“The Tragedy of Mankind is not the Brutality of Few but the Silence of Many”‐ Martin Luther King Jr.

Thursday, January 12, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தை நடத்திய வன்முறை கொலையாளிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பசுபதிபாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்புவகித்து அரசியல் பாணியாற்றினார். அத்துடன், தலித் அமைப்புகளோடும் தமிழ்த்தேசிய அமைப்புகளோடும் பல களப் பணிகளை ஆற்றினார்.

ஈழத்தமிழரின் உரிமைகளுக்காகவும் தோழமை இயக்கங்களோடு சேர்ந்து குரல் எழுப்பினார். இந்தக் கொடூர படுகொலை சம்பவத்தின் முதல் நாள் தேனி நகரத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாநிலையிருந்து போராட்டம் நடத்தினார்.

இவ்வாறு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏழை-எளியோருக்காகவும் ஈழத் தமிழருக்காகவும் போராடிவந்த பசுபதிபாண்டியன் அவர்களை சமூக விரோதக் கும்பல் படுகொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் போராடுகிற தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் சுற்றுப் பயணங்களின்போதும் போராட்டங்களின்போதும் போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை. பொது இடங்களில் கொடியேற்றுகிற நிகழ்ச்சியின்போதும் சுற்றிவளைத்து கல்வீசித் தாக்குவதும், நாட்டு வெடிகுண்டுகளை வீசுவதும் படுகொலை செய்வதுமான நடவடிக்கைகள் தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு எதிராக மட்டுமே நிகழ்ந்து வருகின்றன.

தியாகி இமானுவேல்சேகரன், மேலவளவு முருகேசன் படுகொலை முதல் பசுபதி பாண்டியன் படுகொலை வரை அண்மைக்கால நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்கிற முறையிலும் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற வகையிலும் அவருக்கு காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்குவதில்லை என்கிற நிலையே உள்ளது. ஆகவேதான், இந்தப் படுகொலையும் சமூக விரோதிகளால் மிக இலகுவாக செய்யப்படுகிறது.

பசுபதி பாண்டியன் அவர்களின் மறைவால் பெரும் துக்கத்தில் ஆளாகியுள்ள அவரது பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடலை கட்டுப்பாட்டுடன் நல்லடக்கம் செய்திட அவரது இயக்கத் தொண்டர்கள் முன்வரவேண்டும். அதுவே அவருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். சமூக விரோதிகள் திட்டமிட்டே நல்லடக்க நிகழ்ச்சியிலும் வன்முறையை தூண்ட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் நல்லடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

http://www.thiruma.in/2012/01/blog-post_11.html

0 comments:

Post a Comment