Saturday, February 8, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில் ! - 3




நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான காய்நகர்த்தல்கள் பேச்சுவார்த்தை என்ற கட்டத்தைத் தாண்டி உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மோடி அலை என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்து, மோடியை பிரதமராக்குவதே இலக்கு என்று பா.ஜ.க. ஒருபக்கம் கூட்டணியை அமைக்க திட்டமிட்டு செயல்படுகிறது. மறுபுறம், காங்கிரசு மற்றும் பா.ஜ.க என்கிற இரண்டு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணியை அமைப்பதில் இடதுசாரிகள் மும்மரமாக உள்ளனர். காங்கிரசு கட்சியோ தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மோடி அலையில் வெற்றி பெற்றதாக பா.ஜ.க-வால் விமர்சிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தங்களுக்கு விழப்போகும் வாக்குகளை பிரித்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க மிகக் கவனமாக செயலாற்றி வருகின்றது.


இவ்வாறு கூட்டணிக் கணக்குகளும், பேரங்களும் நடந்து கொண்டிருக்க அனைத்து இடங்களிலும் மக்கள் மோடியைப் பற்றியே பேசுவது போலவும், நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரே சர்வரோக நிவாரணி என்பது போலவும் ஒரு மாயை கட்டமைக்கப்படுள்ளது. இந்தப் புனைவை கட்டமைத்ததில் மோடிக்கும், பா.ஜ.க -விற்கும் எவ்வளவு பங்களிப்பு உள்ளதோ அதற்கு சற்றும் குறைவில்லாத பங்கு கார்பரேட் ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மற்றும் மோடிக்காக நியமிக்கப்பட்ட பிரசாரக் குழுவிற்கும் உண்டு. மோடிக்கான பிரச்சாரம் என்பது அவர் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடைபெற்று வருகின்றது.


2002- ல் இனப்படுகொலையாளராக ஊடகங்களால் தூற்றப்பட்ட ஒருவர் எப்படி அடுத்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் நாயகராக ஆக முடியும் என்று நான் பலமுறை வியந்ததுண்டு, பிறகுதான் அறிய முடிந்தது APCO என்னும் அமெரிக்க மக்கள் தொடர்பு நிறுவனம்தான், மோடியை சந்தைப்படுத்தி கொண்டிருக்கிறது என்பது.அத்தோடு ஊடகங்களில் பணிபுரியும் யாரெல்லாம் மோடியைப் பற்றியும், குஜராத்தைப் பற்றியும் பரப்புரை செய்ய விரும்புவார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை பிரச்சாரத் தூதுவர்களாக உருவாக்கும் பணியையும் மேற்கொண்டது. இதற்காக மோடி அரசு, அப்கோ நிறுவனத்துடன் ஆண்டிற்கு 2.25 கோடி அமெரிக்க டாலர் தருவதாக 2010 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது, அதுவும் இந்த தொகை வழங்கப்படும் அன்று உள்ள இந்திய ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பில் வழங்கப்படும் என்று செய்துள்ளது.இப்படி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துதான் ஊழல் கறை படியாதவர் ஆக்கப்பட்டார் மோடி.


மோடியின் நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பப்பெருக்கதிற்கும், கெஜ்ரிவாலின் பிரச்சாரத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காங்கிரசு, ராகுல் காந்தியை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் முயற்சியாக நரேந்திர மோடியின் அடியொற்றி DENTSU என்கிற ஜப்பானை சேர்ந்த நிறுவனத்தையும், Burson-Martseller என்கிற மக்கள் தொடர்பு நிறுவனத்தையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.


கட்சிகளால் பணிக்கமர்த்தப்பட்ட மக்கள் தொடர்பு நிறுவனங்கள்தான் இவ்வாறு செய்கின்றன என்று நாம் நினைத்தால், தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள் என்று நெஞ்சை உயர்த்தி சொல்லும் நாளிதழ்களும், 24 மணி நேர செய்தி ஊடகங்களும் இதையேதான் செய்கின்றன.


நம் நாட்டில் உள்ள பாராளுமன்ற சனநாயக முறைப்படி மக்கள் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது என்கிற பட்சத்திலும், எப்படியாவது மோடி பிரதமர் ஆகிவிட வேண்டும் என்கிற எண்ணத்தை படித்த மத்தியதர வர்க்கத்தினரிடம் விதைத்ததில் இந்த ஊடகங்களுக்கு பெரும்பங்கு உண்டு.



பா.ஜ.க -வினால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் பின்வருமாறு முகப்புச் செய்தி வெளியிட்டு, “Prime Modi: Gujarat CM is BJP’s choice -- despite Advani", அதில் மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவு என்று எழுதியிருந்தது.


"டைம்ஸ் ஆப் இந்தியா", ஒருபடி மேலே சென்று மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரின் கடுமையான எதிர்ப்பையும் மீறியுள்ளது என்று செய்தி வெளியிட்டது, “ BJP topples LK, crowns Modi”.


நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் REUTERS பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலின் போது, 2002 குஜராத் வன்முறையில் உயிரிழந்தவர்களை பற்றிக் கருத்துக் கூறும் போது, தன் காரில் அடிப்பட்ட நாய்க்குட்டி என்று ஒப்பிட்டிருந்தார். இதற்கு ஜூலை 15, 2013 என்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், 16 ஜூலை வெளியான இந்தியன் எக்ஸ்ப்ரசும், 2002 குஜராத் படுகொலை பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காமல் நரேந்திர மோடி 2014 தேர்தலுக்கு முன் தன்னைச் சரியாக வெளிப்படுத்தும் திறமையை (Communication Skills) வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி தலையங்கம் தீட்டியிருந்தன. ஆயிரம் பேரின் கொலை பற்றி கவலைப்பட வேண்டிய ஊடகங்கள், மோடியின் ஆங்கில அறிவின்பால் அக்கறை செலுத்தின.


உத்தரகண்டில் மக்கள் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த போது, 15,000 பேரை நேரில் சென்று காப்பாற்றினார் மோடி என்று செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா. மோடி சென்று 15,000 பேரைக் காப்பாற்றிய போது ஹெலிகாப்ட்டர் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவமே திணறிக் கொண்டிருந்தது என்னும் செய்தி மோடியின் விளம்பரப் புரட்டை அவிழ்த்ததுடன், மக்களின் துன்பத்தில் அரசியல் செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியது.


இந்தியா முழுக்க எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் குற்றஞ்சாட்டப்பவர்களாக தாடியுடன் நாலு இளைஞர்களின் புகைப்படங்களைப் போட்டு தீவிரவாதிகள் பின்னணி என்று செய்தி வெளியிடுகின்றன ஊடகங்கள். பீகாரில் நடைபெற்ற மோடியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை இந்து இளைஞர்கள் என்று வகைப்படுத்தி விளித்தது எப்படிப்பட்ட நடுநிலை?. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில், உடனே பொதுக்கூட்டம் நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதை எத்தனை ஊடகங்கள் கேள்விக்கு உட்படுத்தின?.


இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில், நான் பயன்படுத்திய ஒரு வாக்கியத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். " தனியார் பெருமுதலாளிகள் என்றும் பாசிசத்தின் நண்பர்களே, பாசிசத்தின் தொடக்கம் தனிமனிதத் துதிகளிலே உள்ளது". அதேபோல், பாசிசவதிகள் என்றும் துதிகளையும், தம்மைப் பற்றி பிரச்சாரம் செய்வதையுமே விரும்புகின்றனர். ஹிட்லருக்கு எப்படி கோயபல்சோ, அதேபோல மோடிக்கு இந்த கார்பரேட் ஊடகங்கள்.


தாங்கள் விரும்பிய செய்திகளை வெளியிடாத, தங்களைப் பற்றி விமர்சிக்கும், ஊடக தர்மத்தைக் காத்து நிற்கும் பத்திரிக்கையாளர்களை களையெடுக்கவும்,கருத்துச் சுதந்திர குரல்வளையை நெரிக்கவும் பாசிசவாதிகள் தவறுவதும், தயங்குவதும் இல்லை.




அண்மையில் இந்திய பத்திரிக்கைத் துறையில் இருந்து களையெடுக்கபட்டவர்களில் ஒருவரான சித்தார்த் வரதராஜன், "தி இந்து" நாளிதழின் முதன்மை ஆசிரயர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தி இந்து நாளிதழின் திருவனந்தபுரம் பதிப்பில், மோடி அமிர்தானந்தமயிடம் ஆசி வாங்கும் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டதைக் கண்டித்ததுடன், தேர்தல் நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையானவை என்று சித்தார்த் வரதராஜன் தெரிவித்ததும்தான் அதற்குக் காரணம்.

இது பற்றி தன்னுடைய கருத்தை சித்தார்த் வரதராஜன் பின்வருமாறு கூறினார்,

" பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இயல்பாகவே நெருக்கடிக்கு உள்ளாக விரும்பமாட்டார்கள், அதேபோல், நரேந்திர மோடியோ விமர்சனங்களை விரும்பமாட்டார், இப்படியிருக்கையில் மோடியை விமர்சித்து அவரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று ஊடகங்கள் நினைப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இது போன்ற முடிவுகள் அந்தந்த பத்திரிகை குழுமங்களின் சார்புத்தன்மை அடிப்படையிலேயே அமைகிறது. சில நடவடிக்கைகள் வெளியில் தெரிகின்றன, பல உள்ளேயே தணிக்கை செய்யப்பட்டுவிடுகின்றன."

ஒருபுறம் மோடியை விமர்சித்து தன்னுடைய இளஞ்சிவப்பு நிறத்தை காப்பாற்றிக் கொள்ளும் "தி இந்து" நாளேடு, சித்தார்த் வரதராஜனை பணிநீக்கம் செய்து காவிப் பாசத்தைக் காட்டியுள்ளது.




17 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியை நடத்தி வரும் திரு. வீரபாண்டியன், தொலைக்காட்சிக்கு வெளியே ஒரு நிகழ்வில் தெரிவித்த மோடி அலை பற்றிய கருத்திற்காகவே அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியை இழந்தார். இதற்கும் அவர் கூறிய கருத்து மிகவும் பொதுமையான ஒன்று, " மோடி அலை என்ற காரணத்திற்காக வாக்களிக்காமல்,மக்கள் வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்திக்க வேண்டும்; நீங்கள் இப்போது எடுக்கும் முடிவை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் சுமக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.


ஓபன் (OPEN) வார இதழில் அரசியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றிய ஹர்தோஷ் சிங் பால், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தன்னுடைய பத்திரிக்கை ஆசிரியர் கூறியதாக தெரிவித்தார். இந்த இதழில்தான் 2002 குஜராத் படுகொலையில் இறந்தவர்களின் மண்டை ஓடுகளின் மீது மோடி நிற்பது போலவும், காங்கிரசின் ராகுல் காந்தி பெற்றவர்களின் தோளில் அமர்ந்து அரசியல் செய்வது போலவும் சித்திரம் வெளியிட்டிருந்தனர்.பின்னர் மோடி அணியினரின் அழுத்தத்தால் இந்த புகைப்படம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


நெட்வொர்க் 18 ஊடக குழுமத்தின் செயல்பாடுகள் வலதுசாரித்தனமாக திரும்பியதில், இந்த குழுமம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியால் வாங்கப்பட்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நெட்வொர்க் 18 குழுமத்தின் பத்திரிக்கைகளில் ஒன்றான "போர்பஸ்" (FORBES) ஆசிரியரிடமும், நிருபர்களிடமும் மோடியிடம் சார்புப் போக்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனாலயே இந்த்ரஜித் குப்தா உட்பட நான்கு ஆசிரியர்கள் பத்திரிக்கையில் இருந்து வெளியேறினர்.


அண்மையில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செசல்வாத் கூறியதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும், "நாஜிக்கள் செர்மனியில் பாசிசவாதத்தைத் தனியாக கட்டமைத்துவிடவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அன்றைய கோலா(பெப்சி), கோக கோலா போன்ற தனியார் பெருநிறுவனங்களும் செயல்பட்டனர் " என்று கூறினார். இது நெட்வொர்க்18-ஐ விலைக்கு வாங்கியுள்ள அம்பானிக்கும், இந்தியப் பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்கிற கருத்துகணிப்பில் மோடிக்கு ஆதரவாக வாக்களித்த நான்கில் மூன்று பங்கு முதலாளிகளுக்கும் பொருந்தும்.





இவ்வாறு பத்திரிக்கைகளில் நடந்த கட்டம் கட்டும் வேலை, சமூக ஊடகமான ட்விட்டரையும்(Twitter) விட்டு வைக்கவில்லை. செய்தி, அரசியல் பிரிவு தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராகுல் குர்ஷீத், மோடி மீதான தன்னுடைய அரசியல் இடுகைகளுக் காகவே (tweets) பணிநீக்கம் செய்யபடுவது வரை நடந்தேறியுள்ளது.


குஜராத்தின் வளர்ச்சி என்னும் மாயையையும், தனியார் பெருமுதலாளிகளின் உத்தரவுபடி மோடிக்கு இனிக்கும் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள், குஜராத்தின் மிதிவிர்டியில் அணு உலைக்கு எதிராக நடக்கும் மக்களின் போராட்டத்தையும் ,25 நாட்களையும் தாண்டி போராடி வரும் குஜராத் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பற்றிய செய்திகளையும், 8000 முதல் 10000 விவசாயிகள் குஜராத்தின் வடோதராவில் நடத்திய போராட்டம் பற்றியும் இருட்டடிப்பு செய்தது ஏன்?. இதுதான் ஊடக அறமா?

சனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கைகள்/ஊடகங்கள் சில தனியார் முதலாளிகளின் கைகளுக்கு போனபோதே, அந்த தூண் சரியத் தொடங்கிவிட்டது. அந்தத் தூணை அதிகார பலம் கொண்ட யாரும் தன் வீட்டு முற்றத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது பத்திரிக்கைத் துறையின் பெரும்பகுதி செல்லரித்துக் கிடப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.


நாளுக்கு நாள் செல்லரித்துக் கொண்டிருக்கும் ஊடகத் துறையை நினைக்கும் போது எப்போதோ படித்த கவிதை ஒன்று நினைவில் வருகிறது,


"பட்டுவேட்டி பற்றிய

கனவில் இருந்தபோது

கட்டியிருந்த கோவணம்

களவாடப்பட்டது "


அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, நொடிக்கு நொடி செய்திகள், 24 மணி நேர தகவல்கள், நடுநிலையான விவாதங்கள் என்று சவடால்விடும் ஊடகங்களின் அறம் என்னும் கோவணத்தை மோடி போன்ற பாசிஸ்டுகள் உருவிக் கொண்டிருக்கின்றனர், அதை இறுக்கிக் கட்ட நினைக்கும் ஊடகவியலாளர்களின் கைகள் தனியார் பெருமுதலாளிகளால் துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

புகைப்படங்கள் ஒப்பன், அவுட்லுக் மாத இதழிலிருந்தும், மற்ற வலைதளங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. நன்றி...

7 comments:

  1. மோடியின் காசுக்கு கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் பத்திரிகைகளும் ஊடகங்களும் பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டு நிறுவனமும் பொய்யான மோடி அலையை கொண்டு வந்திருக்கிறது..

    ஒபாமா போலி போட்டோவினால் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மோடியின் கோவணம் அவிழ்ந்தது.

    CLICK >>>> உயரத்தில் பறக்குது மோடியின் கோவணம். <<<< TO READ

    .

    .

    ReplyDelete
  2. தங்கள் கருத்துகளுக்கு நன்றி தோழர்.

    ReplyDelete
  3. நன்றி பிரவின்

    ReplyDelete
  4. எண்ணம் மேன்மையானதாக இருந்தால் மட்டுமே அதன் விளைவான , நோக்கமும் நிறைவேறும் . அத்வானிக்கு நேர்ந்த கதியே மோடிக்கும் ஏற்படும். வாழ்த்துக்கள் கதிரவன்.



    ReplyDelete
  5. Sagarika Ghose, deputy editor of CNN-IBN who anchors the prime time Face the Nation programme, received instructions from the management of Network 18, which owns the news channel, not to post disparaging tweets about Narendra Modi, the Bharatiya Janata Party's prime ministerial candidate, highly placed sources at the media and entertainment company told Scroll.in.

    http://scroll.in/article/why-cnn-ibns-sagarika-ghose-can-no-longer-criticise-modi?id=655950

    ReplyDelete