இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்
தமிழகமெங்குள்ள மாணவர்களும், இளைஞர்களும் இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை கோரியும், ஈழ மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களை கடந்த வாரத்தில் இருந்து நடத்தி வருகின்றனர்.மாணவர்களின் இப்போராட்டம் காட்டுத் தீ போல தமிழகமெங்கும் பரவி சமூகத்தில் உள்ள பல பிரிவினரையும் ஈழத்தமிழருக்கான நீதிப் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது.








இன்று நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈழத்தமிழருக்கான நீதி கோரும் போராட்டத்தில் தங்களை
இணைத்துக்கொண்டு சென்னையில் உள்ள டைடல் பார்க் முன்பு ஒரு மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகின்றனர். பழைய
மகாபலிபுரம் சாலையின் இருபகுதியிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான CTS, TCS, HCL, Polaris, Ramco, HP,
Infosys, Accenture, Verizon உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த மனித சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும், இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐநாவை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகளையும், இனப்படுகொலை இலங்கையுடன் சேர்ந்து நிற்கும் இந்தியாவை கண்டிக்கும் முழக்கங்களையும் தாங்கிய பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்தி போராடுகின்றனர். இன்று பெருங்குளத்தூர் பகுதியில் உள்ள சிறீராம் மென்பொருள் பூங்காவின் முன்னும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தையும்,டைடல் பார்க் முன்பு நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தையும் பெரும்பான்மையாக தகவல்தொழில் நுட்ப பணியாளர்களையும், இளைஞர்களையும் கொண்ட சேவ் தமிழ்சு இயக்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதே போன்றதொரு போராட்டம் நேற்று(மார்ச் 19,2013) சில மென்பொருள் பணியாளர்களால் DLF மென்பொருள் பூங்கா முன் நடத்தப்பட்டது, அதில் 300க்கும் அதிகமான மென்பொருள் பணியாளர்கள் கலந்து கொண்டு இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனபடுகொலை விசாரணை வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், இந்திய அரசு இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில், தரகராக செயல்பட்டு ஐநா தீர்மானத்தை மேலும் நீர்த்து போக செய்துள்ளது. இதையெல்லாம் இந்தியா இலங்கை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு செய்துவருகின்றது. தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல், இனப்படுகொலை இலங்கை அரசுடன் சேர்த்து நிற்கும் இந்திய அரசை மென்பொருள் பணியாளர்களாகிய நாங்கள்
கண்டிக்கின்றோம்.
இந்திய அரசுக்கும், பன்னாட்டு சமூகத்திற்கும் மென்பொருள் பணியாளர்களாகிய எங்களது கோரிக்கைகள் :
1. இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நடத்து.
2. ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதி.
3. ஈழத்தமிழர்களிடம் தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து.
மென்பொருள் பணியாளர்களாகிய எங்களது இந்த போராட்டம் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத்தொடருடன் முடியாது, இலங்கையை புறக்கணிக்கும் போராட்டத்தை நாங்கள் வெகு தீவிரமாக எடுக்கப் போகின்றோம், இந்த போராட்டமான
தமிழகத்தில் வர்த்தகமாக வரும் இலங்கை பொருட்களை புறக்கணிப்பது, இலங்கையில் சுற்றுலாவை புறக்கணிப்பது, இலங்கை அணி வீரர்கள் பங்கு கொள்ளும் IPL கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது என எல்லா தளங்களில் நிகழும்.
போராட்டக் காட்சிகளின் தொகுப்பு:
No comments:
Post a Comment