Thursday, July 3, 2014

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை....


தருமபுரி -  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு

துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி

12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின்மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம்.

வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை அனுசரிக்க நத்தம் கிராமத்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி மறுக்கவே உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அந்நிகழ்வை அனுசரிக்க முடிவுசெய்து, அனுமதி கோரிய கடிதத்தைக் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சென்ற கிராமப் பொறுப்பாளர் துரை, ஊர்த்தலைவர் சக்தி ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் தர மறுத்து அலைகழித்துள்ளது. உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. பின் 27.06.2014 அன்று மாலை 4.மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நத்தம் கிராமத்திற்கு வந்து அதியமான் சவுண்ட்சிஸ்டம் தொழில் நடத்திவரும் சிவலிங்கத்தை விசாரிக்கிறார். இளவரசன் நினைவுதினத்தன்று மைக்செட் வைக்கக்கூடாது என எழுதி எடுத்துவந்த தாளில் கையெழுத்துப்போட சொல்லி மிரட்டினார். தந்தை சிவலிங்கம் மறுக்கவே மகன் அதியமான் எண்ணை வாங்கிக்கொண்டு சென்றார். அப்பொழுதிலிருந்தே காவல்துறையினரின் வன்முறை நாடகம் ஆரம்பித்துவிட்டது.

முதல் கட்டமாக விசாரணை எனக்கூறி மூன்று பேரை மாலை 4 மணியிலிருந்து தருமபுரி பி1 காவல்நிலையத்தில் விசாரித்தனர். பிறகு சுமார்  இரவு 11 மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நீங்கள் 6 பேர் வாருங்கள், கையெழுத்திட்டுவிட்டு அவர்களை அழைத்துச் செல்ல எஸ்.பி அழைக்கிறார் என்று கூறியிருக்கிறார். பிறகு 10க்கும் மேற்பட்ட நபர்கள்  இரவு 12 மணியளவில் தருமபுரி பி1 காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். சென்ற ஒவ்வொருவரையும் மிரட்டி விசாரித்துள்ளனர். அவற்றில் 3 நபர்களை மட்டும் பிடித்து வைத்து கிட்டதட்ட 4 மணிநேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். துரை, சக்தி, சங்கர், அதியமான், சந்தோஸ், அசோக், ஆகிய ஆறுபேரையும் 2 மணிநேரமாக காவல்நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக் கிறார்கள். இளவரசன் என்ன தியாகியாக? அவனுக்கு இறங்கல் நிகழ்ச்சி வேறா? என்று சொல்லி அடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் துப்பாக்கி வைத்திருந்ததாக, பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள். காவல்துறையினரே எழுதிய வாக்குமூலத்தில் கையெழுத்திடச் சொல்லி தாக்கியிருக்கிறார்கள்.
விடியற்காலை 4 மணியளவில் துரை என்பவரை மட்டும் கைவிலங்கிட்டு நத்தம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். கூடவே 15க்கும் மேற்பட்ட வாகனத்தில் 100க்கணக்கான சிறப்பு படையினர் வந்திருக்கிறார்கள். ஒரு காவலாளி இரு சக்கர வாகனத்தில் துப்பாக்கி வெடிமருந்தை எடுத்துவந்ததை அந்த ஊர் மக்கள் பார்த்திருக்கிறார்கள். பின் துரை என்பவரின் வீட்டில் சோதனையிட்டு வீட்டில் உள்ள கடப்பாரை சம்மட்டியை எடுத்துக்கொண்டு இளவரசன் குழி அருகில் சென்று குழி தோண்டச் சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அவரது 15 வயது மகனை அழைத்துச்சென்று இளவரசன் புதைகுழி அருகில் தோண்டச்சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பின் ஊருக்கு பின்புறம் உள்ள கிணற்று அருகில் சென்று காவல்துறையினர் எடுத்துவந்த துப்பாக்கியை கீழே போட்டு அதனை எடுத்துத்தர சொல்லி துரையை அடித்திருக்கிறார்கள். அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மொத்தம் 28 நபர்களை கைதுசெய்வது காவல்துறையின் நோக்கம். இதனால் பாதிக்கப்பட்ட மூன்று கிராம மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைச்செயல் அன்றோடு முடியவில்லை. 29.06.2014 அன்று விடியற்காலை திருப்பதி என்கிற 23 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை குடுப்பட்டி என்கிற கிராமத்திற்கு தேடிச்சென்று கைதுசெய்துள்ளனர். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதனை அறிந்த ஊர் மக்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்


அந்த மக்களிடம் இனிமேல் யாரையும் கைது செய்யமாட்டோம், ஆனால் இன்னும் மீதம் இருக்கும் நபர்களை சரணடையச் சொல்லுங்கள், இனிமேல் எந்த இளைஞரும் வெளியே செல்லக்கூடாது. இத்தகைய தீய சக்திகளை மக்கள் நீங்கள்தான் பிடித்துக்கொடுக்கனும் என்று பேசியிருக்கிறார். அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அம்மக்கள் சந்தித்தபோது, இன்னும் 5 பேர் சரணடையனும், இல்லாவிட்டால் நாங்கள் ஊரையே கைதுசெய்ய வேண்டியிருக்கும் என்று மக்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

இளவரசன் நினைவுதினத்தை தடுப்பதும், பாதிக்கப்பட்ட அக்கிராம மக்களுக்கு ஆதரவாக எந்த முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் கால்பதித்துவிடக்கூடாது என்பதே அதிகாரவர்க்கத்தின் சாதி ஆதிக்க சக்திகளின் நோக்கமாக இருந்துவருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதைவிடுத்து, அரசிடமும், மாவட்ட நிர்வாக, காவல்துறையிடமும் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறது. அதனை அம்மக்கள் விரும்பாமல் சுயமாக நிற்பதை ஏற்காத நிர்வாகம் மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே இத்தகைய கொடூரமான வன்முறைத் தாக்குதல். பொய் வழக்கு, அரச பயங்கரவாத நாடகம். தொடர்நது மூன்று நாட்களாக தாழ்த்தப்பட்ட கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தி அம்மக்களை அச்சுறுத்திவருவதை மறைத்து அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாக துடி என்கிற இயக்கம் பயிற்சி கொடுத்ததாக பொய்யான தகவலை திட்டமிட்டு  பரப்பிவருகிறது.

30.06.2014 அன்று விடியற்காலை கைது: மேலும் ஐந்து இளைஞர்கள்(சங்கர், சண்முகம், அருள், சசிகுமார், தலைவன்) பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  பெங்களூரில் சென்று பணி புரிந்து வந்த இவர்களை அங்கு பதுங்கி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் தொடரும் இந்த ஒடுக்குமுறையக்கு எதிராக களமிறங்குவதும், குரல் எழுப்புவதும் கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும்  முதன்மைப் பணியாக‌ முன்னிற்கிறது.


இரமணி
மா.லெ மக்கள் விடுதலை

Wednesday, July 2, 2014

மாக்களின் சாதி



பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே
கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே
பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக
பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக
எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம்
சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம்
நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி
நத்தம்காலனியி லதனால் ஓலமும் பழிபாவமும் மீதி
 
-    குட்டிமணி செங்குட்டுவன்


Tuesday, July 1, 2014

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை



ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் :

ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது நகரம் என்னும் கிராமம்.  விஜயவாடாவிற்கு அருகில் இருக்கும் லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் , நகரம் கிராமத்தின் வழியாக செல்கிறது. கெயில் (GAIL - Gas Authority of India Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பைப்லைன்கள் நிலத்துக்கடியில் 4 மீட்டர் ஆழத்திற்குப் புதைக்கப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட இக்குழாய்கள் துருப்பிடித்த நிலையில், இவற்றிலிருந்து எரிவாயு கசிவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், புகாருக்கு உரிய நடவடிக்கையை கெயில் நிர்வாகம் எடுக்கவில்லை.

வெடிப்பு எப்படி நடந்தது ?

இந்நிலையில் கடந்த ஜூன் 27 நள்ளிரவில் அதிகளவு எரிவாயு கசிந்து அந்தப் பகுதி முழுக்க எரிவாயு படர்ந்திருக்கிறது. அடுத்த நாள் ஜூன் 28 அதிகாலை 4.30 மணியளவில் அப்பகுதி டீக்கடைக்காரர் கடையைத் திறந்து அடுப்பைப் பற்றவைத்த போது, கசிந்திருந்த எரிவாயு தீப்பிடித்துப் பரவி எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. இதில், அதே இடத்திலேயே டீக்கடைக்காரர் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடீர் வெடிச்சத்தம் கேட்டு வெளியில் வந்தவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுவரை, 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின. காயமடைந்தவர்கள் 30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 சதவிகித தீக்காயங்களுடன் 5 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எரிவாயு கசிவு பற்றி தொடர்ச்சியாகப் புகார் அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்காத கெயில் நிர்வாகம் மீது ஆத்திரமுற்ற மக்கள் அருகிலிருந்த கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.


கெயில் நிறுவனமே பொறுப்பு :

ஆந்திர அரசு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்திற்கு கெயில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஆந்திர துணை முதல்வர் என்.சின்னராஜப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

துருப்பிடித்த எரிவாய்க்குழாயிலிருந்து  எரிவாயு கசிந்ததை மக்கள் பலமுறை தெரிவித்தும் கெயில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று ஆந்திர நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்னுடு தெரிவித்துள்ளார்.

கெயில் நிறுவனம் மீது ஆந்திர காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ள்து.

இதையொட்டி, கெயில் நிறுவனம் இரண்டு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது.

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


ஆந்திர மக்களின் படிப்பினை :

நகரம் கிராமத்திற்கு அருகிலேயே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையமான ஓ.என்.ஜி.சி (ONGC - Oil & Natural Gas Commission) -க்கு சொந்தமான ’தாதிபாகா’ சுத்திகரிப்பு நிலையமும், எரிவாயு சேகரிப்பு நிலையங்களும் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று  நகரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் கெயில் பைப்லைன்கள் அமைத்து தங்கள் உயிரையும், உடைமைகளையும் நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பதாக அம்மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், வாழ்விடங்களுக்கு அருகிலேயே ஓ.என்.ஜி.சி & கெயில் நிலையங்கள் இருப்பது தங்களுக்கு விடப்பட்ட சாபமாகவும் அம்மக்கள் மிகுந்த கவலையோடு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தருணத்தில், கெயில் எரிவாயுக்குழாய் திட்டத்தைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களின் படிப்பினைகளையும் தீவிரமாகக் கவனத்தில் கொள்வது தமிழக மக்களின் உடனடித் தேவையாகும்.

தமிழகத்தில் கெயில் எரிவாயுக்குழாய் :

கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு எரிவாயு எடுத்துச் செல்வதற்கு தமிழகத்தின் வளமான மேற்கு மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக்குழாய் பதித்து வந்தது.

கேரளாவில் கொச்சியில் தொடங்கும் இந்த எரிவாயுக்குழாய் இணைப்பு தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை செல்கிறது. வழியில் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும் இணைப்பு மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு இருக்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.



விவசாயிகள் போராட்டம் :

எரிவாயுக்குழாய்  இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டம் போடும் கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. விளைநிலங்கள் வழியாகப் போடக்கூடாது, நெடுஞ்சாலை வழியாகப் போடவேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் இரத்துச் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு :

இதையடுத்து, கெயில்  எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூடுதலாக, நெடுஞ்சாலை வழியே எரிவாயுக்குழாய் பதிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை கெயில் நிறுவனம் நிராகரித்துவிட்டது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


மக்கள் போராட்டமே தீர்வு :

கெயில்  திட்டங்கள் பெருமுதலாளிகளின் தனியார் அனல் மின் நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், முதலாளியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய அரசுக் கட்டமைப்பில், கெயில் நிறுவனத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே. 

சென்னை உயர் நீதிமன்றம் கெயில் பைப்லைன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்ததுபோல், உச்ச நீதிமன்றம் கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை, உச்ச நீதிமன்றம் கெயில் நிறுவனத்திற்கு சாதமாகத் தீர்ப்பளித்தால், அசுர வேகத்தில் தமிழகத்தின் விளைநிலங்கள் நாசம் செய்யப்படும் என்பது உறுதி. கண்முன்னே தங்கள் நிலம் வீணாவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் அவலநிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்படுவார்கள். மேலும், உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதமின்றி, சொந்த மண்ணிலேயே திக்கற்றவர்களாக நிற்கும் மிக மோசமான நிலைக்கு விவசாயிகள் மட்டுமல்ல, மேற்கு மாவட்ட மக்களும் தள்ளப்படுவர். இதற்கு ஒரே மாற்று, கெயில் பைப்லைன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் என்பது பரந்துபட்ட மக்கள் போராட்டமாக விரிவடைய வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் இதர திட்டங்களான மீத்தேன் திட்டம், தாதுமணல் கொள்ளை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களுடன் கெயில் எரிவாயுக்குழாய் எதிர்ப்புப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் கிழக்குப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவருவதற்கு, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நல்ல எரிவாயுக்குழாய் கட்டமைப்புகள் கொண்டு வரப்படுவதும் ஒரு காரணம் என்று மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே, வாழ்வாதாரப் போராட்டங்களின் ஒற்றுமை வலிமை என்பது கட்டாயமாகக் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

எரிவாயுக் குழாய் திட்டங்கள் மேற்குலக நாடுகளில் செயல்முறையில் உள்ளன. ஆனால், அவை அவற்றுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டே செயல்படுத்தப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவை. ஆனால், இவை எதுவும் இந்தியத் துணைக்கண்டத்தில் பின்பற்றப்படுவதே இல்லை. மக்கள் அடர்த்தியாக வாழும் கிராமத்தில் எரிவாயுக் குழாய் பதித்தது மட்டுமல்ல, எரிவாயுக் கசிவைப் பற்றி மக்களே பல முறை புகார் தெரிவித்தபின்னும் கெயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது இன்று 16 பேர் உயிரை காவு வாங்கி, ஒரு கிராமத்தையே எரித்திரிக்கின்றது. முறையாக, ஆய்வுப் பணிகளை கெயில் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்திருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு எரிவாயு முக்கியம், அணுமின் நிலையம் முக்கியம் என்று நியாயம் பேசுபவர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களின் இந்த அலட்சியப் போக்கையே. மக்கள் உயிரைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத இந்த ‘வளர்ச்சிக்கு’ ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் மக்களுக்கும் கிஞ்சித்தும் கிடையாது. மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்காத அரசும், அரசு மற்றும் தனியார் பெருநிறுவனங்களுக்கு தங்களின் அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்ளாத வரை
மக்களுக்கு ‘வளர்ச்சி’ உபதேசம் சேய்யும் யோக்கியதை சிறிதும் கிடையாது.

வாழ்விடங்களில் கெயில் எரிவாயுக்குழாய்களை அனுமதித்ததால் சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் இழந்ததோடு மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கை குறித்தும் சந்ததிகளின் நல்வாழ்வு குறித்தும் திக்குத் தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நகரம் பகுதி வாழ் ஆந்திர மக்களின் படிப்பினைகளிலிருந்து நாம் உடனடியாக கற்றுக் கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

தமிழ் நாசர்


Saturday, June 21, 2014

இந்தி... இந்து... இந்தியா!


26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அன்று நாம் யாரும் மோடி இந்தியில் உரையாற்றியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் நீட்சிதான் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி விருப்பத்தின் பேரில், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிடும் இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்தியையே பயன்படுத்த வேண்டும் என்று வந்திருக்கும் உத்தரவு.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்கூட,"பிரதம அமைச்சரான நரேந்திர மோடி வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளில் கூட இந்தியில்தான் உரையாடுகிறார்" என்பதுதான்.

முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர் அழகிரி(தி.மு.க) ஆங்கிலம் தெரியாமல், நாடாளுமன்றத்தில் உரையாட முடியாமல் போன போது, உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலம் தெரியாத தற்குறிகள் என்று எள்ளி நகையாடிய கார்ப்பரேட் ஊடகங்கள், இன்று ஆங்கிலம் தெரியாத மோடி ஹிந்தி பேசுகிறார் என்று பெருமை பேசுகின்றன.


இந்திய அரசின் ஊழியர்கள் தங்கள் அலுவல் மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கான சுற்றறிக்கையை மே மாதம் 27 ஆம் தேதி கொடுத்தது அலுவல் மொழிக்கான துறை. எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதோ சூன் 17ஆம் தேதி தான். ஆனால், இதற்கு முன்னரே என்டிடிவி(NDTV) என்னும் வட இந்திய ஊடகம் 14 சூன் அன்றே, அலுவலக மொழி குறித்த விவாதத்தை நடத்தியது. அப்படியானால், அரசின் உத்தரவை முன்னரே அறிந்து மக்களின் எண்ணங்களை அதற்கேற்றாற் போலக் கட்டமைக்கும் வேலையையே ஊடகங்கள் செய்துள்ளன. இவ்வாறுதான், சனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக செயல்படுகின்றன.

நரேந்திர மோடி மட்டுமல்ல,கட்சி பாகுபாடுகள் இன்றி  இந்திய ஆளும் வர்க்கம்  முழுக்க என்றுமே தேசிய இனங்களின் உரிமைகள் பற்றியும், அவர்களின் பண்பாடு பற்றியும் சிறிதும் சட்டை செய்ததில்லை. அத்தோடு தேசிய இனங்களின் மீது தொடர்ந்து பாகுபாடு காட்டுவதோடு, ஒடுக்கவும் செய்து வருகின்றது.

இந்தித் திணிப்பை எதிர்த்து பல போராட்டங்கள் தமிழகத்திலும், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு காலகட்டம் சார்ந்ததாக அல்லாமல், எப்போதெல்லாம் இந்திய ஒன்றிய அரசு இந்தித் திணிப்புக்கு வழி கோலும் திட்டங்களைக் கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்தே வருகின்றது என்பது வரலாறு. இந்தித் திணிப்பைச் செய்வதில் ஆளும் பாரதிய சனதா மற்றும் காங்கிரசு இடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.

சமூக வலைத்தளங்களில் தானே இந்தியைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள், அதில் என்ன சிக்கல் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். இந்தி பேசும் மக்கள் சமூக வலைத் தளங்களில் தங்கள் இடுகைகளை இந்தியில் பதிவது என்பது வேறு; இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் பதிவது என்பது வேறு. ஏனெனில், இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மக்களுடனான தொடர்பு பாதிக்கப்படும் என்பதோடு, காலப்போக்கில் இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் மட்டும் தான் இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்துவர் என்பது உருவாகும்.

இங்கு இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் என்று குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், வட இந்தியாவில் , பீகாரி, ராஜஸ்தானி, போஜ்புரி, ஜார்க்கண்டி, சத்தீஸ்கரி போன்ற பல பிரதேச  மொழிகளைத்தான் இந்தி என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார்கள். அத்தோடு இந்த மாநிலங்களில் எல்லாம் இந்தியை பாடத்தில் கற்றவர்கள் மட்டும்தான் அரசு சொல்லும் இந்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

"வளர்ச்சிதான் நோக்கம்", "வளர்ச்சியை நோக்கிய பயணம்" என்று மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும், இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறது.
தொடருந்து பயணக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு என்கிற பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த உத்தரவு என்பது நேரடிக் காரணம்.

இந்தியைத் தூக்கிக் கொண்டு நரேந்திர மோடியின் பாரதிய சனதா வருவதற்கான மிக முக்கியமான மறைமுகக் காரணம் என்பது அதன் இந்துத்துவக் கோட்பாட்டோடு தொடர்புடையது. 



உதாரணமாக, இந்தச் செய்தியை வெளியிட்ட "தி எகனாமிக் டைம்ஸ்" நாளிதழ் இதற்கு கொடுத்து இருந்த தலைப்பு " Home Ministry Asks Babus to Use Hindi on Social Networking Sites" என்பதாகும். இத்தலைப்பில் உள்ள "BABUS" என்கிற சொல்லுக்கான பொருள் என்பதை ஆங்கில அகராதியான மெர்ரியம் வெப்ஸ்டெர் (Merriam Webster) இணைய அகராதியில் தேடிய போது கிடைத்த முதல் பொருள், " எ ஹிந்து ஜென்டில்மென்" என்பதாகும்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தியது என்பது தெரியவில்லை. ஆனால், ஆளும் பாரதிய சனதா கட்சியையும், ஆர்.எஸ்.எஸ் -சையும்  வைத்துக் கொண்டு பார்க்கும் போது, "இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்தி பேசும் இந்துக்கள்" என்கிற பொய்யைக் கட்டமைக்கும் இந்துத்துவ சனாதனக் கோட்பாடே இந்த ஆட்சியை இயக்குகிறது என்பது கண்கூடு.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்க, தேசிய இனங்களின் மீது இந்தியை திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத் தன்மையைக் குலைக்கும் செயல்.இதை எதிர்த்து போராட வேண்டியது சனநாயக ஆற்றல்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உருது மொழியை, வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் மீது திணித்ததே,பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் போராடிப் பிரிந்ததற்கான காரணம். இலங்கையில் சிங்கள மொழியை அங்கு வாழும், ஈழத்தமிழ் மக்களின் மீது திணித்த போது, கொல்வின் டி சில்வா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார், " ஒரு மொழி என்றால் இரு நாடு; இரு மொழி என்றால் ஒரு நாடு". இந்த சான்றுகள் வங்கதேசத்திற்கும், இலங்கைக்கும் மட்டுமல்ல; இந்தியாவிற்கும் பொருந்தும்.

இந்திய நாடு என்பது பல மொழி பேசும், பல்வேறு தேசிய இன மக்களை உள்ளடக்கிய ஒன்றியம், இதனை மீறி இந்தியைத் திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை உடைக்கும் என்பதே உண்மை.

கதிரவன்


Friday, June 20, 2014

ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் வேண்டும்! - ஐ பி எம்

கடந்த சூன் 9 ஆம் நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்(IBM) ஒப்பந்தப் பணியாளர்களை(Contract Workers) வேலைக்கு அமர்த்துவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் தகவல் இருந்தது. ஐபிஎம்-மிற்கு அடுத்தபடியாக ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களும் பட்டியிலடப்பட்டு இருந்தன.



ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 15 விழுக்காடு அளவிற்கு ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால்  நிரந்தர ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை  பல்வேறு வழிகளில் காரணங்களைக் காட்டி பணி நீக்கம் செய்யும் என்பதே இதன் பொருள்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், தன்னுடைய நிதிநிலை சரியில்லை என்றும், இலாப அளவு சரிகிறது என்றும் கூறி "வளங்களுக்கான செயல்பாடு" என்கிற பெயரில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஐபிஎம் நிறுவனம்.ஆனால், அதே நிறுவனம்தான் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவதில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.மற்ற நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களை நோக்கி தங்கள் முதலீடுகளை செய்வதற்கான முக்கிய காரணம், குறைந்த செலவில் கொழுத்த இலாபம் மட்டுமே. நிரந்தர ஊழியர்களால் இலாபம் இல்லையா என்றால், அப்படியும் இல்லை. தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களால் அதிகமான இலாபம் என்பதோடு, அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு(Insurance), ஓய்வூதிய வைப்புப் பணம்(Provident Fund) போன்ற எவற்றையும்,நிறுவனம் தன்னுடைய நிதியிலிருந்து செலவழிக்க வேண்டியதில்லை.



தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் எனும் போது ஏனைய நிறுவனத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச  பணி உத்தரவாதமும், சலுகைகளும் அளிக்க வேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறது. இதனால்தான், நிறுவனங்கள் பெரிய முதலீட்டை தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோக்கி செய்கின்றன. அதுவும் அதிகபட்சம் ஆண்டுக்கு நான்கு லட்சம் இந்திய ரூபாய் ஊதியம் பெரும் இளநிலை பணியாளர்களையே பணிக்கு அமர்த்துகின்றன.


அமெரிக்காவில் உள்ள பணியிடங்களை குறைத்துவிட்டு இந்தியாவில் மட்டும் ஒன்றரை லட்சம் தற்காலிக ஒப்பந்தப் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துகிறது ஐபிஎம். இந்திய உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அவுட்சோர்சிங்(OUTSOURCING) செய்யப்படும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்துதான் வருகின்றன. அதனால் அமெரிக்க பணியிடங்கள் குறைவது என்பது நடைமுறைதான். இதில் விவாதிக்கவோ, அச்சப்படவோ எதுவும் இல்லை என்று சிலர் எண்ணலாம். ஆனால், அண்மைக் காலங்களில் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களே (மேற்சொன்னவாறு ஐபிஎம் உட்பட)கூட பணி நீக்கம் செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.


தங்களது இலாபக் கணக்குகளை எப்போதும் ஏறுமுகமாக வைத்திருக்க எண்ணும் நிறுவனங்கள், கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வரும் புது இளைஞர்களைக் கொண்டும், தற்காலிக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் தங்களுடைய நிரந்தர, வேலை உத்தரவாதம் பெற்ற ஊழியர்களைக் வெளியேற்றுகிறது. இதன் மூலம் தொழிலாளர் சுரண்டலை நிகழ்த்தும் நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புரீதியாக ஒருங்கிணைவதையும் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் முரண்களைக் நம்முடைய உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைவதற்குறிய  வாய்ப்பாகக் கருதி, இணைந்து செயல்பட வேண்டும்

கதிரவன்

மேலும் படிக்க‌

http://timesofindia.indiatimes.com/tech/jobs/IBM-spends-heavily-on-contract-staffing-in-India/articleshow/36274381.cms