Tuesday, August 14, 2012

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்



இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.



சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.






ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.






அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.





ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.


மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.








புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.








முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.





















**********************






1 comment:

  1. nice job..... all the best .... i will also do my best for people... save tamil

    ReplyDelete