Wednesday, September 18, 2013

நேரடி பண பரிமாற்றச் சட்டமும், யதார்த்தமும்....



ஆடிக் காற்றில் அதிர்ஷ்ட சேலைகள், பாதி விலையில் ஜோடி சேலைகள் என்று பல ஊர்களின் சாலைகளில் ஓடும் வாகன ஒலி நாடாக்கள் மூலமாக செய்யும் விளம்பரங்களை நாம் கேட்டிருப்போம். அதெப்படி நேற்று வரை இல்லாத அதிரடி சலுகைகள் ஆடி வந்தப் பிறகு மட்டும்? எந்த ஒரு வியாபாரியும் தன்னிடம் உள்ள சரக்கு விலைப் போகாது என்று தெரிந்த பிறகு தான், செல்லுபடியாகாதப் பொருளை தள்ளுபடியாக அறிவிப்பான். இதை அறியாத மக்கள் தான் அச்செல்லாப்பொருளை வாங்கிச் செல்வர். அதுப்போன்றே, சரக்கே இல்லாத அரசியல் வியாபாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஆடித் தள்ளுபடி திட்டத்தைப் பற்றித்தான் இக்கட்டுரை பேசவிருக்கிறது.



கட்டுரைக்குள் செல்லும் முன் சில வார்த்தைகளுக்கான பொருளை முதலில் காண்போம்.


மானியம் - மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், தொழில்துறைகள், வேளாண் பொருட்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் மின்சாரம் இவற்றில் ஏற்படும் மந்த நிலை, தொய்வு, நஷ்டம், விலைவாசி உயர்வு இதை சரி செய்யவோ அல்லது ஈடுசெய்யவோ ஒரு அரசு கொடுக்கும் தொகையே மானியம்.


நேரடி பணப்பரிமாற்றம் - மானியம் மக்களிடம் நேரடியாக சென்றடைய, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் தான் இந்த "நேரடி பணப்பரிமாற்றம்", ஆம் மக்களே ! "உங்கள் பணம் உங்கள் கையில்" இது தான் இத்திட்டத்தின் முழக்கம்.



நேரடி பணப்பரிமாற்றம் திட்டத்தின் மூலம் இனி மக்களுக்கு கொடுக்கப்படும் மானியமானது, பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் இடப்படும். இத்திட்டத்தின் அடிப்படை தேவையாக, பயனாளியின் "ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு" எடுத்துகொள்ளபடுகிறது. 26 திட்டங்களின் கீழ் மானியத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்ய, 26 பொதுத்துறை வங்கிகள், 12 கிராமப்புற வங்கிகள், சில தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன.


லஞ்சம் மற்றும் மோசடிகளை குறைக்கவும், மானியம் பெறுவோர் பற்றிய விவரங்களை எளிமையாகயாகவும், சிறப்பாக கையாளவும் மற்றும் மானியப் பரிமாற்றத்தின் போது ஏற்படும் சுரண்டல்களை தடுக்கவும் இத்திட்டம் பயன்படும் என அரசு அறிவித்துள்ளது.


பணப்பரிமாற்றம் மக்களின் முன்னேற்றத்திற்கா அல்லது தேர்தலின் முன்னோட்டத்திற்கா ?



மத்திய அரசு 2013க்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நேரடி பணப்பரிமாற்ற திட்டத்திற்கு மூல காரணிகளாக பயனாளியின், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு எடுத்துகொள்ளப்படுகிறது . ஆனால் 2013 ஜூலை வரையிலான நிலவரப்படி, 38 கோடி ஆதார் அட்டை தான் கொடுக்கப்பட்டுள்ளது, இது நமது மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு தான். அது போலவே வங்கிக் கணக்கே இல்லாத ம‌க்க‌ளும் அதிகம்.

இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வாறு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

ஆதார் அடையாள அட்டையானது 70 அல்லது 80 விழுக்காடு கொடுக்கப்பட்டு, அவற்றில் 50 விழுக்காடு வங்கிக் கணக்குடன் இணைக்கபட்டிருந்தாலே, அந்த மாவட்டங்கள் நேரடி பணப்பரிமாற்ற சேவைக்கு போதுமானதாக கருதி, மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படியாக மத்திய காங்கிரஸ் அரசின் அவசரத்தால் இதுவரை 78 மாவட்டங்களில் (இதில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களை தவிர ) இத்திட்டம் மேற்சொன்ன விழுக்காட்டின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது, இன்னும் முழுமையாக எந்தவொரு மாவட்டத்திலும், அதாவது 100 விழுக்காடு ஆதார் அட்டைக‌ளோ, வ‌ங்கி க‌ண‌க்குக‌ளோ இணைக்க‌ப்ப‌ட‌வில்லை. 65 ஆண்டு சுதந்திரத்திற்கு பின், 50 ஆண்டுக‌ளுக்கும் மேலான ஆட்சியில் காங்கிரசிற்கு திடீரென மக்களின் மேல் எப்படி, இப்படி ஒரு அக்கறை ? என்ன காரணம், இத்திட்டத்தில் எதற்காக இந்த அவசரம் ? இதோ வர இருக்கும் 2014 நாடாளமன்ற தேர்தல் தான் இதற்கான காரணமும், கரிசனமும். திட்டம் அமலில் இருக்கும் மாவட்டங்களிலேயே இன்னும் முழுமையாய் நிறைவேற்றாத போது, எதற்காக புதிய மாவட்டங்களில் அதே அரைவேக்காட்டுத்தனத்துடன் நிறைவேற்ற வேண்டும்? இதற்கான பதில் 2014 தேர்தலுக்கு முன், இந்தியாவின் பெருவாரியான மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று மக்களிடம் ஒரு பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ளத்தான்.

காங்கிரஸ் அரசின் எல்லையில்லா ஊழல், விலைவாசி உயர்வு இப்படியாக தொடர்ச்சியாக அதிருப்தியில் இருக்கும் மக்களைக் கவர, ஜனவரி 1 2013 முதல் தர்க்கமே(லாஜிக்) இல்லாம காட்டி வரும் ஒரு வேடிக்கை மற்றும் கவர்ச்சி படம் தான், இந்த நேரடி பணப்பரிமாற்றம்.

கிராமப்புறங்களில் வங்கிச் சேவை ?
கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கை உபயோகப்படுத்த தெரியாது அல்லது வங்கிக் கணக்கே கிடையாது என்று சொல்வதைவிட, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளே கிடையாது என்பது தான் உண்மை. இதுதான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களின் நிலை.

இதற்கு என்ன காரணம் ? தனியார் வங்கிகள், கிராமப்புறங்களில் கிளைகள் திறக்க, ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தும் அதை அவர்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதும், வங்கி ஊழியர்கள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஊர்களுக்கு சென்று வேலை செய்ய விரும்பாததும் ஒரு காரணம்.

ஒரு புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் உள்ள 11 பெருநகரங்களில் மட்டும், இந்தியாவின் மொத்த வங்கிக் கிளைகளில் 11% உள்ளது. ஆனால், ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு வெறும் 3 வங்கிகள் மட்டுமே உள்ளது. வங்கிகளின் தற்போதைய கட்டமைப்பை மேம்படுத்தாமல் இருப்பதும், இம்மாதிரியான கிராமப்புறங்களில் வங்கிகளை தொடங்காமல் இருப்பதும் இத்திட்டத்தின் மிகப்பெரிய ஓட்டை.


அன்றாடம் கஷ்டப்படும், பின் தங்கிய ஏழை மக்கள் நேரடிப்பயன்பெறுவ‌து தான் இதன் அடிப்படை நோக்கமே. ஆனால் இத்திட்டம் அப்படிப்பட்ட மேற்சொன்ன பின்தங்கிய கிராமங்களிலோ அல்லது ஊர்களிலோ முதலில் செயல்படுத்தப்படவில்லை. அன்றாடம் பசியால் வாடும் மக்களே பசி ! பசி ! என்று வயிற்றைத் தட்டாமல் இருக்கும் போது, இத்திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்திவிட்டு வெற்றி ! வெற்றி ! என்று மார் தட்டுவதில் எவ்வித பலனோ, நியாயமோ இல்லை.

பசிக்கு மாற்று பணமா ?
பொதுவிநியோக முறை இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்தின் உதவியுடன், அந்தந்த மாநில நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வழங்குகிறது. ஆனால் நேரடிப் பணப்பரிமாற்ற திட்டத்தின் விரிவாக்கமாக பொதுவிநியோக பொருட்களுக்கும் மாற்றாக பணம் கொடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகத்தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதாவது திறந்த அல்லது நேரடிச் சந்தையில் அனைவரும் சென்று, சந்தை விலைக்கே பொருட்கள் வாங்குவதென்பது இயலாத காரியம், அதுமட்டுமில்லாது பொது சந்தையின் விலையேற்றத்திற்கேற்ப மானியத்தொகையின் அளவு உயர்த்திதரப்படும் போன்ற உத்தரவாதங்களை அரசு அளிக்காதென்பதும், தற்போதைய பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இவற்றின் விலையேற்றும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே தாரைவார்த்து கொடுத்ததை போல, எதிர்காலத்தில் திறந்த சந்தைகளுக்கும் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை விட்டுவிட்டு, மானியம் கொடுத்தும் லாபம் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்தபின்னர், கொடுக்கப்படும் மானியம் அனைத்தையும் முற்றிலுமாக முடக்குவதே இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. "எந்த ஒரு பொருளுக்கான விலையும் பணமாகலாம், ஆனால் ஏழை மக்களின் பசிக்கான விலை பணமாகாது" என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.



ஆணாதிக்க சமூகத்தில், அவசரகதித் திட்டங்கள்
ஆண்களும், பெண்களும் சமம், ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களும் செய்கின்றனர் என்று நாம் ஒரு புறம் பேசிக்கொண்டாலும் கூட, இன்னும் நமது இன்றைய வீடுகள் பலவற்றில், ஆண்கள் தான் அத்தனை முடிவுகளையும், பணப்பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் மற்றும் உரிமைப் பெற்றவராக உள்ளனர். இத்திட்டத்தின் வாயிலாக, கொடுக்கப்படும் மானியம் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் தான் சென்று சேரும். இந்திய குடிமகன்களுக்கு குடியை ஊக்குவித்து, மக்களைத் தவறான பழக்கத்திற்கு அடிமையாக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களிலெல்லாம், இத்திட்டத்தின் வாயிலாக கொடுக்கப்படும் மானியமானது, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள குடிமகன்கள் மூலமாக டாஸ்மாக் கல்லாக்களையே நிரப்பும். இதை ஏன் என்று கூட கேட்க முடியாத நிலையில் உள்ள ஏழை மற்றும் நடுதரவர்க்கப் பெண்களும், குழந்தைகளும் இதன் காரணமாக பசியால் வாடும் அவலநிலையும் ஏற்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், இத்திட்டத்தைச் சார்ந்த சமுதாயத்தின் எதார்த்த நிலைகளையும் உணர்ந்து செயல்படக்கூடிய கடமை, அரசிற்கு வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறோம்.

எப்போது மானியத்தொகை மக்களுக்கு கிடைக்கும் ?
தற்போதைய அரசின் அறிவிப்பின் படி, பயனாளிக்கு வழங்கும் மானியத்தொகை எப்போது அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்ற ஒரு தெளிவான விவரம் அறிவிக்கப்படவில்லை. ஏன் என்றால் எரிவாயு உருளையை தவிர மற்ற எந்த ஒரு மானியப் பொருளுக்கான விலையை முன்கூட்டியே கிடைக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஏன் என்றால் மானியத்தொகை முன்னதாகவே கொடுக்கப்பட்டுவிட்டாலோ அல்லது தாமதமாக கொடுத்தாலோ அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, முன்னதாகவே மானியத்தொகை வங்கிக்கணக்கில் இடபட்டால், மானியப் பொருளை உபயோகபடுத்தாத நபர்களும் மானியத்தொகையை அனுபவிக்கும் நிலை ஏற்படும். ஒருவேளை மானியப் பொருளை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகோ அல்லது காலம் தாழ்த்தியோ மானியத்தொகை கொடுத்தால் அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். ஒரு யோசனையாக, பயனாளி அப்பொருட்களை வாங்கிய சில மணி நேரங்களுக்குள் அத்தொகை கிடைக்க வழிவகை செய்தால் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் மானியத்தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் சென்றடைகிறதோ அதைப் பொறுத்தே இத்திட்டத்தின் வெற்றியின் அளவீடு அமையும். மக்களளை காலம் தாழ்த்தாமல் பயனடையச் செய்ய, எந்த ஒரு வாக்கு வங்கியையும் எதிர்பார்க்காமல், அரசு இத்திட்டத்திற்கான போதுமான கால அளவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமிழக அரசின் நிலை ?
ஜூலை 1 2013 முதல், இரண்டாவது கட்டமாக, இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகத்தின் அரியலூர், புதுகோட்டை மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆட்சியின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளிலிருந்து புறக்கணித்து, மத்திய அரசு இத்திட்டத்தில் தன்னிச்சைப் போக்குடன் செயல்படுவதாகவும், மேலும் பொது விநியோக முறை, எரிவாயு மற்றும் உரங்கள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது எனவும் கூறி, தற்காலிகமாக தமிழக அரசு இத்திட்டத்தை புறக்கணித்துள்ளது.


கல்வி ஊக்கத்தொகை, ஓய்வூதிய உதவி, தாய்சேய் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் மூலமாக அளிக்கப்படும் உதவித்தொகையை பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தும் முறையை தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. ஆதலால், தமிழக அரசு, இத்திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் மூலமாக நிறைவேறினால் இன்னும் விரைவாக பயனாளியிடம் மானியத்தொகை சென்றடையும் என்ற கருத்தையும், மேற்ச்சொன்ன குறைகளை நீக்கி, இத்திட்டத்தின் அணுகுமுறைகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

எதை நோக்கி அடுத்து ?
அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் துறைகளும் இத்திட்டத்தில் பங்கு பெறுவதால் தனிநபர் விபரங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசு தன் கதவுகளைப் பெருவாரியாக தனியார் துறைகளைகளுக்கு திறந்துவிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் தற்போதுள்ள நியாய விலைக் கடைகளில் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படுமா என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் மத்திய அரசிடம் இல்லை. 1991 ஆம் ஆண்டு இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைளிலிருந்து மாறி, தாராளமயமக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலை நடைமுறைபடுத்திய பின், இன்று கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளெல்லாம் எப்படி தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனகளுக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறதோ, அதை போன்றே மத்திய காங்கிரஸ் அரசு இத்திட்டத்தின் மூலமாக மேலும் தனியாருக்கு தனது சேவையைக் கூட்டிக் கொடுத்துள்ளது.


பொது மக்களும், இயக்கங்களும் இது போன்ற தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்த‌ வேண்டும்.

ஆசாத்
சேவ் தமிழ்சு இயக்கம்

மூலப்பதிவு :
http://www.itecentre.co.in/node/190


பின் குறிப்பு: மூலப்பதிவை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், மேலும் தகவல்களை சேர்த்து வெளியிட்டு இருப்பதால் இது மொழியாக்க கட்டுரை என குறிப்பிடப்படவில்லை...

Tuesday, September 17, 2013

ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று - மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்




த‌ஞ்சை ரெங்க‌ராஜ் க‌லைக்குழுவின‌ரின் ப‌றை இசையுடனும், க‌ரகாட்டத்துடனும் "பன்னாட்டு இளைஞர் மாநாட்டின்" மாலை அமர்வு தொடங்கிய‌து. அதற்கு முன்பாக, சுருக்கமானதொரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. மாநாட்டிற்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளும் இதில் ப‌ங்கேற்று, மாநாட்டு செய்திக‌ளை ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு அளித்த‌ன‌ர்.



மாலை சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிசுட்டு கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர். தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் உரைக்குறிப்புகளிலிருந்து சில.



சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்:




2009 இலங்கையில் நடந்த இறுதி கட்ட போருக்கு பிறகு ஈழப் போராட்டம் முடிவடைந்து விட்டதாக கருதினர். ஆனால் 2013 மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஈழப்போராட்டம் இன்னும் முடியவடையவில்லை என்பதை மெய்ப்பித்து காட்டியது. 2009க்கு முன்னர் ஈழத்தமிழர்களின் தாகமாக இருந்த சுதந்திரத் தமிழீழம் இன்று உலகத் தமிழர்களின் தாகமாக மாறியிருக்கின்றது. எந்த‌ ஒரு தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்திற்கும் கால‌ எல்லை கிடையாது, ஆத‌லால் அடுத்த‌ த‌லைமுறைக்கு நாம் தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்தை கைய‌ளித்த‌ல் முக்கிய‌மான‌து, இந்த‌ நோக்க‌த்தை மைய‌ப்ப‌டுத்தியே இந்த "ப‌ன்னாட்டு இளைஞ‌ர் மாநாட்டை" த‌மிழீழ‌த்திற்கான‌ மாண‌வ‌ர் போராட்ட‌க்குழுவுட‌ன் சேர்ந்து சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் முன்னெடுத்துள்ள‌து என்று மாநாட்டின் நோக்க‌த்தை கூறினார்.



தோழர் வைகோ:



அந்தப் பாலகன் என்ன செய்துவிட்டான்? அந்தப் பாலகனின் கண்கள் தான் மாணவர்களைத் தட்டியெழுப்பியது, சோர்ந்து கிடந்த போராட்டத்திற்குப் புது வீரியம் பாய்ச்சியுள்ளது...



ஓ வாலிபனே வா! இதில் இணைந்துக் கொள்! ஓ அன்னியனே வெளியேறு! தாயக ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறு! என்று முழக்கமிட்டு தெருவில் இருங்கிப் போராடினார்கள் இந்த மாணவர்கள்.


தமிழினத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்த இந்திய அரசைத் தூக்கியெறியும் தீப்பொறி இளைஞர்களிடம் இருந்துதான் புறப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய நாடுகளை தற்காலிகமாக நீக்கி வைப்பர்... அப்படி நைஜீரியா, பாகிசுதான், பிஜி , தென் அப்பிரிக்கா போன்ற நாடுகள் நீக்கப்பட்டுள்ளன, பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போல சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய இலங்கையை நீக்க முயற்சிக்காமல், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இந்தியா ஏன் முயற்சிக்கிறது? கூட்டுக்குற்றவாளி என்பதாலா?



இந்தியா ஈழப்போருக்கு ஆயுதங்கள், ரேடார்கள், போர்க்கப்பல்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. அதனால் இந்தியாவும் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் கூட்டுக்குற்றவாளி தான். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்பது மட்டுமல்ல நமது கோரிக்கை, ஏனென்றால் கடைசி நிமிடத்தில் அங்கே பிரதமர் செல்லவில்லை என்று சொல்வார் உடனே இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் இதை வெற்றி என்று கொண்டாடுவார்கள். அதற்கு தாம் தாம் காரணம் என்றும் சொல்வார்கள். காமன்வெல்த் மாநாடே இலங்கையில் நிகழக்கூடாது என்பதே நமது பிரதானக் கோரிக்கை.அங்கு ஒருவேளை காமன்வெல்த் மாநாடு நடந்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு இலங்கை சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்சே தான் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் ஆவார். அப்படியிருக்கும் பொழுது நாம் கோரியுள்ள இனப்படுகொலைக்கான சுயேச்சையான பன்னாட்டு நீதி விசாரணை எப்படி நிகழும்? எப்படி நமக்கு நீதி கிடைக்கும்? சுதந்திர தமிழீழம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்பதில் முதலில் இருந்து ஒரே நிலைப்பாடோடு முன்னெடுத்துச் சென்றது நாங்கள் தான். அரசியல் காரணமாக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இதில் நாங்கள் சமரசம் செய்துகொண்டதே இல்லை. மக்கள் விருப்பத்தின் படி ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள் தான் முதலில் பதிவு செய்தோம்.ஈழம் மலரும் வரை எங்கள் அர்ப்பணிப்பான போராட்டம் தொடரும்.


மறுக்கப்பட்டாலும் நீதி அழியாது. நமது இளைஞர்கள் மறுக்கப்பட்ட நீதியை ஈழத் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்:




உகாண்டா , ருடிசியா, நைஜிரியா , தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை மதிக்கவில்லை என ஏற்கனவே காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட வர‌லாறுகள் உண்டு, எனவே அது போல பல மடங்கு குற்றம் புரிந்த இலங்கையும் காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும்.
காம‌ன்வெல்த் அமைப்பு நாடுக‌ளின் சாற்றுரைக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் த‌குதிக‌ளான‌, சனநாய‌க‌ம், பாதுகாப்பு, ச‌கிப்புத்த‌ன்மை, ப‌த்திரிக்கைச் சுத‌ந்திர‌ம் போன்ற‌ எந்த‌ த‌குதியும் இல‌ங்கையில் துளியும் இல்லாத பொழுது எப்படி காமன்வெல்த் அமைப்பு இன்னும் இலங்கையை உறுப்பு நாடாக வைத்துள்ளது? என்ற கேள்வியை த‌ன‌து உரையில் ப‌திவு செய்தார் தோழர் ஜவாஹிருல்லா.





எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி:



மாணவர்கள் போராட்டம் ஈழப் போராட்டப் பாதையில் புது நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.



அண்மையில் ஐநா மனித உரிமை மன்றச் செயலாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்றிருந்தார், அங்கு நடப்பதை ஆய்வு செய்துவிட்டு, அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது என்றார். இதைச் சொன்னதால் இலங்கை அமைச்சரே நவநீதம் பிள்ளையைப் பற்றி கொச்சையாகவும், கேவலமாகவும் பரப்புரைச் செய்துள்ளார். இது போதாதா? இலங்கை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேறு என்ன தகுதி வேண்டும்? ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் இந்திய மன்மோகன் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக பிஜேபி இருக்க முடியாது, அப்படியான மாற்றுக்கொள்கை அக்கட்சிக்கு துளியும் கிடையாது. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்துகிற‌ தமிழ்நாட்டில் தமிழர் நலனில் அக்கறையுள்ள மூன்றாவது அணி இந்தியாவில் உருவாக வேண்டும். அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.



தோழர் வீரபாண்டியன் - இந்திய கம்யூனிசுட்டு கட்சி:



சர்வாதிகாரத்திற்காக ஒரு நாடு தடை செய்யப்பட வேண்டுமானால் இலங்கை தான் முத‌லில் தடை செய்யப்பட வேண்டிய நாடு. நான்கு மந்திரிகளும் நான்கு அதிகாரிகளும் மட்டுமே முடிவு எடுக்கின்றனர்.இந்திய‌ மக்களின் உரிமைகளும், ஜன‌நாயகமும் காங்கிரசு அரசால் குழி தோண்டி புதைக்கப் படுகின்றன.



குணசேகரன் - மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்:



நாங்கள் மலேசிய அரசும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என போராடிக் கொண்டு இருக்கிறோம். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மலேசிய பாராளுமன்ற கூட்டத்தில் இதை வலியுறுத்தி பேச உள்ளோம். ஆனாலும் மலேசிய அரசு கலந்து கொள்ளும். காரணம் மலேசிய ஆளும் அரசாங்க‌த்தில் உள்ள மந்திரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையில் முதலீடு செய்து உள்ளனர். நான் எதிர் கட்சியில் இருந்து கொண்டு இது போல் பேசுவதால் மலேசியாவுக்கான இலங்கை தூதர் என்னை சந்திக்க இரண்டு முறை அழைப்பு விடுத்தார். நான் செல்லவில்லை, இதுபோல் அழைப்பு கிடைத்து செல்லுபவர்களுக்கு 50,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை இலங்கை தூதர் பரிசாக கொடுப்பார். இப்படித்தான் இலங்கை அரசு தனக்கு ஆதரவாக பேச பத்திரிக்கைகளையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறது.




சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா:



இந்திரா காந்தி போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவளித்தார். இராஜிவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தங்களுக்கு மெனக்கெட்டார் என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் ஈழ விடுதலைக்கான அக்கறைகளோ, ஈழத்தமிழர்களின் மீதான பாசமோ கிடையாது. இந்திய விரிவாதிக்க நலன்களையொட்டியும், இலங்கை ஒரு போதும் எந்தவொரு வல்லாதிக்கத்தின் கீழும் சென்று விடக்கூடாது என்ற கவன ஏற்பாடுமே, இந்திரா காந்தியின் புலிகள் ஆதரவு நடவடிக்கைகளுக்கான காரணமாக இருந்தன.



ராஜபக்சே இந்தியாவுக்கான போரைத் தான் நாங்கள் நடத்தினோம் என்று பகிரங்கமாக அறிவித்தாரோ, அதைப் போலத் தான், இலங்கை அரசின் நலனுக்காகவும், இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகவுமே, இந்திய அரசு தான் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகவே காமன் வெல்த் அமைப்புகளின் உறுப்பு நாடுகளிடம் "இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது" என்று கோரிக்கை வைப்பதை விட‌ அக்கோரிக்கையை இந்தியாவை நோக்கி வைப்பதே முக்கிய‌மானது.


பாதிக்கப் பட்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்வாதாரங்க‌ளை பாதுகாக்க ஈழத்தில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகம் அமைப்பதையோ அல்லது அங்கீகரிக்கப் பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பின் மேற்பார்வையிலான பாதுகாப்பையோ உறுதி செய்வதை நோக்கித் தான் நமது அடுத்த கட்ட முன்னகர்வுகளும், போராட்டங்களும் அமையப் பெற வேண்டும். இங்குள்ள‌ அரசியல் இயக்கங்களும் மாணவர் அமைப்புகளும் இதை பரிசீலித்து, அதற்கான‌ வேலைகளை முன்னெடுக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான நடவடிக்கையல்ல, தமிழர் தாயக நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். நமது இறுதி இலக்கு எப்பொழுதும் தமிழீழ விடுதலையே.



Monday, September 16, 2013

“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது"




“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது" -
என்கிறது பாப்லோ நெருதாவின் கவிதைக் குறிப்பொன்று.



இலங்கை அரச படைகளின் சப்பாத்துக் கால்களால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள். அடுத்த முறை, போராட்டம் இன்னும் வலுவடைந்ததாக இருக்கப் போகிறது. வீரியமானதாக இருக்கப் போகிறது. அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கப் போகிறது. இனப்படுகொலையின் ஆறா வடுக்களை அவர்கள் மறக்கப் போவதில்லை"



டெல்லி ப‌ல்க‌லைக் க‌ழ‌க மாண‌வ‌ர் மிருத்ஞ்ஜெய், சென்னை ப‌ன்னாட்டு இளைஞ‌ர் மாநாட்டுக்கு அனுப்பிய‌ க‌டித‌மொன்றில் இவ்வாறாக‌ குறிப்பிட்டிருந்தார்.



இனப்படுகொலை நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமீழழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் சேவ் தமிழ்சு அமைப்பும் இணைந்து நடத்திய பன்னாட்டு இளைஞர் மாநாடு, கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா நகரில் விஜய் ஸ்ரீ மண்டபத்தில் புதிய உத்வேகத்துடன் நடந்து முடிந்தது.


தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழுவினரின் பறை முழங்க காலை அமர்வு எழுச்சியுடன் துவங்கியது. பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் நூற்றுக்கணக்கில் மாநாட்டு அரங்கில் குழுமியிருந்தனர்.



தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர்.மணிவண்ணன், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியிருந்தனர்.

தோழர் இளையராஜா


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் இளையராஜா, துவக்க உரையை பதிவு செய்தார். கடந்த நான்கு பத்தாண்டுகளில் மாணவர் போராட்டங்களின் பங்கு குறித்த பதிவு செய்த தோழர் இளையராஜா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தடுத்த முன்னகர்வுகளை நோக்கி மாணவர் எழுச்சி இடம் பெறல் வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்து, காலை அமர்வுக்கு தலைமை தாங்கிய தோழர் திவ்யா பேசினார்.இவ்வமர்வில் பங்கேற்ற பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த‌ மாணவத் தலைவர்களின் உரைகளிலிருந்து சில குறிப்புகளை மட்டும் சுருக்கமாக‌ இங்கே கொணர்ந்திருக்கிறோம்.





தோழர் திவ்யா



இந்தித் திணிப்புக்கெதிரான மொழிப்போர் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களின் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் ஈழ விடுதலைக்கான மார்ச் மாத போராட்டம் ஆகும். பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மாநாட்டிற்கு மாணவர்கள் வந்துள்ளார்கள், இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவப்போராளிகள். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்பது பிரித்தானிய காலனி அடிமை நாடுகளின் கூட்டமைப்பு, அதில் இருந்து பிஜி நாடு இராணுவ ஆட்சி நடப்பதால் நீக் கி வைப்பட்டுள்ளது, இலங்கையில் ஒன்றரை இலட்சம் மக்களை அரசே கொன்றுள்ளது, ஆனால் அதைக் கூட்டமைப்பில் இருந்து விலக்காமல் அங்கேயே காமன்வெல்த் மாநாடு நடத்துவது எப்படி சரியாகும்? பாலின, இன, மத, மொழி ரீதியாக மக்களை ஒடுக்கினால் அதன் அடிப்படையில் அந்த நாடு/அரசு வெளியேற்றப்படும் என்று காமன்வெல்த் கொள்கை சொல்கிறது, அப்படியானால் இலங்கை? இந்த மாணவர்கள் கூட்டமைப்பு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வர அரசு முனைப்புக் காட்டவில்லை, மாற்றம் வரும் வரை மாணவர்களும் விடப்போவதில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்.இந்தக் கோரிக்கையில் மாணவர்கள், இளைஞர்கள் நாம் வெற்றியடைவோம்.




தோழர் இளங்கோ



ஈழத்தில் போருக்குப்பின் முடங்கிக் கிடந்த மக்கள் எழுந்து நிற்க மாணவர்கள் போராட்டம் துணை நின்றுள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு நீண்ட நெடிய போராட்டம், அதற்கு நீடித்த வரலாறு உண்டு, தோல்விகள் நமக்கு பலப் படிப்பினைகளைத் தந்துள்ளது. இங்குள்ள அரசியல் கட்சிகள் தங்கள் நலன் கருதி தான் ஈழ விடுதலை விடயத்தைக் கையிலெடுத்தார்கள், அல்லாமல் அக்கறையோ வெற்றிக்கான வழிமுறையோ மக்களிடம் செய்தியைக் கொண்டு சென்று வெறும் ஆதரவோடு நில்லாமல் தங்களுக்கான போராட்டமாக அதை நகர்த்தவோ முயற்சிக்கவேயில்லை.



ஈழ விடுதலையில் அல்லது தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் எதிர்ப்பு என்பது ஏதோ இராசீவ் காந்தியின் சாவிற்கு பின்பு வந்தது போன்று சித்தரிக்கப்படுகிறது, அப்படி அல்ல, தமில்நாட்டிலுருந்து ஒன்றரை நூற்றாண்டு காலம் முன்பே கொண்டுசெல்லப்பட்டு தேயிலைத் தோட்டத்தைக் கட்டியெளுப்பிய மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை அரசிடம் இருந்து 1964ம் ஆண்டில் பாதிபேரை (சுமார் 5.1/2 இலட்சம் பேர்) திரும்பப் பெற்றபோதும், கட்சத் தீவை 1974ம் ஆண்டுத் தாரவார்த்தபோதும் இந்திய அரசு தமிழர் நலனில் எப்படியான நிலைப்பாடு எடுத்துள்ளது என்பது நமக்குப் புரியவேண்டும்.அரசியல் என்றாலே தீங்கு என்று ஒதுங்கியிருந்த மக்களை, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அரசியலை எடுத்துச் சென்று அரசியல்படுத்தியதன் விளைவாக சமூகத்தில் அரசியல் மாற்றம் குறித்த சிந்தனையை இன்னமும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்கள்.



எத்தனை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து மாணவர்கள், இளைஞர்கள் நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.





அருணனக்

பொது செயலாளர்- சனநாயக மாணவர்கள் சங்கம் (தெலங்கானா)



மக்கள் விடுதலை போராட்டங்கள் ஓங்குக



இலங்கை பாசிச அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த பிறகு, இந்தியாவிலுள்ள சனநாயக சக்திகளும், குறிப்பாக தமிழக மக்களும், மாணவர்களும் "இலங்கையில்

நடந்தது போரல்ல, இனப்படுகொலை" என்ற கோரிக்கையை உலகின் முன்வைத்து போராடினார்கள். அதே நேரம் 2013 மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைக் குழுவில் "40,000 தமிழர்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்ற அறிக்கையை" தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராடினார்கள். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட பின்னர் இனப்படுகொலையாளி இராஜபக்சேவிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது, தொடக்கத்தில் 8 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தது இந்த போராட்டத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறிய‌து. இந்த உண்ணாவிரதம் சங்கிலி தொடர் விளைவாக தமிழகமெங்கும் மாணவர்களின் தொடர் போராட்டத்தையும், இந்தியாவெங்கும் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தையும் நடத்தியது. மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்புகளையும், கொலைகார‌ன் இராஜ‌ப‌க்சேவின் உருவ‌ பொம்மைக‌ளை எரித்தும், இந்த‌ மாண‌வ‌ர் போராட்ட‌த்தில் இந்தியாவெங்கும் உள்ள‌ ச‌ன‌நாய‌க‌ ஆற்ற‌ல்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌ கோரிக்கை வைத்து கையெழுத்து இய‌க்க‌ம் ந‌ட‌த்தியும் தொட‌ர்ந்து போராடினார்க‌ள்.





த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம், இந்தியாவின் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளிலுள்ள‌ மாண‌வ‌ர்க‌ளையும் க‌வ‌ர்ந்த‌து, இதே போல‌ ம‌க்க‌ள‌து கோரிக்கைக‌ளுக்கு த‌லைமை ஏற்று சன‌நாய‌க‌ வ‌ழியில் போராடும் ப‌டி தூண்டிய‌து. தெல‌ங்கானா மாநில‌த்திற்கான‌ ம‌க்க‌ள‌து கோரிக்கைக‌ளின் தொட‌க்க‌த்தில் இருந்தே (1960க‌ளில் இருந்து) மாண‌வ‌ர்க‌ள் முன்னிலையில் இருந்து போராடி வ‌ந்தார்க‌ள். அதே போல‌ இப்பொழுது ந‌ட‌ந்த‌ போராட்டங்க‌ளிலும் மாண‌வ‌ர்க‌ளே முன்னிலை வ‌குத்து முன்னெடுத்து சென்றார்க‌ள். த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம், தெல‌ங்கானா மாண‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து

போராடுவ‌த‌ற்கான‌ உத்வேக‌த்தை வ‌ழ‌ங்கிய‌து. த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளையும், ஒருங்கிணைத்து உல‌கிட‌ம் ச‌ரியாக‌ எடுத்துச் சென்ற‌து த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம். அதே போல‌ இல‌ங்கை அர‌சால் தமிழர்கள் க‌டுமையாக‌ ஒடுக்க‌ப்ப‌ட்டு, கொல்ல‌ப்ப‌ட்டு, இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌தை இந்தியா முழுக்க‌ எடுத்துச் சென்ற‌து மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம். அதே போல‌

மாண‌வர் இய‌க்க‌ங்க‌ள் ச‌ரியான‌ முறையில் செய‌ல்ப‌ட்டு த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையில் ப‌டும் இன்ன‌லையும், இல‌ங்கை அர‌சின் பாசிச‌ முக‌த்தையும் கடைக்கோடி ம‌னித‌னுக்கும் எடுத்துச் சென்ற‌து.



த‌ங்கு த‌டையின்றி துணிச்ச‌லுட‌ன் இந்திய‌ அர‌சுக்கு எதிரான‌ போராட்ட‌த்தை த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தினார்க‌ள், அது ம‌ட்டுமின்றி அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை த‌ங்க‌ள் போராட்ட‌த்தில் இணைந்து

ம‌னித‌த் த‌ன்மைய‌ற்ற‌ இல‌ங்கை அர‌சை க‌ண்டிக்க‌வும் , இந்தியாவை ஐநா ம‌னித‌ உரிமை குழுவில் இல‌ங்கைக்கு எதிராக‌ வாக்க‌ளிக்க‌வும் செய்யும் ப‌டி நிர்ப்ப‌ந்தித்த‌ன‌ர்.



ச‌ன‌நாய‌க‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ம் (தெல‌ங்கானா) போராடி வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தையும், மாண‌வ‌ர்க‌ளுடன் தோழ‌மையை ஏற்ப‌டுத்துவ‌திலும் முன்னின்று ப‌ணியாற்றிய‌து. இத‌ற்காக‌ Foreign Languages University-யில் ஆங்கில‌த்திலும், பிற‌ மொழிக‌ளிலும் ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளை ஒருங்கிணைந்து ந‌ட‌த்திய‌து, இந்த நிகழ்வுகள் ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிடுத‌ல், ஊர்வ‌ல‌ம் செல்லுத‌ல்,

க‌ருத்த‌ர‌ங்‌குகளை ந‌ட‌த்துத‌ல் மூல‌ம் ந‌டைபெற்ற‌து, ம‌க்க‌ளின் ச‌ன‌நாய‌க‌ கோரிக்கைக‌ள் இல‌க்கை அடையாத‌ வ‌ரை அவ‌ர்க‌ளின் போராட்ட‌ம் ஓய்வ‌தில்லை.



ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ஓங்குக‌...



பெத்த‌ன‌வேல் IIT சென்னை


மாணவர்கள் இது பொன்ற போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாரயணன் , சிவசங்கர மேனன், நிருபமாராவ் போன்ற இடங்களில் தமிழர்கள் இருந்திருந்தால் தமிழின படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தமிழர்கள் பிரச்சினை என்பதை தாண்டி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் மனித உரிமையும், வாழும் உரிமையும் ஒன்றுதான். எனவே நாம் நமது நியாயங்களை உரக்கச் சொல்வோம்.

மாணவர்.விசாகன்

இலண்டலிருந்து வந்திருந்த இம்பீரியல் கல்லூரி மாணவரும், பிரிட்டன் தமிழ் மன்றத்தின்(BTF) உறுப்பினருமான விசாகன் பேசும் பொழுது 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போருக்கு பின்னரான நிகழ்வுகளை சுட்டினார், வளர்ச்சி என்ற பெயரில் தமிழ் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு இராணுவம் கையப்படுத்துவதையும், தமிழர் தாயகப் பகுதியில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகத்தத்தில் இராணுவம் நிலைகொண்டு, மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது என்றும், தமிழர் தாயகப்பகுதியில் உள்ள ஊர்களின், தெருக்களை சிங்கள பெயர்களுக்கு மாற்றுவதையும், புதிது புதிதாக சிங்கள குடியேற்றங்களும், புத்த விகாரைகளும் தமிழர் பகுதியில் முளைத்து வருவதைப் பற்றியும் கூறினார், மேலும் அவர் கூறுகையில் இது ஒரு திட்டமிட்ட கலாச்சார படுகொலையே அன்றி வேறல்ல என்றும் குறிப்பிட்டார். பன்னாட்டு சமூகம் சிரியாவில் காட்டிவரும் அக்கறையை இனப்படுகொலை நடந்த ஈழ மண்ணில் ஏன் காட்டவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அதே சமயம், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பெருந்திரளான மாணவர் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது என்றும் கூறினார். இந்த பன்னாட்டு இளைஞர் மாநாடு உலகில் எல்லா பகுதியில் உள்ள தமிழர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தளத்தை அமைத்து கொடுத்துள்ளது என்றும் கூறினார் அவர்.



மாணவர்களின் இவ்வமர்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனும், பேராசிரியர்.மணிவண்ணனும்(கால தாமதத்தால் மாலை அமர்வில் பேசினார்) பங்கேற்றிருந்தனர்.



70-களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சிக்கு பிறகு, மாபெரும் மாணவர் போராட்டமாக,கடந்த‌ மார்ச் மாதத்தில் நடைபெற்ற‌ மாணவர் போராட்டம் அமைந்திருந்தது எனவும்.தற்போதுள்ள அரசியல் களத்தில் நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருக்கிறது என பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.


மாணவர்கள் போராட்டங்கள் தொட‌ர்ச்சியாகவும், துல்லியமான எதிர்கால‌திட்ட‌ங்களுடனும் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். அதே போல‌ மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம் அடுத்து யார் ஆள்வ‌து என்ப‌தை தீர்மானிப்ப‌வையாக‌வும் இருக்க‌ வேண்டும் என்று சென்னை ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் அர‌சிய‌ற் பிறிவு த‌லைவ‌ரும், பேராசிரிய‌ருமான‌ ம‌ணிவ‌ண்ண‌ன் குறிப்பிட்டார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்பது மட்டுமல்ல. இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை நாமனைவரும் புறக்கணிக்க வேண்டும். இலங்கை பொருட்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்கள் முடிவெடுப்போம் என்று தோழர் த.வெள்ளையன் தனது உரையில் தெரிவித்தார்.


Monday, September 9, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது - பன்னாட்டு இளைஞர் மாநாடு




நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் இரத்தம் தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா.மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது.

2009 இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 1.5 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது சிங்கள இனவெறி அரசு; போருக்கு பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்த மயமாக்கி வரும் பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இந்த இனக்கொலை இலங்கை அரசு மீது படிந்து கிடக்கும் அழிக்க முடியாத இரத்தக் கறையைத் துடைப்பதற்கான ஏற்பாடே அங்கு நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாடு.


சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு, மாநாடு கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்.


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும்
வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியுள்ளார்.



தில்லிப் பல்கலை கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி மடல் அனுப்பியுள்ளார். மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET),நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் ‘காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தியும் மடல் அனுப்பியுள்ளார்கள்.

தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழு அவர்களின் பறை இசையோடு துவங்கிய மாநாட்டின் மதிய நிகழ்வும் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிக்கு பிறகு மதிய அமர்வு தொடங்கியது.

மாலை சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் மணிவண்ணன் ,தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர்.தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.


சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரித்து ஈழத் தமிழர்களின் அரசியல் வேட்கையை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசைக் கண்டிக்கும் முகமாகவும், அதைத் தடுத்து நிறுத்த ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ள, உலங்கெங்கும் பரவி வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இம்மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். 2013 மார்ச் மாதம் சுடர்விடத் துவங்கிய மாணவப் போராட்டங்களின் பேரெழுச்சியின் தொடர் நிகழ்வாக இம்மாநாடு அமைந்திருக்கிறது.இந்நிகழ்வோடு அமைந்து விடாமல், இலங்கை புறக்கணிப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டனர்.


பன்னாட்டு இளைஞர் மாநாட்டுத் தீர்மானங்கள் சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த ’இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது’ என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு:

இலங்கை அரசு ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இன்வெறி அரசு ; போருக்குப் பின்னாலும்,தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான் சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து , இசுலாமிய,கிருத்துவ
மத அடையாளங்களை அழித்து பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களவர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இலங்கை அரசின் இந்த இனக்கொலைக் குற்றங்களை மூடி மறைக்கவே ’காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை’ கொழும்புவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இம்மாநாடு கருதுகின்றது. பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்காக நீதியின் பக்கம் நிற்காமல், இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த முன்னின்று ஏற்பாடு செய்து, இந்திய அரசு மீண்டும் ஒரு முறை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது.1971-ம் ஆண்டின் சிங்கப்பூர் சாற்றுரையில் “இனம், நிறம், மதம் , அரசியல் நம்பிக்கைகள் என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி” என்பது காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தையும் இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது.1961 முதல் 1994 வரை, வெள்ளை நிற வெறி பிடித்த தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டதும், பர்வேஷ் முஷாரப் இராணுவ ஆட்சியின் போது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதும், இப்போதும் கூட, இராணுவ ஆட்சியால் ஜனநாயகம் மறுக்கப்படுவதற்காக ஃபிஜி (Fiji) விலக்கிவைக்கப்பட்டிருப்பதுமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


1) 1971 சிங்கப்பூர் சாற்றுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களைக் காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாத இலங்கையில் ,காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்தக்கூடாது என காமன்வெல்த் அமைப்பு நாடுகளையும் குறிப்பாக இந்திய அரசையும் இம்மாநாடு கோருகின்றது.

2) மேலும், ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து , இன்றும் கட்டமைப்புரீதியாகவும் , பண்பாட்டுரீதியாகவும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது

3) ஏழு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களின் சனநாயக கோரிக்கைகளை ஏற்று , இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டினை கொழும்பிலிருந்து வேறொரு காமன்வெல்த் தலை நகரத்திற்கு மாற்றும்படி கேட்க வேண்டும். இடமாற்றம் இல்லையென்றால் கொழும்பில் நடைபெறும்
காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். கனேடிய பிரதமர் இம்மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது. இதைப் போன்று இந்திய பிரதமரும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது“ என இம்மாநாடு கோருகின்றது.

4) 2008-2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் ஆகியன குறித்து ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை ஒன்றை நிறுவ வலியுறுத்தி காமன்வெல்த் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

5) இன்றும் இலங்கையில் இராணுவமயமாக்கலாலும் , சிங்களமயமாக்கலாலும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழர்களைக் காக்கும் பொருட்டு தமிழர்களின் தாயகப்பகுதியான இலங்கைத் தீவின் வடக்கிழக்கில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகத்தினை நிறுவப்பட சர்வதேச நாடுகள் ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

6)கடந்த 60 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசினால் இன அழிப்புக்குள்ளாகப்படும் ஈழத்தமிழர்கள் சனநாயக அடிப்படையில் தங்களுக்கான அரசியல் தீர்வினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் , இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும்
ஈழத்தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

7) இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.மேலும், ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ”இலங்கை மீதான பொருளாதார தடை கோரும் தீர்மானத்தினை தமிழகத்திலும் இந்தியாவிலும் அமல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

இம்மாநாட்டில், உலகத் தமிழர் பேரவை (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) , USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET) ஆகிய அமைப்புகளைச சார்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ள இருந்தனர். பல்வேறு காரணங்களால்
கலந்துகொள்ள இயலவில்லை. இம்மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தியினை அனுப்பி இம்மாநாட்டின் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்துள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு

சேவ் தமிழ்சு இயக்கம்

சென்னை

7- செப்டம்பர் , 2013



Wednesday, September 4, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாடு




தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!
பன்னாட்டு இளைஞர் மாநாடு

செப்டம்பர் 7 | சனிக்கிழமை |காலை 10 மணி |சென்னை

இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும்!


ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்து! என்று கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந்தன. ஆனால் இந்திய அரசோ எப்போதும் போல ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசை பாதுகாத்து தமிழர்களுக்கு அநீதியிழைத்தது.


இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும் இலங்கை அரசை உலக நாடுகள் மத்தியில் பாதுகாக்கவும் இந்திய அரசின் ஆதரவுடன் 23வது ”பொது நலவாய அரசுகளின் தலைவர்கள்” மாநாடு வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17 வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ளது.

தமிழர் தம் இரத்தம் தோய்ந்த அந்த மண்ணில் இம்மாநாடு நடப்பதால் சிங்கள இனவெறிப் பிடித்த இலங்கை அரசு ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் போரில் கொன்றொழித்த குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள துணை செய்யும். மிச்சமுள்ள தமிழர்களின் நிலங்களையெல்லாம் சூறையாடி ‘தமிழன் அந்த தீவில் வாழ்ந்தான் என்ற அடையாளத்தையே அழித்துவிடுவதற்கு வழி வகுக்கும். ஏன் என்றால்,

• மாநாடு நடந்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ‘காமன்வெல்த் தலைமைகளுக்கு’ இனப்படுகொலை குற்றவாளி மகிந்த இராசபக்சே தலைவராவார்

• இந்த மாநாட்டுக்கு வரும் 53 நாடுகளை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளும். அது இலங்கை அரசு புரிந்து வரும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு வேலைக்கு பொருளாதார வலுசேர்க்கும்

• தமிழர் தாயக பகுதி முழுவதும் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை உலக நாடுகள் நியாயப்படுத்தியதாக அமைந்துவிடும்.

• தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்தமயமாக்கி வருவதை ஊக்குவிப்பதாகும்.


இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 54 நாடுகளின் கூட்டமைப்பாகவே இந்த ‘பொது நலவாய தேசங்கள்’ அமைப்பு உள்ளது. மனித உரிமைகளை மீறியதற்காகவும், மக்களாட்சியை நடத்தாமல் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தியதற்காகவும் பாகிசுதான், சிம்பாப்வே, நைசீரியா உள்ளிட்ட நாடுகளை சில காலம் தங்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ள வரலாறும் ’காமன்வெல்த்தில்’ உண்டு. தற்பொழுது கூட 2009 முதல் இன்று வரை பிஜீ தீவை இராணுவ ஆட்சி நடைபெறும் காரணத்தினால் தங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.


கடந்த காலத்தில் வெள்ளை நிறவெறி அரசிற்கு எதிராக நடைபெற்ற தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்க அரசை எல்லா நாடுகளும் புறக்கணித்தன. 1961 முதல் 1994 வரை தென்னாப்பிரிக்கா காமன் வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் பாலசுதீன மக்கள் மீதான இசுரேல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக உலகெங்கும் உள்ள அறிஞர்கள் ’இசுரேலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நிறவெறிக்காக தென்னாப்பிரிக்க அரசை உலக நாடுகள் புறக்கணித்திருக்கும் போது இன வெறிக்காக சிங்கள அரசை ஏன் புறக்கணிக்கக் கூடாது?


• போரின் இறுதி நான்கு மாதங்களில் மட்டும் 40000 அதிகமான மக்களை இலங்கை அரசப்படைகள் கொன்றுள்ளது என்று ஐ.நா நிபுனர் குழு அறிவித்துள்ளது,

• இலங்கை அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் மீது பன்னாட்டு விசாரனை வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவி பிள்ளை அவர்கள் கோரியுள்ளார்

• பொது நலவாய வழக்கறிஞர்கள் கழகத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டை பொது நலவாய நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்


இத்தகைய சூழலிலும் இனவெறிபிடித்த இலங்கை அரசை காமன்வெத்தில் இருந்து வெளியேற்ற கோராமல் தமிழர்களின் இரத்தத்தால் இலங்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வேலையை இந்தியா செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தான் தற்பொதைய காமன்வெல்தின் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் நாம் இலங்கையை புறக்கணிக்க கோருகின்றோம். ஆனால் இந்திய அரசோ, ’ஊரை கொழுத்துபவனுக்கு, ஊர் நடுவில் சிலை வைப்பது போல’ இனப்படுகொலை குற்றவாளி இராசபக்சேவுகு மகுடம் சூட்டி மகிழ்கின்றது. உலக அரங்கில் இலங்கைக்கு பாதுகாப்பும் கெளரவமும் அளித்து தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.


எங்கோ உள்ள கனேடிய அரசோ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவோ இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தனிக்குழு அமைக்கின்றது.


இலங்கையை காமன்வெல்த்திலிருந்தே வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்! காமன்வெல்த் மாநாட்டை தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் நடத்தக் கூடாது!
மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்! இது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. தமிழகத்தின் படித்த இளைஞர்களின் கோரிக்கை. படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கோரிக்கை. பிற மாநிலங்களில் இருக்கும் முன்னணி மாணவத் தலைவர்களின் கோரிக்கை. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழ் இளையோர்களின் கோரிக்கை. இதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு.


இந்திய அரசே!

இலங்கை அரசைப் பாதுகாக்காதே!, தமிழர்களுக்கு துரோகமிழைக்காதே!

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! இலங்கையை புறக்கணி!

மாநாடு ஒருங்கிணைப்பு
தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு – 95000 44452, 95516 29055, 76391 27574, 72000 29093
சேவ் தமிழ்சு இயக்கம் – 9884468039, 99419 06390