Friday, June 3, 2011

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் கழகம் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னனி மனித உரிமை அமைப்புகள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த மன்றத்தின் உருவாக்க கூட்டத்தில், Save Tamils இயக்கம் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிய பின், சனல் 4 செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்ற காணொளிகள் திரையிடப்பட்டன.




இதை தொடர்ந்து ஐ.நா நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்களும், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து திரு. கண குறிஞ்சி அவர்களும் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பேராசிரியர் பால் நியூமன் அவர்களும் விளக்கிப் பேசினார்கள்.

பின்னர் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் இம்மன்றத்தின் தேவை குறித்தும் பின்வரும் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழினப் படுகொலைதான் நடந்துள்ளது. கடந்த நூற்றாண்டு மனித நாகரிகத்திற்கு ஏராளமானப் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு மனித நாகரிகத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையையே இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி கொன்றதன் மூலம் இலங்கை அரசின் நோக்கமானது இலங்கையில் தமிழர்களை இல்லாது ஒழிப்பதே என்று தெள்ளத் தெளிவாகின்றது.

அண்மைக் காலங்களில் மனிதகுலத்திற்கு எதிரான பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன, ’தட்டிக் கேட்பாரின்றி தாங்கள் நினைத்த எந்த நாட்டுக்குள்ளும் நுழையலாம், நினைத்ததை எல்லாம் செய்யலாம்’ என்ற நிலை உருவாகியுள்ளது. இதை மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியதன் மூலம் இதை ஒரு முன்மாதிரியாக உருவாக்கியுள்ளன ஒடுக்குமுறை அரசுகள். இது தமிழர் பிரச்சனை அல்ல. இது ஒரு ஜனநாயகம் மற்றும் மனித குலத்திற்கானப் பிரச்சனை. இந்த ’இலங்கை முன்மாதிரியை’ இந்தியாவிலும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

இக்காலகட்டத்தில் மக்களின் மனித நேய உணர்வையே அழித்து வருகின்றன அரசுகள். இந்த மன்றத்தின் வாயிலாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைப் பரவலாக இந்திய மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இந்த சமூகத்தின் மனிதத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும்.



மேற்கத்திய நாடுகளில் தான் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் நடந்த அநீதிகளுக்கான நீதி விசாரணைகள் நடந்ததில்லை. எனவே, இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதன் மூலம் இனி இத்தகைய அநீதிகள் நிகழாதவண்னம் தடுக்க வேண்டும்.

இந்த ஐ.நா அறிக்கை இந்தியாவில் உள்ள முன்னணி மனித உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. இதை மிகவும் பரவலாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது.

இலங்கை முன்மாதிரியை மீண்டும் மீண்டும் பல்வேறு மக்களினங்கள் மீது நடைமுறைப்படுத்தும் அபாயமிருக்கும் இன்றைய சூழலில், போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான மன்றம் இன்றியமையாதது என்ற கருத்து எல்லோராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இம்மன்றத்தின் உடனடி வேலையாக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை அறிமுகப்படுத்தி கூட்டங்களை நடத்துவது, வாய்ப்பு இருக்கும் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது. இம்மன்றத்தை மேற்கு வங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பரவலாக்குவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் கோரிக்கைகள் இந்த மன்றத்தின் முதன்மையான கோரிக்கைகளாக முடிவுசெய்யப்பட்டுள்ளன.



ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்துள்ள இலங்கை அரசு மீது சார்பற்ற பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள சனநாயக ஆற்றல்களை நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணையை ஆதரித்து அதனை தொடர்ந்து நடத்தக் கோரியும் இந்தியா முழுவதும் உள்ள சனநாயக ஆற்றல்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 ம் ஆண்டு பதவியேற்றது முதல் இலங்கை அரசுடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.




தமிழக அரசை நோக்கி,

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்தும், போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Monday, March 21, 2011

உழைக்கும் பெண்களின் சம உரிமைக்கான நூற்றாண்டுப் பயணத்தில் எங்கே நாம்?




இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல தனியார் துறைகளிலும், அரசுப் பணிகளிலும் லட்சகணக்கான பெண்கள் ஆண்களுக்கு சமமான சம்பளத்தோடும் மற்றும் சில உரிமைகளுடனும் பணியாற்றுவதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் நூற்பாலைகளிலும் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 15 மணி நேர வேலை, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற வேலை சூழல் என எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தார்கள் பெண்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சம்பளம், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, தேர்தலில் வாக்குரிமை, பாதுகாப்பான வேலை சூழல் போன்றவற்றிற்காக கடும் போராட்டங்களை நடத்திவந்தனர். தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த கோரிக்கைகளை முன் வைத்து 15,000 பெண் தொழிலாளர்கள் திரண்டு நியூயார்க் நகர வீதிகளில் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். இந்த காலக்கட்டத்தில் பெண் தொழிலாளர்களின் சம உரிமைக்கானப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடைப்பெற்ற அனைத்துலக உழைக்கும் பெண்கள் மாநாட்டில், உலகம் முழுவதுமுள்ள பெண் தொழிளாலர்களின் சம உரிமைக்கான போராட்டத்தின் ஒரு வடிவமாக, உலகம் முழுவதும் ஒரே நாளில் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாடுவதென முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1911ஆம் ஆண்டு முதல் அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் ஒரு போராட்டத்தினமாக கொண்டாடப்பட்டது. இந்த 2011ஆம் ஆண்டு அனைத்துலகப் பெண்கள் தினத்தின் நூற்றாண்டு.

பல தொடர் போரட்டங்கள் மூலமாகவே இன்று பெண்கள் பணியிடங்களில் ஓரளவு உரிமைகளைப் பெற்றவர்களாக உள்ளார்கள். இந்த வெற்றிகளை நாம் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் இன்று அனைத்து தளத்திலும் பெண்களின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்து சம உரிமைக்கான போராட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய தருணமிது.

· இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்படுகிறாள், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் நோக்கத்தற்காக கடத்தப்படுகிறாள், 54 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள், 90 நிமிடத்திற்கு ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது, என பெண்களுக்கு எதிரான வன்முறை சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

· இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ள 43 கோடி பேர்களில் 95.9 சதவிகிதம் பெண்கள். இவர்களின் பாதுகாப்புக்காகச்வென்று ஒரு சட்டம் கூட இல்லை.

· பெரும்பாலான திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இன்னபிற ஊடகங்களும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றன

· வேலை நேரம், பணிசுமை என்பது பற்றி பேசுவதே குற்றம் என்றாகிவிட்ட இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட கார்ப்பரேட் சூழ்நிலையில், பணி சுமையால் உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களுக்கு ஆளாவதுமட்டுமல்லாமல், அனைத்து வீட்டுவேளைகளையும் தானே செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெரும்பாலான வேலை பார்க்கும் பெண்கள்.

· அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள், ஊடகத்துறை, விளையாட்டு, அரசியல் என்று எல்லாத் துறையில் பெண்கள் சரி நிகராக இருக்கின்றார்களா? அரசியலில் பெண்களுக்கு 33% சதவிகித இடஒதுக்கீட்டைச் சட்டமாக்க முடியவில்லை நமது ஜனநாயகத்தில்.

· 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைப்பார்த்த பெண்களின் நிலையில்தான் இன்று திருப்பூரில் ஆயத்தஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் நம் பெண்கள் உள்ளனர். ‘சுமங்கலித் திட்டம்’ போன்ற திட்டங்களின் பெயரில், ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த ஊதியம், மிக அதிக வேலை நேரம் என பெண்களின் உழைப்பை சுரண்டுகின்றன. அதே போல் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்களும் நடக்கின்றன.

பெண்களின் உரிமைப் போராட்டம் கடந்து வந்த பாதையைக் கொண்டாடுவதோடு, இனி போக வேண்டிய தூரத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.