Tuesday, July 23, 2013

பசுமை தீர்ப்பாயம் - பசுமை ஸ்டெர்லைட் - பசுமை பாரதம்



23, மார்ச், 2013 - கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறி மக்களுக்கு மூச்சுத் திணறலையும், கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

29, மார்ச், 2013 - ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம்(த.மா.க.வா.).

1, ஏப்ரல், 2013 - த.மா.க.வா. வின் உத்தரவை சவால் விடும் விதமாக கோடீசுவரர் அணில் அகர்வால் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

2, ஏப்ரல், 2013 - வேறொரு வழக்கில், சுற்றுசூழலை மாசு படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். மேலும் 2010ல் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவான ஸ்டெர்லைட் உலையை மூடத் தேவையில்லை, என்றும் அதில் கூறப்பட்டது.

12, ஏப்ரல், 2013 - நடுவர் மன்றம், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நேரில் சென்று பார்வையிட நிபுணர் குழுவை நியமித்தது.

31,மே, 2013 - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

சுற்றுசூழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் விதமாக, 2010ல் அறிவியலாளர்களும், சட்ட நிபுணர்களும் நிறைந்த தேசிய பசுமை தீர்ப்பாயம் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நடுவண் அரசால் அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயமும் தனியார் பெருநிறுவனங்களின் ஏவல் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. வழக்குகளின் தீர்ப்புகளும், தனியார் முதலாளிகளுக்கு உகந்ததாகவே வழங்கப்படுகிறது. இதன் பெயரோ பசுமை தீர்ப்பாயம். ஆனால், இத்தீர்ப்பாயத்தில் பசுமைக்காக பரிந்து பேச நாதியில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பசுமைக்கு முன்னுரிமை கொடுப்பது போல் தங்களது சின்னத்தை(படத்தில் காண்க) ஆவணங்களில் பொறித்து கொண்டு, சுற்றுசூழலை பாழாக்கும் நிறுவனங்களுக்கு, பச்சை கொடி காட்டுவதை பணியாக செய்துவருகின்றது.





31,மே, 2013 அன்று தேசிய பசுமை தீர்பாயத்தின் முதன்மை கிளை ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை நீதி செய்த பாங்கை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வாயு வெளியேறுவதை கணக்கிட்டு பதிவு செய்ய பகுப்பாய்வி (analyser) எனப்படும் கருவி பயன்படுகிறது. மார்ச் 23ஆம் தேதி, நிறுவனத்தின் பகுப்பாய்வியின்(analyser) தரவின்(data) அடிப்படையில் மிகவும் அதிக படியான அளவில் கந்தக டை ஆக்சைடு(Sulphur di-oxide)வெளியேறியதாக பதிவாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையிலே அதிக நச்சு வெளியேற்றம் காரணமாகவா? அல்லது calibration எனப்படும் அளவு திருத்தத்தின் விளைவாகவா? என்று கேள்வி எழுப்பி, தீர்ப்பாயம் போதிய அறிவியல் ஆதாரம் இல்லாமல் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தை கண்டிக்கிறது. இந்த பகுப்பாய்வி(analyser) என்பதை நம் வீடுகளில் பொருத்தியுள்ள மின்சாரத்தை அளவிடும் கருவிக்கு(மீட்டர் என பொதுவாக அழைக்கபடும்) ஒப்பிட்டு பார்க்கலாம். வீடுகளில் இந்த மீட்டரை இயங்காமல் செய்து, மின்சாரதிற்கு ஆகும் செலவை குறைக்கும் சாமானியர்கள் விஞ்ஞானிகள் ஆகும் விந்தையை பார்த்திருப்போம். விஞ்ஞானிகளையே தன்னுள் கொண்டுள்ள ஸ்டெர்லைட் பற்றி கூற தேவையேயில்லை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மாசு கட்டுபாட்டு வாரியத்தின், காற்று தரத்தை கண்டறியும் கருவி, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது.


தீர்ப்பில் : கந்தக டை ஆக்சைடு வெளியான இடத்தில பல தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது, அதனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து தான் வாயு வெளியாகியது என்று எவ்வாறு கூற முடியும் ?

இதை விட ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளிப்படையாக உதவ முடியாது. இந்த நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சியில், இந்த நிறுவனத்தின் நாட்டிற்கு விளையும் நன்மை என ஒரு பெரிய பட்டியலை விரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் நிறுவனம், வரி ஏய்ப்பால் நாட்டிற்கு ஏற்படுத்தும் பொருளாதார இழப்பை விளக்காதது ஏன்?.

நச்சு வாயு வெளியேறியதற்கான போதிய அறிவியல் ஆதாரம் இல்லை! என்கிறது தீர்ப்பாயம். போபால் நச்சுவாயு போன்ற அவலத்தை சந்தித்த பின்னும் இந்தியாவின் நீதித்துறை, அறிவியல் ஆதாரங்களை கேட்டு வழக்கை நீர்க்க செய்வது, மேலும் ஒரு பேரழிவை மக்களிடம் திணிக்கும் செயலாகும். பல உயிர்களை இழப்பதையே அறிவியல் ஆதாரம் என கருதிறதா, நம் நீதித்துறை?

நிபுணர் குழு அளிக்கும் தகவலில், நிறுவனம் மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள பரிந்துரை செய்யலாம் என்கிறது பசுமைதீர்ப்பாயம். அதாவது மேம்படுத்தப்படாத கருவிகள் இருந்தாலும், அவை ஏற்படுத்திய விளைவு குறித்து கவலை இல்லை. நிறுவனம் இயங்குவதற்கு உகந்த தகவலை அளிக்குமாறு கோருகிறது தீர்ப்பாயம். இது, நிறுவனம் திறக்க வேண்டும், அதற்கு சார்பாக நீதியை நகர்த்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவதையே காட்டுகிறது.

மார்ச், 23ஆம் நாள் நச்சுவாயு வெளியேறியதாக கூறப்பட்டாலும், மார்ச் , 29ஆம் நாள் தான் மூட உத்தரவு பிறப்பித்தது மாசு கட்டுபாட்டு வாரியம், இந்த ஆறு நாள்களும் தொடர்ந்து அதிகபடியான நச்சுவாயு வெளிப்பட்டதற்கான ஆதாரம், மாசு கட்டுபாட்டு வாரியதிடமிருந்தோ, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்தோ வழங்கபடவில்லை என தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஒரு நாள் நச்சுவாயு வெளியான உடனே, பெரிய விபத்தை தடுப்ப‌தற்காக ஆலையை மூட உத்திரவிட்ட தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தை, எதிர்த்து ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ள பசுமை தீர்ப்பாயம், ஆறு நாட்களுக்கான‌ ஆதாரம் கிடைத்து அவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனே தடையை நிரந்தரமாக்கிவிடுமா?. மேலும் இந்த ஆறு நாட்கள் எவ்வளவு கந்தக டை ஆக்சைடு வெளியேறியது என்ற அளவை ஏன் ஸ்டெர்லைட் வழங்கவில்லை, அதை ஏன் விசாரணையின் போது கேட்காமல், ஏன் தீர்ப்பில் ஒரு ஓரத்தில் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.



கண்காணிக்கும் கருவிகுளும், பகுப்பாய்விகளும் சரியான முறையில் இயங்குவது, நிறுவனத்தின் பொறுப்பாகும் என்கிறது பசுமை தீர்ப்பாயம். குற்றம் புரியும் நபரே தன்னை விசாரித்து கொள்ளட்டும் என்பதுபோல், பின், இதில் மாசு கட்டுபாட்டு வாரியதிதின் பணி என்னவாக இருக்க முடியும்?


பசுமை தீர்பாயத்தின் உத்தரவு, நம் மனதில் பல கேள்விகளை எழ செய்கிறது:

நிபுணர் குழு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் ஆய்வு செய்யும் அதன்பிறகு யார் செய்வார்?

மாசுகட்டுபாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையை தீர்ப்பாயம் கண்டிக்கும் நிலையில், வரும் காலங்களில் வாரியம் துணிந்து எவ்வாறு பெருநிறுவனங்களை எதிர்கொள்ளும்?

ஒரு தவறு நிகழும் சூழலில், தவறுக்கான காரணத்தை கண்டறிவது, நீதி செய்யும் விதமா? அல்லது தீர்ப்பில், குற்றம் நிகழ்ந்ததாகவோ, அதற்கான விசாரணை குறித்தோ, ஒரு வரி கூட இடம் பெறாவண்ணம், குற்றம் தொடர்வதற்கான வேலையில், ஈடுபடுவது நீதி செய்யும் விதமா?

இனி இது போல் ஒரு வழக்கு தொடரும் நிலையில், இந்த தீர்ப்பையே மேற்கோளாக காட்டி, மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனகளுக்கு சாதகமான தீர்ப்பை பெரும் நிலையை தீர்ப்பாயம் ஏற்படித்தியிருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான உத்தரவாகும்.
நாளை, நச்சுவாயுவால் மக்களுக்கு துன்பம் விளையும் சூழலில், அது விபத்து என்று எப்படி கொள்ள முடியும். அது தீர்பாயத்தால், திட்டமிட்டு நிகழ்த்தப்படும் படுகொலையே ஆகும்.


காசம் கொடுத்து சுவாசம் மறுக்கும்
மேகம் வருந்தி அமிலம் சுரக்கும்
புலப்படா புகையது, காட்சியை உறிஞ்சும்
உடல் உறுத்தும் உடுத்தும் பஞ்சும்
சுற்றுசூழலை காக்க முனைவீர் கொஞ்சம் - பின்
செயற்கை வாயிலாவது, இயற்கை மிஞ்சும்!

ஏர்வளவன்
சேவ் தமிழ்சு இயக்கம்(Save Tamils Movement)

(ஸ்டெர்லைட் ஆலையை பல மாநிலங்களில், நிறுவ முயற்சித்து முடியாமல் , பின் தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நிறுவபட்டது, இப்போது நிகழும் அ.தி.மு.க. ஆட்சியில் அதை மூட முயற்சித்தும் முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.)


No comments:

Post a Comment