Wednesday, April 23, 2014

வைசியா, பிரவீனா கொலை - யார் பொறுப்பு?


வெங்கடாசலபதி என்கிற தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர், நேற்று சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில், தன்னுடன் பணிபுரியும் வைசியா என்ற சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். வைசியா இரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது, வெங்கடாசலபதி தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். காவல்துறையால் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வைசியா சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். கொலைக்கு முன்பு, வெங்கடாசலபதி, வைசியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு தான் மறைந்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, வைசியாவை கொன்றிருக்கிறார். இது நேற்றிலிருந்து இன்று வரை பரவலாக ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் செய்தி.

ஆனால் இச்செய்தியோடு தொடர்புடைய மற்றொரு செய்தி, ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஊடகங்களில் வெளி வந்திருக்கிறது. பின்பு காலப்போக்கில் அது மறக்கப்பட்டும் இருக்கிறது. அது வெங்கடாசலபதி என்ற கே.வெங்கடாசலபதி, M.Sc பட்டதாரி, ஈரோடு கருங்கல்பாளையத்தில், பிரவீனா என்ற 18 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற செய்தி, 2008 தி ஹிந்துவில் வெளியாகியுள்ளது. அங்கேயும் இங்கேயும் அதே வெங்கடாசலபதி தான். வெங்கடாசலபதியின் சகோதரி திருமணம் கை கூடாமல் இருக்கவே, ஈரோடு கல்யாண விநாயகர் கோயிலுக்கு, வேண்டிக் கொள்ள, வெங்கட்டின் குடும்பம் அடிக்கடி கோயிலுக்கு வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. கோயிலின் அருகே குடியிருக்கும் பிரவீனாவை நட்பாக்கிக் கொண்ட வெங்கடாசலபதி, ஒரு கட்டத்தில் பிரவீனாவை தான் காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதில் உடன்பாடில்லாத பிரவீனாவும், பிரவீனாவின் பெற்றோரும் மறுத்ததோடு, வெங்கட்டை கண்டித்தும் அனுப்பியிருக்கின்றனர்.

இதனால் கோபமடைந்த வெங்கடாசலபதி, வீட்டிலிருந்த ப்ரவீனாவை உடலெங்கும் சரமாரியாகக் குத்தி விட்டு, தப்பியோட முயன்ற போது, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அந்த வழக்கில் வெங்கடாசலபதி தண்டிக்கப்பட்டாரா? என்பது பற்றிய தகவல்களோ, வழக்கின் நிலையோ அறியப்படவில்லை.


நேற்று சென்னை வைசியாவின் கொலை நடந்து முடியும் வரை, வெங்கடாசலபதி சென்னை தனியார் பெருநிறுவன தகவல்தொழில் நுட்பத் துறை ஊழியர். TCS என்றழைக்கப்படும் டாடா நிறுவனத்தில் உயர் பொறுப்பிலுள்ள கணினிப் பொறியாளராக (Senior Systems Engineer) பணியாற்றி வந்திருக்கிறார் வெங்கடாசலபதி.

பழைய வழக்கு என்ன ஆனது ? வெங்கடாசலபதி ஏன் தண்டிக்கப்படவில்லை ? ஒரு மிகப்பெரிய நிறுவனம் எப்படி ஒரு ஊழியரின் பின்னணியை முறையாக விசாரிக்காமல் வேலைக்கு சேர்த்துக் கொண்டது? பெண்கள் மீதான தொடர் வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமென்ன ? போன்ற கேள்விகள் எழுவதோடு, மென்பொருள் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு வெங்கடாசலபதி பிரவீனாவைக் காதலித்ததும், கத்தியால் குத்திக் கொன்றதும் வெளிப்படையாக நிரூபணமான செய்தி. சம்பவம் நடந்து இரத்தமும் கையுமாக பிடிபட்டவரை, பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தாலும் தொடர்ந்து காவல்துறை விசாரித்திருக்கிறது. என்னென்ன கோணங்களில் விசாரித்தார்கள் என்று இதுவரை நமக்கு தெரியாவிட்டாலும், சட்டத்தின் எல்லா அடைப்புகளையும் மீறி, ஏதோவொரு கோணத்தில் வெங்கடாசலபதி விடுவிக்கப்பட்டிருக்கிறார். வெங்கடாசலபதியை பொறுத்த மட்டில், எவ்வித நெருக்கடிகளுமின்றி, வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டு, அவரை அடுத்த கொலை செய்யும் வரை அனுமதித்திருக்கிறது ஆகவே நேற்றைய வைசியாவின் கொலைக்கு முதல் பொறுப்பு தமிழக காவல்துறையும், சட்ட நடைமுறைகளும்.


இந்தியாவின் ஆகப்பெரும் உயர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. உமா மகேஸ்வரியின் கொலைக்கே இன்னும் ஈடு செய்யாத டி.சி.எஸ் நிறுவனம், அடுத்த பெண் கொலையின் மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது. பொதுவாக எல்லா தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் சேர்க்கும் போது, நேர்காணல் எல்லாம் முடிந்த பிறகு, அந்நபரின் பின்புலம் பற்றி தனியாக, இரகசியமாக விசாரணை நடத்தப்படும். BGV என்றழைக்கப்படும் Back Ground Verification சோதனையின் போது, வேலைக்கு தேர்வாகும் நபரின், கல்வித் தகுதி, பழைய வேலையின் அனுபவம், பின்புலம், காவல்துறை வழக்குகள் ஏதும் இருக்கின்றதா, குற்றப்பின்னணி உடையவரா என பல கோணங்களில் இரகசியமாக விசாரிக்கப்பட்டே அவருடைய, வேலைக்கான ஆணை வழங்கப்படும். இந்த பின்புல சோதனை நடத்த முடியாத நிறுவனங்களுக்கு, இதை செய்து கொடுப்பதற்கென்றே தனியாக சில நிறுவனங்களும் வளர்ந்திருக்கின்றன. அவர்களுடைய வேலையே, ஒரு நிறுவனத்திற்காக தேர்வாகும் ஊழியர்களின் பின்புலத்தை சோதனை செய்து, அந்நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது தான். ஆனால் டி.சி.எஸ் போன்ற தகவல் தொழில் நுட்பத் துறை ஜாம்பவான்கள் இப்படியான சோதனைகளை எங்ஙனம் நடத்துகிறார்கள் என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. வெங்கடாசலபதியின் பின்புலம் சரியாக சோதனை செய்யப்பட்டிருந்தால் அவர் அந்நிறுவனத்திற்கு வேலைக்கு தேர்வாகியிருக்கவே முடியாது.

தனியார் பெருநிறுவனங்கள் லாப நோக்குடன் மட்டுமே செயல்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால், தங்களுடைய நிர்வாகத் திறன் பற்றி எப்போதும் மெச்சிக் கொள்ளும் அவர்களின் செயல்பாடுகள் என்றும் வெளிப்படைத் தன்மையோடு இருந்ததில்லை. இவ்வாறாக கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் இருக்கும் நடைமுறைகளின் கோளாறுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது பிரவீனாவின் கொலை.


“எனக்கு கிடைக்காத ஒரு பொருள் யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று ஒரு பீங்கான் பொம்மையை கை தவறி விழுவது போல, உடைப்பார் நமது கதாநாயகன் விஜய். இது போன்ற வசனங்களும் காட்சிகளும் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி வருவதுண்டு. சினிமாக்களில் காட்டப்படும் இது போன்ற காட்சிகள், நிகழ்கால சமூகத்தின் ஒரு பிரதி பிம்பமே. பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், தன்னுடைய பாலியல் உடைமையாகவும் மட்டுமே கொண்டிருக்கும் பிற்போக்கு ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எச்சமே இத்தகைய காட்சிகளை கை தட்டி ரசிக்க வைக்கின்றன. பெண்ணாகப்பட்டவள், தன் காதலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொண்ட பெண், தன்னுடைய தனிப்பட்ட உடைமை, சொத்து, அவள் மற்ற ஆண்களிடம் பேசக்கூடாது, சகஜமாக சிரித்து உரையாடக் கூடாது, மீறி நடக்கும் பெண்கள், அமில வீச்சுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும், படுகொலைகளுக்கும் இலக்காகின்றனர்.

அமில வீச்சில் பலியான வித்யா, வினோதினி, சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரி ஆகியோரின் வரிசையில் இன்று வைசியாவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரவீனாவைக் கொன்ற வெங்கடாசலபதி, ஆறு வருடங்களாக எத்தகைய தண்டனையும் அனுபவிக்காமல், மற்றவர்களைப் போல, நல்ல நிறுவனத்தில் உயர் பொறுப்பில் வேலை செய்து கொண்டிருந்தது நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. ஒரு பெண் உடலின் மீதான வன்முறை, இச்சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியே அது. ஒவ்வொரு முறை இச்செய்திகளை எதிர்கொள்ளும் வெகுசனம், சவுதி அரேபியாவைப் போல, இவர்களையெல்லாம் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொல்ல வேண்டும், உறுப்புச் சேதம் செய்ய வேண்டும், மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோபத்தில் புலம்பித் தள்ளுகின்றனர். சமூக எதார்த்தத்தில், இத்தகைய தண்டனைகள் ஒரு போதும் பெண்கள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்தி விடப்போவதில்லை.பெண் என்பவள் தன்னுடைய அந்தரங்க உடைமை, அவள் என் சொத்து, அவள் மீது எத்தகைய வன்முறையையும் செலுத்த எனக்கு உரிமை இருக்கிறது என உரிமை கொண்டாடும் பிற்போக்கு ஆணாதிக்க சமூகம் மாறாத வரை, இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, வெளிஉலக அனுபவம் என்று பல்வேறு தளங்களில் பெண்கள் முன்னேறி வந்துள்ள போதிலும் இந்த பிற்போக்கு ஆணாதிக்க சமுதாயத்தின் பயங்கர நிழல் அவர்களைத் தொடர்ந்து துரத்துவதையே நமக்குக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்கள் அமைப்பாக செயல்பட உதவி அவர்களின் பின்னின்று நாமும் போராடுவதே இது போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான முதல்படி.


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

3 comments:

  1. மிக அதிர்ச்சியளிக்கும் செய்தி.. எதையும் செய்துவிட்டு தண்டனை இல்லாமல் சாதாரணமாக பலர் நம்மிடையே இருக்கக் கூடும் என்ற நினைப்பே கவலை அளிக்கிறது!

    ReplyDelete

  2. ஆம், ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆனால் இப்படிப்பட்டவர்களை எப்படி எல்லா பரிசோதனையும் செய்து தான் தாங்கள் வேலைக்கு எடுக்கின்றோம் என சொல்லும் நிறுவனங்களின் முகமூடி இப்பொழுது கழண்டுவிட்டது.

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete