம்பிக்கையான ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்க, தலித் மக்கள் மீண்டும் போராட வேண்டியிருந்தது. அப்படியொரு வழக்கறிஞரை நியமிக்க அரசு இசைந்த போது, புதிதாக மற்றுமொரு சிக்கல் காத்திருந்தது. சுந்துர் கிராமத்தில் இருந்த பெரும்பாலான தலித் மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவியிருந்தனர்.எனவே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான வழக்கு, கிறிஸ்துவர்களுக்கு செல்லுபடியாகாது என்று ஆதிக்க சாதியினர் வாதிட்டனர்.ஆந்திர உயர்நீதிமன்றம் அவ்வாதத்தை நிராகரித்தாலும், வழக்கு விசாரணை பல நாட்களுக்கு தாமதமானது. பல தருணங்களில் சாட்சிகளை கலைக்கவும் முயற்சிகள் நடந்தன.இவ்வாறான இழுத்தடிப்புகளை எதிர்த்து, பொறுமையிழந்த தலித் இளைஞர்கள் போராடிய போது தான், அனில் குமார் என்ற இளைஞர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

ஆக இவ்வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் எண்ணிறாத தடைக்கற்களை அம்மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது.ஆதிக்க சாதியினரிடமிருந்து, தங்கள் உயிருக்கான அச்சுறுத்தலை அக்காலம் முழுதும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எல்லா வலிகளையும் கடந்து, சுந்துர் கிராமத்து தலித் மக்கள் ஒரு இயக்கமாக ஒன்றிணைந்து, மன உறுதியோடு போராடி,ஆதிக்க சாதிகளுக்கெதிரான தங்கள் நீதியை நிலை நாட்டியிருக்கின்றனர். இடையறாத அப்போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி தான் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப் பெற்றதும்,அதன் மூலம் அம்மக்கள் நீதியை வென்றெடுத்ததும்.

இளவரசன் மரணம், தருமபுரி தலித் மக்களின் வீடுகள்,உடைமகள் எரிப்பு, மரக்காணம் வன்முறை இவையனைத்திற்குமான நீதியைப் பெற வேண்டுமாயின், சிறப்பு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படல் வேண்டும். குறிப்பாக தருமபுரி வெறியாட்டத்தை விசாரிக்க, இளவரசனின் மண்ணான நத்தம் கிராமத்திலேயே அச்சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்படல் வேண்டும்.சாதியொழிப்பு களத்தில் நின்று போராடும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் தலித் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சிறப்பு தனி நீதிமன்றம் அமைப்பதை நமது முதன்மைக் கோரிக்கையாக வைத்து போராட வேண்டும்.சிறப்பு தனி நீதிமன்றம் என்ற கோரிக்கையை போராட்டக்களத்திற்கு கொண்டு செல்வோம்!

இளவரசன் வழக்கில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுப்போம்.இடைநிலை சாதி மக்களின் சாதி வெறியை முறியடித்து அவர்களைச் சனநாயகப்படுத்துவதற்கு களமிறங்குவோம் !

அ.மு.செய்யது,
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

1. ஹைதராபாத் பேராசிரியர் தோழர்.சத்யநாராயணிடமிருந்து
பெறப்பட்ட குறிப்புகள்,

2. தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கெதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் – 1989




=======

4 comments:

  1. //தலித் சமூகத்தை சேர்ந்த இளவரசனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதல் திருமணம் செய்கின்றனர். //

    திருமண வயதையே எட்டாத அந்தப் பையன் எப்படி திருமணம் செய்ய முடியும். திருமணம் பதிவுசெய்யப்பட்ட சான்று உண்டா?

    ReplyDelete
  2. //சாதிவெறி பிடித்த வன்னிய காவல்துறை அதிகாரி, திவ்யாவின் தந்தையைக் கேவலமாக பேசி அவமானப் படுத்த, திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொள்கிறார்.//

    அவர் வன்னிய காவல்துறை அதிகாரி அல்ல. சாதிவெறி பிடித்த தலித் காவல்துறை அதிகாரி பெருமாள் என்று உண்மையை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்

    http://arulgreen.blogspot.com/2013/07/Conspiracy-theory-Ramesh-Ilavarasan.html

    தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

    http://arulgreen.blogspot.com/2013/07/Dharmapuri-conspiracy-theory.html

    ReplyDelete

  4. //திருமண வயதையே எட்டாத அந்தப் பையன் எப்படி திருமணம் செய்ய முடியும். திருமணம் பதிவுசெய்யப்பட்ட சான்று உண்டா? /// இன்னும் எத்தனை நாள் தான் இதையே சொல்லப்போறீங்க...

    வன்னிய மக்களை அறிவு பூர்வமாக சிந்தித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் திட்டங்களை எதிர்த்து ஒருங்கிணைந்து போராட விடாமல், பா.ம.க -வின் அரசியல் இலாபத்திற்காக அவர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடுபவர்கள் தான் உங்களின் பார்வையில் புர்ஜியாளர்கள் போலும்....

    ReplyDelete